மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் வரலாற்றில் முதன்முறையாக பக்தர்கள் யாருமில்லாமல் நடந்தது
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் வரலாற்றில் முதன் முறையாக பக்தர்கள் யாருமின்றி நடைபெற்றது.
சென்னை: மதுரை மீனாட்சி அம்மனுக்கும் சொக்கநாதருக்கும் திருக்கல்யாணம் இன்று நடைபெற்றது. இந்த திருக்கல்யாணம் பக்தர்கள் யாருமின்றி நான்கு சிவாச்சாரியார்கள் மட்டுமே நடத்தி வைத்தனர். பக்தர்கள் யாரும் நேரடியாக கோவிலுக்கு சென்று மீனாட்சி திருக்கல்யாணத்தை காண முடியாவிட்டாலும் கோவில் இணையதளத்திலும் யுடுயூப் சேனலில் லைவ் ஆக ஒளிபரப்பியதை பார்த்து தரிசனம் செய்தனர்.
Recommended Video
பக்தர்கள் தங்களது வீட்டிலிருந்தே பார்க்க வசதியாக, இந்து சமய அறநிலையத் துறையின் அதிகாரபூர்வ இணையதளமான www.tnhrce.gov.in, கோயிலின் இணையதளமான www.maduraimeenakshi.org ஆகியவற்றில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. பெண் பக்தர்கள் திருக்கல்யாணத்தை நேரலையில் பார்த்து தாலி மாற்றிக்கொண்டனர்.
மதுரை என்றாலே பலருக்கும் நினைவுக்கு வருவது மதுரை மீனாட்சி அம்மன் கோவில். பிரம்மாண்டமான இந்த கோவிலுக்கு நம் நாட்டினர் மட்டுமல்லாது வெளிநாட்டினரும் வந்து அன்னையை தரிசனம் செய்து செல்கின்றனர். சக்தியின் வடிவமான மீனாட்சி அம்மன் பிறந்து வளர்ந்து ஆட்சி செய்து தெய்வமான இடமாகவும் கருதப்படும் நகர் மதுரை. முக்கிய சக்தி தலமாக விளங்குகிறது மதுரை.
மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் 12 தமிழ் மாதங்களிலும் திருவிழா நடைபெற்றாலும் சித்திரை மாதம் நடைபெறும் பட்டாபிஷேகம், திருக்கல்யாணம் பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டு கொரோனா வைரஸ் லாக் டவுனால் பட்டாபிஷேகம், திருதேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மீனாட்சி திருக்கல்யாணம் மட்டும் திட்டமிட்டபடி இன்று காலை நடைபெற்றது. வரலாற்றில் முதன் முறையாக பக்தர்கள் யாருமின்றி மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெற்றது. நான்கு சிவாச்சாரியர்கள் மட்டுமே இந்த திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தனர்.
தேவாதி தேவர்களும் வரும் திருக்கல்யாணம்
மீனாட்சி, சுந்தரேஸ்வரரின் திருக்கல்யாணத்தை பார்க்க ஆண்டுதோறும் தேவர்கள், மகரிஷிகள், சித்தர்கள் என பலரும் மதுரைக்கு வருவது சிறப்பு. திருப்பரங்குன்றத்தில் இருந்து முருகப்பெருமான் வள்ளி தேவசேனா உடனும் பவளக்கனிவாய் பெருமாளும் வந்து திருக்கல்யாணத்தை பார்க்க வாருவார்கள். இந்த ஆண்டு எந்த கோவிலில் இருந்தும் யாரும் வர முடியாது பக்தர்களும் வர முடியாது. நேரடியாக பார்க்க முடியாத பக்தர்களின் கவலையை போக்கும் வகையில் ஆன்லைனில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. மீனாட்சிக்கும், பிரியாவிடை அம்மனுக்கும் மாலை மாற்றி திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை யுடுயூப்பில் பார்த்து பெண்கள் தாலி மாற்றிக்கொண்டனர்.
மாங்கல்ய சரடு
ஆண்டுதோறும் மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெறும் முகூர்த்த நேரத்தில் பெண் பக்தர்கள் புது தாலி மாற்றிகொள்வார்கள். கோவிலில் மஞ்சள் சரடு கொடுப்பார்கள். இந்த ஆண்டு பெண் பக்தர்கள் தங்களது வீட்டிலிருந்தே பார்க்க வசதியாக, இந்து சமய அறநிலையத் துறையின் அதிகாரபூர்வ இணையதளமான www.tnhrce.gov.in, கோயிலின் இணையதளமான www.maduraimeenakshi.org ஆகியவற்றில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனைப் பார்த்து பெண் பக்தர்கள் திருக்கல்யாணத்தை நேரலையில் பார்த்து தாலி மாற்றிக்கொண்டனர்.
கொரோனா வைரஸ்
கொரோனோ வைரஸ் பாதிப்பினால் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அழகர் மலையிலேயே மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் கொடுக்கும் நிகழ்ச்சி மட்டும் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியும் நேரலையில் ஒளிபரப்பாகிறது. மதுரை வரலாற்றிலேயே முதன்முறையாக பக்தர்கள் யாருமின்றி மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெற்றது.