அழகர்கோவிலில் ஆடித்தேரோட்டம்- விண்ணை எட்டிய கோவிந்தா முழக்கம்
மதுரை கள்ளழகர் கோவிலில் ஆடி மாத தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. வடமதுரையில் உள்ள சவுந்தரராஜபெருமாள் கோவிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
மதுரை: அழகர் கோவில் சுந்தரராஜ பெருமாள் கோவிலில் ஆடி மாத தேரோட்ட விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா முழக்கமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
இதே போல வடமதுரையில் உள்ள சவுந்தரராஜபெருமாள் கோவிலில் ஆடித்திருவிழா நடைபெற்றது. நேற்று சவுந்தரராஜ பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கருதப்படும் தேரோட்டம் இன்று மாலை நடைபெற்றது.
அழகர் கோவிலில் சித்திரை மாதம் நடைபெறும் சித்திரை திருவிழாவிற்குப் பின்னர் வைகாசியில் வசந்த உற்சவம் நடைபெறும். வசந்த மண்டபத்தில் தேவியர்களுடன் கள்ளழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். ஆடி மாதம் பத்து நாட்கள் தேரோட்ட பிரம்மோற்சவம் பிரசித்தி பெற்றது.
கள்ளழகர் கோவில்
ஆடி மாதம் நடைபெறும் தேரோட்ட திருவிழா பிரச்சித்தி பெற்றது. இந்த ஆண்டுக்கான விழா கடந்த 7ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தினமும் மாலையில் அன்னம்,சிம்மம், அனுமார்,கருடன்,சேஷ, யானை, போன்ற வாகனங்களில் கள்ளழகர் என்ற சுந்தரராசப்பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.நேற்று இரவு குதிரை வாகனத்தில் சுவமி புறப்பாடு நடந்தது.
ஆடி பிரம்மோற்சவம்
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடிபிரமோற்சவ தேரோட்ட திருவிழா இன்று நடைபெற்றது. அதிகாலை 5.15 மணிக்கு மேல் 6 மணிக்குள் திருத்தேருக்கு சுவாமி தேவியர்களுடன் எழுந்தருளினார். தொடர்ந்து திருத்தேரின் நான்கு பக்கங்களிலிருந்து கொடியசைத்தவுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு கோவிந்தா, கோவிந்தா என்ற கோஷம் முழங்க காலை 8 மணிக்கு வடம்பிடித்து இழுத்தனர்.
பூப்பல்லக்கில் சுவாமி ஊர்வலம்
கோவில்யானை சுந்தரவள்ளிதாயார் மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் முன்னே செல்ல தேரோட்டம் நடைபெற்றது. பக்தர்கள் எழுப்பிய கோவிந்தா முழக்கம் விண்ணை எட்டியது. இரவில் பூப்பல்லக்கில் சுவாமி எழுந்தருளும் நிகழ்ச்சியும் நாளை தீர்த்தவாரியும் நடக்கிறது. 17ஆம் தேதி உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவுபெறுகிறது.
பெருமாள் வீதி உலா
வடமதுரையில் உள்ள சவுந்தரராஜபெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் ஆடித்திருவிழா நடைபெறும். 13 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழா, இந்த ஆண்டு கடந்த 7ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் சிம்மம், கருடன், யானை, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் பெருமாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரு தினங்களுக்கு முன்பு சவுந்தரராஜ பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கருதப்படும் தேரோட்டம் இன்று நடைபெற்றது.