மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆனி உற்சவம் - சொக்கநாதருக்கு முக்கனிகளால் அபிஷேகம்
தமிழ் மாதமான ஆனியில் மக நட்சத்திரம் முதலாக மூல நட்சத்திரம் வரையில் 10 நாட்கள் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது. சொக்ககநாதருக்கு முக்கனிகளால் அபிஷேகம் நடைபெறுகிறது.
மதுரை: தமிழ் மாதமான ஆனியில் மக நட்சத்திரம் முதலாக மூல நட்சத்திரம் வரையில் 10 நாட்கள் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது. நேற்று தொடங்கிய உற்சவம் வருகிற 27ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஜூன் 28ஆம் தேதி ஆனி மாத பவுர்ணமி அன்று உச்சிகால வேலையில் மூலஸ்தான சொக்கநாதருக்கு மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளால் முப்பழ பூஜை அபிஷேகம் நடைபெறும்.
இது தொடர்பாக கோவில் இணை ஆணையர் நடராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மீனாட்சி-சுந்தரேஸ்வரர் கோவிலின் பழைய திருக் கல்யாண மண்டபத்தில் பாலாபிஷேகம் நடை பெறும். இரவு பஞ்சமூர்த்திகள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வருகிறார்கள். நாளை அதிகாலை பஞ்ச சபை நடராஜர்-சிவகாமி அம்மனுக்கும், பிரதான கால்மாறி ஆடும் நடராஜர்- சிவகாமி அம்மனுக்கும் கோவிலின் 6 கால் பீடத்தில் பாலாபிஷேகம் நடைபெறும்.
இதர 4 சபை நடராஜர்- சிவகாமி அம்மனுக்கு சுவாமி சன்னதி 100 கால் மண்டபத்தில் ஆனி உத்திர திருமஞ்சனம் நடைபெறும். கால பூஜைகள் முடிந்ததும் காலை 7 மணிக்கு மேல் பஞ்ச சபை நடராஜர்-சிவகாமி அம்மன் மாசி வீதிகளில் வலம் வந்து அருள் பாலிப்பார்கள். திருவிழாவில் சுவாமிக்கு அபிஷேகம் செய்யும் திரவிய பொருட்களை கோவில் உள்துறை அலுவலகத்தில் நாளை முதல் பக்தர்கள் வழங்கலாம்.
வருகிற 27ஆம் தேதி அருளாளர் அருணகிரிநாதர் ஜெயந்தி நடைபெறுகிறது. அன்று இரவு 8 மணிக்கு ஆவணி மூல வீதிகளில் அருணகிரிநாதர் புறப்பாடு நடைபெறும். ஜூன் 28ஆம் தேதி ஆனி மாத பவுர்ணமி அன்று உச்சிகால வேலையில் மூலஸ்தான சொக்கநாதருக்கு மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளால் முப்பழ பூஜை அபிஷேகம் நடைபெறும்.
இந்த அபிஷேகத்திற்கு பின்னர் சித்திரை வீதிகளில் சுவாமி, குதிரை வாகனத்தில் பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளுவார். ஆனி ஊஞ்சல் உற்சவ திருநாள் தொடங்கி வருகிற 28-ந் தேதி வரை கோவில் சார்பிலோ, உபயதாரர் சார்பிலோ திருக்கல்யாணம் மற்றும் தங்க ரத உலா ஆகியவை நடத்த இயலாது.
சித்ரா பௌர்ணமியன்று சிவனுக்கு மருக்கொழுந்தால் அபிஷேகம் செய்யப்படுகிறது. வைகாசி பௌர்ணமியன்று சந்தனத்தால் அபிஷேகம் செய்யப்படுகிறது. ஆனி மாதம் முக்கனிகளால் அபிஷேகம் நடைபெறுகிறது. ஆடி மாதம் குரு பூர்ணிமா நாளில் சிவனுக்கு காராம் பசுவின் பாலால் அபிஷேகம் நடைபெறும். ஆவணி அவிட்டம் சிவனுக்கு வெல்லச் சர்க்கரையால் அபிஷேகம் நடைபெறும்.
பூரட்டாதி விரதம் கோதுமையும் வெல்லமும் கலந்த அப்பத்தால் அபிஷேகம். ஐப்பசி மாதம் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. கார்த்திகை மாதம் பசு நெய்யால் அபிஷேகம் நடைபெறுகிறது. திருவாதிரை விரதம் பசு நெய்யாலும் நறுமணப் பன்னீராலும் அபிஷேகம். தை மாதம் சீதைப்பூச விரதம் கரும்புச்சாறால் அபிஷேகம் நடைபெறுகிறது. மாசி மகம் நாளில் பசு நெய்யால் அபிஷேகம் நடைபெறுகிறது. பங்குனி உத்திர விரதம் பால் தேன் தண்ணீர் என பலவிதங்களில் அபிஷேகம் நடைபெறும்.