மதுரை மீனட்சி அம்மன் கோவில் தைப்பூசம் - 27ல் கதிர் அறுப்பு, 28ல் தெப்பத்திருவிழா
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தைப்பூச தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியுள்ளது.
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தைப்பூச தெப்பத்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. தண்ணீர் நிரம்பி கடல் போல காட்சியளிக்கும் வண்டியூர் தெப்பக்குளத்தில் வரும் 28ஆம் தேதி தெப்ப உற்சவம் நடக்கிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா பிரசித்தி பெற்றது. சித்திரை மாதம் தொடங்கி பங்குனி மாதம் வரை 12 மாதங்களும் திருவிழா கோலம் பூண்டிருக்கும். ஆவணி மூலத்திருவிழா, தை மாதம் நடைபெறும் தெப்பத்திருவிழா பிரசித்தி பெற்றது.
இந்த ஆண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெப்பத்திருவிழா நேற்று காலை வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றப்பட்டு சிறப்பு தீபாராதனையுடன் துவங்கியது. சுவாமி, அம்மன், பிரியாவிடையுடன் எழுந்தருளினார். சுவாமி சிம்மாசனம் வாகனங்களில் உலா வந்து, கோயிலுக்குள் குலாலர் மண்டபத்தில் எழுந்தருளினர். மாலையில் அம்மன் சிம்ம வாகனத்திலும், சுவாமி கற்பக விருட்ச வாகனத்திலும் எழுந்தருளினர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக வரும் 22ஆம் தேதி சைவ சமய ஸ்தாபித லீலை நடைபெறுகிறது. 24ஆம் தேதி வலைவீசும் படலம் நடைபெறும் மச்சகந்தி விவாகம் நடைபெறும்.
25ஆம் தேதி சட்டத்தேர் உலாவும், 27ஆம் தேதி சிந்தாமணியில் கதிர் அறுப்புத் திருவிழாவும் நடைபெறும். மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரர் சுவாமியும் கோவிலில் இருந்து புறப்பாடாகி சிந்தாமணியில் உள்ள கதிரறுப்பு மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர்.
தைப்பூச நாளான ஜனவரி 28ஆம் தேதியன்று வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தில் சுந்தரேஸ்வரர், மீனாட்சி அம்மன், பிரியாவிடை அம்மனுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருவார்.