அழகர்கோவிலில் ஆடித்திருவிழா கொடியேற்றம் - மீனாட்சி அம்மனுக்கு ஆடி முளைக்கொட்டு கோலாகலம்
ஆடி மாதம் திருவிழாக்களுக்கு பஞ்சமிருக்காது. மாரியம்மன் கோவில்களில் மட்டுமல்லது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலும், அழகர் கோவில் சுந்தரராஜ பெருமாள் ஆலயங்களிலும் ஆடி மாத திருவிழாக்கள் களைகட்டியுள்ளன. ஆடி
மதுரை: அழகர் கோவில் சுந்தரராஜ பெருமாள் கோவிலில் ஆடி மாத தேரோட்ட திருவிழாவிற்கான கொடியேற்றம் நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது. கோவிலின் தங்கக் கொடிமரம் நாணல் புல், மாவிலை தோரணங்கள், மலர்களால அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஸ்ரீதேவி பூதேவி சமேத கள்ளழகர் மண்டபத்தில் எழுந்தருளிய உடன் கருடன் கொடியேற்றப்பட்டது.
அழகர் கோவிலில் சித்திரை மாதம் நடைபெறும் சித்திரை திருவிழாவிற்குப் பின்னர் வைகாசியில் வசந்த உற்சவம் நடைபெறும். வசந்த மண்டபத்தில் தேவியர்களுடன் கள்ளழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
ஆடி மாதம் நடைபெறும் தேரோட்ட திருவிழா பிரச்சித்தி பெற்றது. இதற்கான கொடியேற்றம் நேற்று நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தங்கக் கொடி மரத்தில் கருடன் கொடி ஏற்றப்பட்டது.
அழகர் கோவிலில் ஆடித்திருவிழா
ஒருவாரம் நடைபெறும் திருவிழா என்பதால் தினமும் இரவு 6 மணிக்கு மேல் கள்ளழகர் தனது தேவியருடன் அன்னம், தங்கப்பல்லக்கு, சிம்மம், அனுமார், கருடன், யானை, குதிரை மற்றும் சேஷ வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். நேற்று இரவு அன்ன வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.
அழகர் கோவில் ஆடித்தேரோட்டம்
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடிதேரோட்ட திருவிழா 15ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக அன்று அதிகாலை 5.15 மணிக்கு மேல் 6 மணிக்குள் கள்ளழகர் என்ற சுந்தரராஜ பெருமாள் தேவியர்களுடன் திருத்தேரில் எழுந்தருளி வலம் வருவார். அன்றிரவு பூப்பல்லக்கு உற்சவமும், மறுநாள் 16ஆம் தேதி தீர்த்தவாரி மற்றும் உற்சவ சாந்தியுடன் ஆடிதிருவிழா நிறைவடையும்.
மதுரை மீனாட்சி அம்மனுக்கு விழா
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை தொடங்கி பங்குனி வரை திருவிழாதான் ஆடி மாதம் அம்மனுக்கு முளைக்கொட்டு உற்சவம் நடைபெறும். இந்த ஆண்டு ஆடி முளைக்கொட்டு திருவிழா கொடியேற்றத்துடன் விமரிசையாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆடிப்பட்டம் தேடி விதை என்ற முன்னோர்களின் வாக்கின்படி, ஆடி மாதம் விதை விதைத்து நாற்று நட்டு விவசாய பணிகளை மேற்கொள்ளவும், தங்கள் நிலங்களில் பயிர் விளைச்சல் அதிகரிக்க வேண்டியும் இறைவனை வழிபாடு செய்வது வழக்கம்.
அம்மன் ஊர்வலம்
கடந்த வாரம் அம்மன் சன்னதியில் முன்பு உள்ள கொடிமரம் முன்பு மீனாட்சி அம்மன் பல்லக்கில் எழுந்தருளினார். அதைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்று கொடியேற்றப்பட்டது. 10 நாட்கள் திருவிழா நடைபெறுவதால் மீனாட்சி அம்மன் பஞ்ச மூர்த்திகளுடன் காலை, மாலை ஆகிய இருவேளை ஆடி வீதியில் சிறப்பு நாதஸ்வர கலைஞர்கள், தவில் வித் வான் சிறப்பு நாதஸ்வர இன்னிசையுடன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி உலா வருவார்கள்.
பூக்களால் அலங்கரிக்கப்பட்ட மீனாட்சி
நாதஸ்வர கலைஞர்கள் கொட்டு மேளம் எனும் சிறப்பு இசை மூலம் அம்மனை வழிபடுவார்கள். நேற்றைய தினம் மீனட்சி அம்மன் அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலித்தார். 7ஆம் நாள் அன்று இரவு திருவீதி உலா முடிந்த பின் உற்சவர் சன்னதியில் அம்மன், சுவாமி மாலை மாற்றும் வைபவமும் நடைபெறும். விவசாயம் வளம் பெறவும், நாடு செழிக்கவும் வகை செய்யும் ஐதீகத்தில் அமைந்ததே ஆடி முளைக்கொட்டு திருவிழாவாகும்.