மாசித்திருவிழா கொடியேற்றம்...மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 48 நாட்கள் விழாக்கோலம்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மாசி உற்சவ விழா கொடியேற்றம் கோலகலமாக நடைபெற்றது. மீனாட்சியம்மன், பிரியாவிடை, சுந்தரேஸ்வரர் சித்திரை வீதிகளில் வலம் வருவதற்கு பதிலாக கோவிலுக்குள் உள்ள ஆடி வீதிகளில் வலம் வருவர்
மதுரை: மீனாட்சியம்மன் கோயிலில் மாசி மாத மண்டல திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்த திருவிழா 48 நாட்கள் நடைபெறும். நோய் தொற்று பரவல் காலமாக இருப்பதால் மீனாட்சியம்மன், பிரியாவிடை, சுந்தரேஸ்வரர் சித்திரை வீதிகளில் வலம் வருவதற்கு பதிலாக கோவிலுக்குள் உள்ள ஆடி வீதிகளில் வலம் வருவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையை அரசாளும் மீனாட்சிக்கும் சொக்கநாதருக்கும் தினம் தினம் திருவிழாதான். சித்திரை முதல் ஆவணி வரை அன்னை மீனாட்சி ஆட்சியும், ஆவணி முதல் சித்திரை வரை சொக்கநாதர் ஆட்சியும் நடைபெறும் என்பது ஐதீகம். சித்திரை திருவிழாவின் போது அம்மனுக்கு பட்டாபிஷேகமும், ஆவணி மூலத்திருவிழாவின் போது சுந்தரேஸ்வரருக்கு பட்டாபிஷேகமும் நடைபெறுகிறது.
ஸ்கூலுக்கு வாங்க.. மகாராஷ்டிராவில் 4 நாட்களில் திறக்கப்படும் பள்ளிகள்.. தமிழ்நாட்டில் என்ன நடக்கும்?
தமிழ் மாதங்கள் சித்திரை தொடங்கி பங்குனி வரை திருவிழா கோலம்தான். அதற்காகவே சித்திரை வீதி, ஆடி வீதி, ஆவணி மூல வீதி, மாசி வீதி என தமிழ் மாதங்களில் பல வீதிகள் உள்ளன.
மாசி மண்டல திருவிழா
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை மாதம் நடைபெறும் திருவிழாவிற்குப் பிறகு நடைபெறும் முக்கியவிழா மாசிமாதம் கொண்டாடப்படும் விழாவாகும். இவ்விழாவிற்கு மதுரையைச் சுற்றியுள்ள ஊர்களில் இருந்து அறுவடை முடிந்த பிறகு கட்டுச்சோறு கட்டிக்கொண்டு மாட்டுவண்டியிலேறி குடும்பம் குடும்பமாக மாசி மாதத் திருவிழாவிற்கு வந்து சுவாமி அம்மனை தரிசனம் செய்து செல்வார்கள். 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் நடைபெறும்.
சுவாமி அம்மன் வீதி உலா
இன்றைய தினம் மாசி மகம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. இதையொட்டி சாமி சன்னதி கொடிமரம் முன்பு மீனாட்சி, சுந்தரேசுவரர் சாமிகள் எழுந்தருளினார்கள். அங்கு சாமிக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாசி உற்சவ திருவிழாவை முன்னிட்டு பிப்பரவரி 8 ம் தேதி முதல் 17ஆம் தேதி வரை 10 நாட்கள் தினமும் காலை, இரவு என இரு வேளையும் மீனாட்சி, சுந்தரேசுவரர் சாமிகள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு சித்திரை வீதிகளை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பர்.
சப்தவர்ண சப்பரத்தில் காட்சி
கொரானா தொற்று மற்றும் ஓமிக்ரான் பரவல் காரணமாக மீனாட்சியம்மன், பிரியாவிடை, சுந்தரேஸ்வரர் சித்திரை வீதிகளில் வலம் வருவதற்கு பதிலாக கோவிலுக்குள் உள்ள ஆடி வீதிகளில் வலம் வருவர் என அறிவிக்கப்பட்டு உள்ளது. விழாவில் சட்டத்தேரில் சப்தவர்ண சப்பரத்தில் சாமியும், அம்மனும் எழுந்தருளி சித்திரை வீதிகளை வலம் வர உள்ளனர்.
கணக்கு வாசித்தல்
தினந்தோறும் சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். பிப்ரவரி 27ஆம் தேதி கணக்கு வாசித்தல் நிகழ்ச்சி நடந்து திருவிழா நிறைவு பெறுகிறது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை மீனாட்சி அம்மன் கோவில் தக்கார் கருமுத்துக்கண்ணன், கோவில் இணை கமிஷனர் செல்லத்துரை மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.