புரட்டாசி பிரம்மோற்சவம் கோலாகலம் - தல்லாகுளம் பெருமாள் கோவில் கொடியேற்றம்
அழகர் மலையில் இருந்து இறங்கி வந்து மதுரை வைகையில் இறங்க வரும் கள்ளழகர் தல்லாக்குளம் பெருமாள் கோவிலில் ஓய்வெடுப்பார் பிரசித்தி பெற்ற தல்லாகுளம் பெருமாள் கோவிலில் புரட்டாசி பிரம்மோற்சவ விழா தொடங்கியுள்ள
மதுரை: மதுரையில் சித்திரை திருவிழா பிரசித்தி பெற்றது. மாதந்தோறும் விழாக்கள் நடைபெற்றாலும் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள்கோவில் கோவிலில் புரட்டாசி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவ விழா முக்கியமானது. இந்த ஆண்டிற்கான விழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. அலங்கரிக்கப்பட்ட கொடி மரத்தில் கருடக்கொடி ஏற்றப்பட்டதை அனைவரும் கண்டு தரிசனம் செய்தனர். நேற்றிரவு அன்ன வாகனத்தில் சுவாமி வலம் வந்தார்.
இன்றைய தினம் கிருஷ்ண அவதாரத்திலும் 2ஆம் தேதி ராமர் அவதாரத்திலும் சுவாமி வலம் வருகிறார். 3ஆம் தேதி கஜேந்திர மோட்சமும் அன்று இரவு கருடவாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடைபெறும். நான்காம் தேதி காலையில் ராஜாங்கசேவையும், இரவு சேஷவாகனத்தில் பெருமாள் புறப்பாடும் நடைபெறும். 5ஆம் தேதி காலையில் காளிங்கநர்த்தனமும், அன்று இரவு மோகன அவதாரமும், தொடர்ந்து யானை வாகனத்தில் சாமி புறப்பாடு நடைபெறுகிறது.
6ஆம் தேதி காலை சேஷசயனமும், இரவு புஷ்பசப்பரமும், 7ஆம் தேதி வெண்ணைதாழியும், இரவு குதிரை வாகன புறப்பாடும், 8ஆம் தேதி திருத்தேரோட்டமும், இரவு பூப்பல்லக்கு நிகழ்ச்சியும், 9ஆம் தேதி பூச்சப்பரமும் நடைபெறுகிறது. 10ஆம் தேதி காலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் நடைபெறும். 11ஆம் தேதி உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவுபெறுகிறது.