சனிப்பிரதோஷ நாளில் சிவனோடு நந்தியை தரிசித்தால் என்ன பலன் கிடைக்கும் தெரியுமா
சனிப்பிரதோஷத்தில் நந்தியை வணங்கி, வழிபட்டால் சனி பகவானால் உண்டாகும் சகல துன்பங்களும் விலகும். சனி மகா பிரதோஷ நாளில் ஈசனை வழிபாடு செய்தால் 120 வருடம் பிரதோஷம் சென்ற பலன் கிடைக்கும்.
மதுரை: சனிப்பிரதோஷத்தில் நந்தியை வணங்கி, வழிபட்டால் சனி பகவானால் உண்டாகும் சகல துன்பங்களும் விலகும். ஏழரை சனி, அஸ்தம சனி நடப்பவர்கள் சனியினால் வரும் துன்பத்தை போக்க கண்டிப்பாக சனி பிரதோஷத்திற்கு செல்ல வேண்டும். கிரக தோசத்தால் ஏற்படும் தீமை குறையும். பஞ்சமா பாவங்களும் நீங்கி சிவன் அருள் கிடைக்கும். சனி மகாபிரதோஷ நாளில் நாம் இருக்கும் விரதம் ஆயிரம் சாதாரண தினப் பிரதோஷப்பலனைத் தரும்.
சாதாரண பிரதோஷ நேரத்தில் சோம சூக்த பிரதட்சணம் செய்வதால், ஒரு வருடத்துக்கு ஈசனை வழிபாடு செய்த பலனும், சனிப் பிரதோஷ நேரத்தில் ஈசனை வழிபாடு செய்தால் 120 வருடம் பிரதோஷம் சென்ற பலன் கிடைக்கும்.
ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை 13ஆம் நாள் திரயோதசி திதி தினங்களில் மாலை 4.30 முதல் ஆறு மணி வரை உள்ள காலம் பிரதோஷ காலம் எனப்படுகிறது. அன்றுதான் ஈசன் விஷம் உண்ட மயக்கம் தெளிந்து அகிலத்தை காத்ததாக புராணங்கள் கூறுகின்றன. நித்தியப் பிரதோஷம், பட்சப் பிரதோஷம், பிரளயப் பிரதோஷம் என இருபது வகை பிரதோஷங்கள் உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. திரயோதசி நாள் முழுக்க உண்ணாமல் இருந்து நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை கூறியபடி பிரதோஷ காலத்தில் சிவபெருமானோடு தேவியோடும், முருகனோடும் சோமாஸ்கந்த மூர்த்தியாகத் தரிசித்து கண்ணீர் மல்க வழிபாட்டால் சகல விதமான நன்மைகளும் வந்து சேரும்.
பெருமாளுக்கு உகந்த நாள் ஏகாதசி, சிவனுக்கான நாள் திரயோதசி, சிவராத்திரி. அமாவாசை,பவுர்13வது நாள் இந்த நாளே பிரதோஷ வழிபாடாக சிவ ஆலயங்களில் நடைபெறுகிறது. அன்று விரதம் இருப்பதால், நமது உடல் நலம் பெறுகிறது. இதன் மூலம் வாயுக்கோளாறு, வயிற்றுக்கோளாறுகள் நீங்கும். உடல் நிலை, மனநிலை சீராகும். மன அழுத்தம் குறையும்.
உத்தம மகா பிரதோஷம்
சிவபெருமான் விஷம் அருந்திய தினம் சனிக்கிழமையாகும். அந்தக் கிழமையில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பானதாகும். சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களின் வளர்பிறையில், சனிக்கிழமையில் திரயோதசி திதியன்று வரும் பிரதோஷம் உத்தம மகா பிரதோஷம் என்று சொல்லப்படுகிறது. இது மிகவும் சிறப்பும், கீர்த்தியும் பெற்ற தினமாகும். சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் தேய்பிறை சனிக்கிழமை பிரதோஷம் வருவது மகா சனி பிரதோஷமாகும். மகா சிவராத்திரி காலத்தில் மாசி மாதத்தில் சனிப்பிரதோஷம் வருவது மகா சனி பிரதோஷம்.
புராண கதை
பிருகு முனிவரின் குமாராரான பார்க்கவ முனிவர் காசியில் ஒரு லிங்கத்தை பூஜை செய்தும், தவம் இருந்தும் சிவபெருமானிடம் இறந்தவர்களை உயிர் பெற்று எழச் செய்யும் "மிருதசஞ்சீவினி" எனும் மந்திரத்தை பெற்றார். அந்த நேரத்தில் மேலுலகில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் தீராத போர் துவங்கி நடந்து கொண்டிருந்தது. சுக்கிராச்சாரியாரை குருவாக கொண்ட அசுரர்கள், தேவர்களுக்கு துன்பம் செய்தனர். ஆனாலும் தேவர்களது பலத்தால் அசுரர்கள் பலர் இறந்தனர். இறந்த அசுரர்களை எல்லாம் உயிர்பித்தார் அசுரகுரு சுக்கிராச்சார்யார். இதனால் தேவர்கள் பக்கம் படை குறையவே இந்த மந்திரம் நமக்கு தெரியாமல் போனதை எண்ணி வேதனையுற்றனர்.
சுக்கிராச்சாரியார்
பிருகு முனிவரின் மைந்தர் பார்க்கவ முனிவர். காசியில் சிவ பூஜை செய்து அதன் பயனாக இறந்தவர்களை உயிர்பிக்கச் செய்யும் மிருதசஞ்சீவனி என்ற மந்திரத்தை வரமாக பெற்றார். நவகிரக பதவியும் பெற்றார். இவரே அசுரர்களின் குருவாகவும் ஆனார். தேவாசுரப்போர் தொடங்கிய உடன் போரில் பல அசுரர்கள் கொல்லப்பட்டனர். உயிரிழந்த அசுரர்களை உயிர்பித்தார் சுக்கிராச்சாரியார்.
குருவின் மகன்
தேவர்களின் குரு பிரகஸ்பதியின் மகன் கசன் சுக்கிராச்சாரியாரிடம் மாணவராக சேர்ந்தார். மிருதசஞ்சீவனி மந்திரத்தை கற்க வேண்டும் என்பதே அவருக்கு கொடுக்கப்பட்ட உத்தரவு. மந்திரம் கற்க வந்த கசன் சுக்கிரனின் மகள் தேவயானி மீது காதல் கொண்டார். இதை அறிந்த அசுரர்கள் கசனை கொன்று சாம்பலாக்கி அதை சுக்கிராச்சாரியாரின் உணவில் கலந்து விட்டனர். அதை சாப்பிட்டு விட்டார். தனது காதலனை உயிரோடு கொண்டு வருமாறு வேண்டினாள் தேவயானி. மகள் சொன்னதை கேட்டு கசனுக்கு மந்திரத்தை உபதேசித்தார் சுக்கிரன். வயிற்றை பிளந்து கொண்டு வந்து அதே மந்திரத்தால் சுக்கிராச்சாரியரை உயிர்பித்தான்.
விஷம் உண்ட சிவன்
சுக்கிராச்சாரியாரின் மிருதசஞ்சீவனி மந்திரத்திற்கு இணையாக அமிர்தம் பெற வேண்டும் என்று அசுரர்களை கூட்டணி சேர்த்துக்கொண்டு பாற்கடலை கடைந்தனர். மந்தாரமலையை மத்தாகவும், வாசுகி பாம்பினை கயிறாகக் கொண்டு பாற்கடலைக் கடைந்தனர். அழுத்தம் தாங்காத வாசுகி விஷத்தை கக்கியது. தேவர்களை காக்க சிவபெருமான் அந்த விஷத்தை சாப்பிட, அதைப்பார்த்த பார்வதி, சிவனின் கழுத்தை பிடித்தார். அந்த விஷமானது கழுத்திலேயே நின்றது. திருநீலகண்டமானார் சிவன்.
பிரதோஷ காலம்
தேவர்களையும் உலகத்தையும் காப்பதற்காக ஈசன் ஆலகால விஷத்தை உண்ட நேரமே பிரதோஷகாலமாகும். ஏகாதசி நாளில் ஆலகாலம் உண்ட ஈசன் துவாதசி முழுவதும் மயக்க நிலையில் இருந்தார். பின்னர் திரயோதசி நாளில் பகலும் இரவும் சந்திக்கும் சந்தியா வேளையில் எழுந்து, சூலத்தை சுழற்றி டமருகத்தை ஒலித்து சந்தியா நிருத்தம் எனும் நாட்டியம் ஆடினார். பிரளய தாண்டவம் எனப்படும் இந்த நடனம் ஆக்கல், அழித்தல், காத்தல், மறைத்தல், அருளல் எனும் ஐவகை தொழிலையும் ஊக்கப்படுத்தும் விதமாக ஈசனால் ஆடப்பட்டது என்கிறார்கள்.
புண்ணியம் தரும் சனி மகா பிரதோஷம்
திரயோதசி நாளில் பிரதோஷ நேரத்தன்று நந்தியின் கொம்புகளுக்கிடையே சிவனை தரிசிப்பது சிறப்பு தரும். சனிப்பிரதோஷ நேரத்தில் எல்லா தேவர்களும் ஈசனின் நாட்டியத்தை காண ஆலயம் வருவார்கள் என்பது நம்பிக்கை. சனிக்கிழமை பிரதோஷ காலங்களில் ஈசனை தரிசிப்பதால், சகல பாவங்களும் விலகி, புண்ணியம் சேரும்.
நந்தியின் காதில் வேண்டுதல்
சிவபெருமானுக்கு பாதுகாவலனாக இருப்பதுதான் நந்தி. சிவனை பார்க்க செல்பவர்கள் அதன் காவலனான நந்தியிடம் தங்கள் குறைகளையும் வேண்டுதல்களையும் சொன்னால் நந்திபெருமான் சிவனிடம் கொண்டு சேர்ப்பார் என்பது நம்பிக்கை. அந்த வேண்டுதல் நிறைவேறவும் செய்யும். நந்தியின் காதில் சொல்லும் நடைமுறை என்பது எல்லா கோவில்களிலும் இருக்கிறது.
முக்தி கொடுக்கும் பிரதோஷ விரதம்
பிரதோஷ வேளையில் நந்தியம்பெருமானுக்கு அருகம்புல் அல்லது வில்வ மாலை சார்த்தி நெய் விளக்கு ஏற்றி பச்சரிசி வெல்லம் வைத்து பூஜை செய்யலாம். சனிப்பிரதோஷ நாளில் மாலையில் சிவன் நந்தியை தரிசிக்கும் வரை உணவு தவிர்த்து முழு விரதம் இருக்க வேண்டும். விரதம் இருந்தால் சகல செளபாக்கியங்களும் கிடைப்பதோடு, இந்திரனுக்கு சமமான புகழும் செல்வாக்கும் கிடைக்கும் அதோடு சனிப்பிரதோஷ நாளன்று செய்யப்படும் அனைத்து தானங்களினாலும் அளவற்ற பலன்களைக் கொடுக்கும் என்பது நம்பிக்கை. பிறப்பே இல்லாத முக்தியை கொடுக்கும் என்றெல்லாம் புராணங்கள் தெரிவிக்கின்றன.