மகாசிவராத்திரி நாளில் எந்த ராசிக்காரர்கள் எந்த சிவன் கோவிலுக்கு போகணும் தெரியுமா
மகாசிவராத்திரி கொண்டாடப்படும் இந்த நேரத்தில் சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் எந்த ராசிக்காரர்கள் எந்த தலத்தை வணங்கலாம் என்று பார்க்கலாம்.
சென்னை: நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களையும் தன்னுள்ளே கொண்டவன் இறைவன் சிவபெருமான். சிவபெருமானின் பஞ்சபூத தலங்களாக பெருமைக்குரிய தலங்களாக போற்றப்படும் ஆலயங்கள் தமிழகத்திலும் ஆந்திராவிலும் உள்ளது. திருவண்ணாமலை, சிதம்பரம், காஞ்சிபுரம், திருவானைக்காவல் ஆகிய ஆலயங்கள் தமிழ்நாட்டிலும் ஆகாய தலமான ஸ்ரீகாளஹஸ்தி ஆந்திராவிலும் உள்ளது. மகாசிவராத்திரி கொண்டாடப்படும் இந்த நேரத்தில் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்கள் எந்த சிவ ஆலயத்திற்கு சென்று வணங்க வேண்டும் என்று பார்க்கலாம்.
நாடுமுழுவதும் ஏராளமான சிவன் கோவில்கள் இருக்கின்றன. தேவார பாடல்பெற்ற சிவஸ்தலங்களாக போற்றப்படும் 274 ஆலயங்களில், 264 ஆலயங்கள் தமிழ்நாட்டில் தான் இருக்கின்றன. இந்த ஆலயங்கள் ஒவ்வொன்றும் தனிச்சிறப்பும், தொன்மையும், பெருமையும் கொண்டவை. இவற்றில் பல கோவில்கள் சுயம்பு லிங்கங்களை மூலவராக கொண்டுள்ளன. அனைத்து சிவ ஆலயங்களையும் தரிசிக்க முடியாவிட்டாலும் சிவபெருமானின் பஞ்சபூத தலங்களை தரிசித்தால் நன்மை கிடைக்கும்.
பஞ்சபூத தலங்களுக்குச் செல்லும்போது, சிதம்பரத்தில் தொடங்கி காளகஸ்தி, திருவண்ணாமலை, திருவானைக்காவல், காஞ்சிபுரம் சென்று யாத்திரையை நிறைவு செய்ய வேண்டும். ஆனால் அவ்வாறு போக முடியாதவர்கள் முதலில் அருகில் உள்ள பஞ்சபூத சிவ தலத்தில் இருந்து ஆரம்பிக்கலாம்.
மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஆறு ஹோமங்கள்
நீர்
திருச்சி அருகே திருவானைக்காவில் இருக்கும் ஜம்புகேஸ்வரர் ஆலயமே நீர்தலம். கடகம் , விருச்சிகம், மீனம் ஆகிய மூன்று ராசிக்காரர்களும் பஞ்சபூதங்களுள் நீரின் ஆதிக்கத்துக்கு உட்பட்டவர்கள். இந்த ராசிக்காரர்கள் திருவானைக்காவல் தலத்திற்கு சென்று ஜம்புகேஸ்வரரை வணங்கலாம்.
ஜம்பு லிங்கம் அன்னையால் செய்யப்பட்டது. ஒரு முறை பூமிக்கு வந்த அம்பிகை சிவனை வழிபட நினைத்து காவேரியில் சிறிது நீர் எடுத்து லிங்கம் வடித்தார். அம்பிகை கையில் நீர் லிங்கமாக மாறியது. நீரால் செய்யப்பட்டதால் லிங்கம் ஜம்புகேஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.
நிலம்
காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரரே பஞ்சபூதத் தலங்களுள் நிலத்துக்கு உரிய தலம். ரிஷபம், கன்னி, மகரம் ஆகிய ராசிக்காரர்கள் பஞ்சபூதங்களுள் நிலத்தின் ஆதிக்கத்துக்கு உட்பட்டவர்கள். பஞ்சலிங்கேஸ்வரர் ஆலயத்துள் கோயில் கொண்டுள்ள பிருதிவி லிங்கத்தை வழிபடுவதன் மூலம் ஏகாம்பரேஸ்வரரை வழிபட்ட பலன் கிட்டும். திருவாரூர் சிவ ஆலயமும் நிலத்திற்கு உரிய தலமாக போற்றப்படுகிறது.
காற்று
ஸ்ரீகாளகஸ்தியில் உள்ள காளஸ்தீஸ்வரர் ஆலயம் வாயு தலமாக போற்றப்படுகிறது. இங்கு எழுந்தருளியுள்ள சிவன், காளஹஸ்தீஸ்வரர் என்றும், அம்மன் ஞானபிரசுனாம்பிகை என்றும் அழைக்கப்படுகின்றனர். மிதுனம், துலாம், கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் வாயுவின் ஆதிக்கத்துக்கு உட்பட்டவர்கள். இங்குள்ள சிவனை வழிபடுவதால் புண்ணியம் கிடைக்கும். சிலந்தி, பாம்பு, யானை ஆகிய உயிர்கள் சிவலிங்கத்தை பூஜித்து முக்தி பெற்றதால் அவற்றின் பெயரால் திருக்காளத்தி எனப் பெயர் பெற்றது. இங்கு லிங்கமாக காட்சியளிக்கும் சிவனின் திருமேனியை கூர்ந்து கவனித்தால், கீழ் பாகத்தில் யானை தந்தங்கள், நடுவில் பாம்பு, பின்புறம் சிலந்தி ஆகியவற்றை காணலாம்.
நெருப்பு தலம்
ராசிகளுள் மேஷம், சிம்மம், தனுசு ஆகியன அக்னியின் ஆதிக்கத்துக்குட்பட்ட ராசிகள். எனவே இந்த ராசிக்காரர்கள் அக்னி ரூபமான இறைவனை வழிபடுதல் சிறப்பு. திருவண்ணாமலையையே அக்னித் தலமாக வழிபடுவோம். சிவன் கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில், திருமால், பிரம்மன் இருவருக்கும் அக்னி வடிவமாக காட்சி தந்தார். இந்நாளிலேயே தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது. தீப தரிசனம் பிறவிப் பிணியை அறுக்க வல்லது என்பது ஐதீகம்.
ஆகாயம்
தங்களுடைய ராசி, நட்சத்திரம் தெரியாதவர்களும் ஆகாய தலமான சிதம்பரத்திற்கு சென்று வழிபடலாம் பஞ்சபூதங்களை வழிபட்ட பலனைப் பெறலாம் என்பது ஐதிகம். பஞ்சபூதங்களில் ஒன்று எனக்கூறப்படும் ஆகாசம் வடிவில், சிவன் இருக்கிறார் என்பதை குறிப்பால் உணர்த்தும் வகையில் சிதம்பர ரகசியம்அமைக்கப்பட்டுள்ளது.