மகா சிவராத்திரி நாளில் நான்கு கால பூஜைகளை கண்விழித்து தரிசித்தால் என்ன கிடைக்கும் தெரியுமா
மாசி மாத தேய்பிறைச் சதுர்த்தசியில் கடைபிடிப்பது மகா சிவராத்திரி எனப்படும். மகாசிவராத்திரி அன்று இரவில் உலகிலுள்ள எல்லா லிங்கங்களிலும் சிவன் தோன்றுகிறார் என்பது ஐதீகம். மகா சிவராத்திரி தினத்தில் நான்கு
மதுரை: மாசி மாத தேய்பிறைச் சதுர்த்தசியில் கடைபிடிப்பது மகா சிவராத்திரி எனப்படும். இந்த ஆண்டு மகா சிவராத்திரி பிப்ரவரி 21ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. சதுர்த்தசி திதி பிப்ரவரி 21ஆம் தேதி மாலை 5.20 மணிக்கு தொடங்கி பிப்ரவரி 22ஆம் தேதி இரவு 7.02 மணிக்கு முடிவடைகிறது. பிரளய காலத்தில் உலகம் முற்றிலுமாக அழியாமல் இருக்க இந்த அகிலத்தின் அன்னையான அகிலாண்டேஸ்வரி, ஈசனை மகா சிவராத்திரி அன்று நான்கு ஜாமத்திலும் பூஜை செய்தார்.
முருகப்பெருமான், சூரியன், இந்திரன், யமன், அக்கினி, குபேரர் போன்றவர்கள் மகாசிவராத்திரி பூஜை செய்து பலன் அடைந்தார்கள். அதுபோல பிரம்ம தேவன், மகாசிவராத்திரி அன்று விரதம் இருந்து சிவபெருமானை வழிபாடு செய்ததால் சரஸ்வதி தேவி பிரம்ம தேவனுக்கு மனைவியாக அமைந்தார். ஸ்ரீமகாவிஷ்ணு இந்த சிவராத்திரி விரதத்தை கடைபிடித்ததால் சக்ராயுதத்தை பெற்றார். அத்துடன் ஸ்ரீமகாலஷ்மியை மனைவியாக அமையப் பெற்றார் என்கின்றன புராணங்கள்.
மகாசிவராத்திரி அன்று இரவில் உலகிலுள்ள எல்லா லிங்கங்களிலும் சிவன் தோன்றுகிறார் என்பது ஐதீகம். மகா சிவராத்திரி தினத்தில் நான்கு கால பூஜைகள் அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெறும், இதில் பங்கேற்று இறைவனை வழிபட வேண்டும்.
மகாசிவராத்திரி 2020: ஸ்ரீகாளஹஸ்தி கண்ணப்பர்கோவிலில் கொடியேற்றம் கோலாகலம்
நான்கு ஜாமம் பூஜை
மகாசிவராத்திரி தினத்தன்று சிவாலயம் சென்று பஞ்சாட்சரம் அல்லது சிவ நாமத்தை ஜெபிக்க வேண்டும். மகாசிவராத்திரி தினத்தில் இரவு முழுவதும் உறங்காமல் விழித்திருந்து சிவாலயத்தில் நடைபெறும் நான்கு ஜாமப் பூஜை வழிபாடுகளின் போது லிங்க தரிசனம் செய்தல் மற்றொரு முக்கிய விதியாகும். சிவபூஜை விதி தவறாமல் நான்கு ஜாமத்தும் ஜாமத்திற்கு ஒரு முறையாகப் பூஜை செய்ய வேண்டும்.
சிவ புண்ணியம்
அறிந்தோ அறியாமலோ கூட ஒருவன் மகாசிவராத்திரி அன்று விழித்திருந்தால் புண்ணியம் கிடைக்கும். மகாசிவராத்திரியன்று சிவன் கோயில்களிலோ மற்றைய கோவில்களிலோ நான்கு ஜாமமும் நடைபெறும் பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டும் தான தருமங்கள் செய்தும் சிவபெருமானின் புகழ் பாடியும் சிவபுண்ணியம் அடையலாம்.
ரிக்வேத பாராயணம்
முதல் ஜாமம் மாலை 6.15 மணி முதல் இரவு 9.25 மணி வரை உள்ளது. அந்த காலத்தில் சிவனுக்கு பஞ்ச கவ்ய அபிஷேகம், சந்தனப் பூச்சு, வில்வம், தாமரை அலங்காரம், அர்ச்சனை, பச்சைப் பயறுப் பொங்கல் நிவேதனம், ரிக்வேத பாராயணம் செய்ய வேண்டும்.
யஜூர் வேத பாராயணம்
இரண்டாம் ஜாமம் 21ஆம் தேதி இரவு 9.25 மணி முதல் நள்ளிரவு 12.34 வரை உள்ளது. இந்த நேரத்தில் சர்க்கரை, பால், தயிர், நெய் கலந்த ரவை, பஞ்சாமிர்த அபிஷேகம், பச்சைக்கற்பூரம், பன்னீர் சேர்த்து அரைத்துச் சாத்துதல், துளசி அலங்காரம், வில்வம் அர்ச்சனை செய்ய வேண்டும். பாயசம் நிவேதனம், யஜூர் வேத பாராயணம் செய்தல் வேண்டும்.
சாமவேத பாராயணம்
மூன்றாம் ஜாமம் பிப்ரவரி 22 நள்ளிரவு 12.34 முதல் அதிகாலை 3.44 வரை உள்ளது. இந்த நேரத்தில் தேன் அபிஷேகம், பச்சைக் கற்பூரம் சாத்துதல் வேண்டும். மல்லிகை அலங்காரம், வில்வம் அர்ச்சனை செய்து எள் அன்னம் நிவேதனம், சாமவேத பாராயணம் செய்து வழிபடுவார்கள்.
அதர்வண வேத பாராயணம்
நான்காம் ஜாமம் பிப்ரவரி 22 அதிகாலை 3.44 முதல் காலை 6.54 மணிவரை உள்ளது. இந்த நேரத்தில் சிவனுக்கு கருப்பஞ்சாறு அபிஷேகம், நந்தியா வட்டை மலர் சாத்துதல், அல்லி, நீலோற்பவம், நந்தியா வர்த்தம் அலங்காரம், அர்ச்சனை, சுத்தான்னம் நிவேதனம், அதர்வண வேத பாராயணம் செய்வார்கள்.
சிவதரிசனம் எப்போது
சிவராத்திரி அன்று இரவு முழுவதும் கண் விழித்து ஸ்வாமியை தரிசித்து வழிபாடு செய்ய முடியாவிட்டால் கூட, லிங்கோற்பவ காலமாகிய இரவு 11.30 மணி முதல் 1மணி வரை உள்ள காலத்திலாவது சிவதரிசனம் செய்து வழிபட வேண்டும். ஏனெனில் இந்த நேரத்தில் தான் சிவன் ஜோதிலிங்கமாக தோன்றிய நேரமாக கருதப்படுகிறது.