மகா சிவராத்திரி 2020: ஸ்ரீகாளஹஸ்தி கண்ணப்பர்கோவிலில் கொடியேற்றம் கோலாகலம்
பஞ்ச பூத தலங்களில் காற்று தலமாக விளங்கும் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் மகா சிவராத்திரி விழா நேற்று பக்த கண்ணப்பர் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
சென்னை: மகா சிவராத்திரி விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படும் விழா. இந்த மகாசிவராத்திரி வரும் 21ஆம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் காற்று தலமாக போற்றப்படும் ஸ்ரீகாளஹஸ்தி காளத்தீஸ்வரர் கோவிலில் கோலாகலமாக தொடங்கியுள்ளது. மகா சிவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்கியதை அறிவிக்கும் விதமாக பக்தகண்ணப்பர் மலைமீது கொடியேற்றப்பட்டது இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
அமிர்தத்துக்காக பாற்கடலை தேவர்கள் மற்றும் அசுரர்களால் கடையப்பட்டபோது, ஆலகாலம் என்ற விஷம் உருவானது. விஷத்தால் மக்களுக்கு பாதிப்பு உருவாகும் என்பதால் மக்களையும் தேவர்களையும் காக்க சிவபெருமான் ஆலகால விஷத்தை குடித்து அதனை தன்னுடைய கழுத்தில் வைத்துக் கொண்டார். இதனால் திருநீலகண்டம் என்ற பெயரையும் பெற்றுள்ளார்.
அந்த விஷத்தின் தீவிரத்தால் சிவன் ஆழ்ந்த தூக்கத்துக்குள்ளானார். ஆனால், தூங்கினால் விஷத்தின் வீரியம் அதிகமாகும் என்று யோசித்த தேவர்கள், அசுரர்கள், காந்தவர்கள், முனிவர்கள் இரவில் கண் விழித்து உற்சவங்கள் நடத்தினர். அதையே மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழாவாக நாடு முழுவதும் பக்தர்கள் கொண்டாடுகின்றனர்.
பக்த கண்ணப்பர் கொடியேற்றம்
ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் ராகு கேது பரிகார தலமாகவும் விளங்குகிறது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழாவில் முதலில் பக்தனுக்கு முன்னுரிமை வழங்கும் விதத்தில் ஒவ்வொரு ஆண்டும் முதலில் கோயில் அருகே மலைமீது அருள்பாலிக்கும் பக்த கண்ணப்பர் கோயிலில் கொடியேற்றுவது ஐதீகம். பின்னர் மறுநாள், சிவன் கோயில் முன் உள்ள கொடி மரத்தில் பிரம்மோற்சவ கொடி ஏற்றப்படும்.
இந்த ஆண்டு நேற்று மாலை கண்ணப்பர் ஆலயத்தில் கொடியேற்றப்பட்டது.
ஸ்ரீகாளஹஸ்தி
சிலந்தி, பாம்பு, யானை ஆகிய மூன்றும் இத்தலத்தில் சிவலிங்கத்தைப் பூசித்து முக்தி பெற்றதால் அவற்றின் பெயரால் இவ்வூர் ஸ்ரீகாளத்தி எனவும் ஸ்ரீகாளஹஸ்தி எனவும் அழைக்கப்படுகிறது. இங்கு எழுந்தருளியுள்ள சிவன், காளஹஸ்தீஸ்வரர் என்றும், அம்மன் ஞானபிரசுனாம்பிகை என்றும் அழைக்கப்படுகின்றனர்.
யானை பாம்பு சிலந்தி
இங்கு லிங்கமாக காட்சியளிக்கும் சிவனின் திரு மேனியைக் கூர்ந்து கவனித்தால், கீழ்ப் பாகத்தில் யானை தந்தங்கள், நடுவில் பாம்பு, பின்புறம் சிலந்தி ஆகியவற்றை காணலாம். இக்கோவிலில் ராகு, கேது கிரக தோஷம், சர்ப்ப தோஷ நிவர்த்திக்கான பரிகார பூசைகள் செய்யப்படுவதால் நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கில் பக்தர்கள் நாள்தோறும் வந்து செல்கின்றனர்.
கண்ணப்பர் பக்தி
கண்ணப்பநாயனார் இத்தல இறைவன்மீது கொண்ட பேரன்பினால் தனது கண்களை தானம் செய்து முக்தி பெற்றார். கண்தானத்தில் உலகின் முன்னோடியாக கண்ணப்பர் திகழக் காரணமான தலம் என்னும் சிறப்புடையது. அவரது பக்தியை போற்றும் வகையில் இங்கு ஆண்டு தோறும் பிரம்மோற்சவ விழா நடைபெறும் போது மலைமீது முதலில் கொடியேற்றப்படுகிறது.
சிவ சிவ முழக்கம்
நேற்று மாலையில் உற்சவர்களான ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானபிரசுனாம்பிகை தாயார், பக்த கண்ணப்பர் ஆகியோரை பல்லக்கில் வைத்தும், பிரம்மோற்சவ விழா கொடியை மேள தாளம் முழங்க, வாண வேடிக்கைகளுடன் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் அலங்கார மண்டபத்தில் இருந்து பக்த கண்ணப்பர் கோவிலான கைலாசகிரி மலைக்குப் பக்தர்கள், ஊழியர்கள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. இதனைத் தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது. பின்னர் தீப, தூப நைவேத்தியம் நடைபெற்றது.
மாட வீதிகளில் ஊர்வலம்
மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழாவில் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் நடக்கும் உற்சவத்துக்குத் தனிச் சிறப்பு உண்டு. அங்கு, நடக்கும் பிரம்மோற்சவத்தில் ஒவ்வொரு நாளும் ஒரு தனிச் சிறப்பு உண்டு. அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் சுவாமி அம்மன் எழுந்தருளி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். கொடியேற்றத்தை முன்னிட்டு காலை 10 மணியளவில் வெள்ளி அம்பாரி வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானபிரசுனாம்பிகை தாயார் கோவிலின் நான்கு மாட வீதிகளில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
பக்தர்கள் தரிசனம்
இன்றைய தினம் கோவில் வளாகத்தில் உள்ள தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது. இதனையொட்டி தங்கக்கொடி மரம் அருகில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானபிரசுனாம்பிகை தாயார், விநாயகர், சுப்பிரமணியர், பக்த கண்ணப்பர், சண்டிகேஸ்வரர் ஆகிய உற்சவ மூர்த்திகளை நான்கு பக்கங்களிலும் எழுந்தருளுகின்றனர். மேள தாளம், மங்கள வாத்தியங்கள், வேத மந்திரங்கள் முழங்க கோவிலின் புதிய தங்கக்கொடிமரத்தில் நந்தி, திரிசூலம், உடுக்கை ஆகிய உருவப்படம் வரையப்பட்ட மஞ்சள் நிறத்திலான கொடியை அர்ச்சகர்கள் ஏற்றுவார்கள். பின்னர் தீப, தூப நைவேத்தியம் நடைபெறும்.
திருக்கல்யாணம் தேரோட்டம்
தினமும் காலை, இரவு ஆகிய இரு வேளைகளிலும் உற்சவ மூர்த்திகள் பல்வேறு வாகனங்களின் வீதிவுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பர். இதில் முக்கிய நாட்களாக வரும் 21ஆம் தேதி மகாசிவராத்திரியை முன்னிட்டு காலை நந்தி வாகன சேவையும், இரவு சிம்ம வாகன சேவையும் நடைபெறும். இதனை தொடர்ந்து நள்ளிரவு லிங்கோத்பவ தரிசன நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. 22ஆம் தேதி காலையில் திருத்தேரோட்டமும் இரவு 8 மணிக்கு தெப்ப உற்சவமும் நடைபெறும். 23ஆம் தேதி அதிகாலை 3.30 மணியளவில் சுவாமி அம்பாள் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து கயிலாய கிரிவலமும் மாலையில் பல்லக்கு சேவையும் நடைபெறும்.