மகா சிவராத்திரியில் குல தெய்வத்தை கும்பிட்டால் என்ன பலன்கள் கிடைக்கும்
மகா சிவராத்திரி நாளிலும் மாசி மாத அமாவாசை நாளிலும் சிவ ஆலயம் சென்று வணங்குவதைப் போல குல தெய்வத்தையும் கும்பிடுகின்றனர். பங்காளிகள், சொந்த பந்தங்கள் புடைசூழ குலம் காக்கும் தெய்வத்தை கும்பிட்டு வம்சம்
சென்னை: மகா சிவராத்திரி பண்டிகை கொண்டாடப்படும் இந்த நேரத்தில் சிவ ஆலயங்களில் மட்டுமல்லாது குல தெய்வ கோவில்களிலும் மக்கள் குவிந்து வருகின்றனர். மகா சிவராத்திரி தினத்தை மாசி கொடை பண்டிகையாக குல தெய்வ கோவில்களில் கொண்டாடுகின்றனர். குல தெய்வம் நம் குலத்தினை காக்கின்ற தெய்வம். குல தெய்வ வழிபாடானது தொன்று தொட்டு தமிழ்நாட்டில் முறையாக பெரும்பாலோரால் பின்பற்றப்படுகிறது. குலதெய்வத்தை மறந்து விட்டால் குல தெய்வத்தின் அருள் கிடைக்காமல் போய்விடும். மகா சிவராத்திரி நாளில் குல தெய்வ வழிபாடு பற்றி அறிந்து கொள்வோம்.
பெரும்பாலான குல தெய்வ கோவில்களில் ராஜகோபுரங்கள் இருக்காது. காட்டிற்குள் கம்பீரமாக குடியிருப்பார்கள் குலதெய்வங்கள். அமாவாசை, பவுர்ணமி நாட்களிலும் மாசி மாத மகாசிவராத்திரியிலும், பங்குனி உத்திரம் தினத்திலும் குல தெய்வத்தை கையெடுத்து கும்பிடுகின்றனர்.
காட்டுக்குள் குடியிருக்கும் குல தெய்வத்தைக் காண மாசி மாதம் பங்காளிகள் கூடுவது ஒரு மகிழ்ச்சியான அனுபவம்தான். அண்ணன் தம்பிகள் ஆளுக்கு ஒரு திசையில் இருந்தாலும் மாசி கொடைக்கு கூடி குல தெய்வத்தை கும்பிடுவது அவசியம் என்பதை வருங்கால தலைமுறைக்கும் உணர்த்துவதாக இது போன்ற பண்டிகைகளை நடைபெறுகின்றன.
குல தெய்வம் கூடவே வரும்
குல தெய்வ வழிபாடு பற்றிய குறிப்பு சிலப்பதிகாரத்தில் காணப்படுகிறது. எந்த ஒரு நல்ல காரியத்திற்கும் முதல் வழிபாடு குல தெய்வத்திற்குத்தான் நடைபெறும். அதன் பிறகு தான் மற்ற நிகழ்ச்சிகளை தொடங்கவேண்டும். நாம் கூப்பிடாமல் உதவி செய்யும் தெய்வம் நம் குல தெய்வம் என்கின்ற கருத்தும் மக்களிடம் நிலவுகிறது. மனம் உருகி கையெடுத்து கும்பிட்டு நாம் கூப்பிட்டால் குல தெய்வம் நம் கூடவே வரும்.
நோய்கள் தீரும்
நம் முன்னோர்கள் பரம்பரை பரம்பரையாக வழிபட்டு வந்த தெய்வத்தை ஆண்டுக்கு ஒருமுறையாவது கும்பிட்டு வந்தால் நோய்கள் தீரும், கஷ்டங்கள் காணாமல் போகும். வருடத்திற்கு ஒருமுறையாவது குல தெய்வ கோவிலுக்குச் சென்று வழிபாடு மேற்கொள்கின்றனர். குல தெய்வத்தை யார் ஒருவர் விடாமல் தொடர்ந்து வழிபாடு செய்கிறார்களோ, அவர்கள் வேண்டும் வரம் எல்லாம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
குல தெய்வ வழிபாடு
பெரும்பாலான குல தெய்வ வழிபாடுகள் சூலம், பீடம், மரம், கல், பெட்டி போன்ற அடையாளக் குறியீடுகளைக் கொண்டே மேற்கொள்ளப்படுகின்றன. சிலருக்கு மட்டுமே உருவ வழிபாடு செய்ய முடிகிறது. குல தெய்வ வழிபாட்டில் கன்னிமார் தெய்வங்களுக்கு நடத்தப்படும் வழிபாடும் ஒரு வகையாகும்.
நம் வீட்டில் நல்ல காரியம் செய்யும் முன்பாக நம் குல தெய்வமான உப்பட்டம்மன், காமாட்சியம்மன், சவுண்டம்மன், கருப்பசாமி, இசக்கி, பேச்சியம்மன் என குலம் காக்க நிற்கும் தெய்வங்களை மனதால் நினைத்து கும்பிட்டு விட்டு சென்றால் நாம் நினைத்த காரியம் வெற்றிகரமாக நிறைவேறும்.
பங்காளிகள் ஒற்றுமை
ஒவ்வொரு குடுபத்தினருக்கும் ஒரு தெய்வம் குல தெய்வமாக இருக்கும். படிப்பு, தொழில் காரணமாக பல ஊர்களில் வசிக்கும் உறவினர்களை ஒன்று சேர்த்து குழுவாக வழிபடும் விழாவாக குல தெய்வ வழிபாடு உள்ளது. மாசி மாதத்தில் குடும்பத்தினர் அனைவரும் தங்கள் பகையை மறந்து ஒற்றுமையாக குலதெய்வத்தை வணங்குவார்கள்.
குல தெய்வத்தின் அருள்
சில சமுதாய மக்கள், தங்கள் குடும்பம் அல்லது ஊர் தொடர்பாக முடிவு எடுக்கும் முன்பு, பூக்கட்டிப் போட்டு பார்த்தல் மூலம் முடிவு எடுப்பது வழக்கம். சுப நிகழ்ச்சிகளின் போது குல தெய்வத்தை நினைத்து காணிக்கையை ஒரு மஞ்சள் துணியில் கட்டி வைத்து குலதெய்வக் கோயிலுக்கு செல்லும் போது செலுத்திவிடுகின்றனர். ஒரு குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்றாக இணைந்து குலதெய்வத்தை வணங்குவதன் மூலமே குலதெய்வத்தின் அருளை முழுமையாகப் பெற முடியும்.
குல தெய்வ கோபம்
ஜாதகத்தில் குறைகள் இல்லாத நிலையில் ஒரு மனிதனுக்கு பாதிப்புகளும் பிரச்னைகளும் இருக்கின்றது என்றால் அதற்கு குலதெய்வத்தினை வழிபடாத குற்றம் காரணமாக இருக்கும். குடும்பத்தில் தொடர்ந்து அசுப நிகழ்ச்சிகள் நடந்தாலோ, திருமணம் தடை பட்டாலோ, புத்திய பாக்கியம் இல்லாமல் போனாலோ ஏதேனும் தீமைகள் ஏற்பட்டாலோ குல தெய்வம் கடும் கோபத்தில் இருப்பதாக கருதும் நம்பிக்கை இன்றும் உள்ளது. குலதெய்வத்தை மறந்து விட்டாலோ வணங்க தவிர்த்துவிட்டாலோ குலதெய்வத்தின் சாபம் நிச்சயம் ஏற்படும். இந்த சாபம் முடிந்து நமது சந்ததியினருக்கு இது தொடராமல் இருக்க சாப நிவர்த்தி செய்வது அவசியம்.
குல தெய்வ சாபம் நீங்குவது எப்படி
ஒருவரின் குடும்பம் ஆல்போல் தழைக்க குல தெய்வ வழிபாடு அவசியம். பெண்களுக்கு பிறந்த வீட்டு குலதெய்வம், புகுந்த வீட்டு குலதெய்வம் என இரண்டு உண்டு. திருமணத்திற்குப் பின்னரும் பிறந்த வீட்டு குல தெய்வத்தை வணங்கினால் புகுந்த வீட்டில் ஏற்படும் சிரமங்களை சமாளிக்கலாம். குல தெய்வத்தின் அருள் கிடைக்க வேண்டும் என்றால் நம் முன்னோர்கள் எந்த முறையில் குலதெய்வத்தை வணங்கினார்களோ அதே முறைப்படி நாம் வணங்கவேண்டும். நமது தவறுக்காக குலதெய்வத்திடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டால் சாபம் தீரும்.