மகாசிவராத்திரி நாளில் ஓட்டமாக ஓடி 12 சிவாலயங்களை தரிசிக்கும் குமரி மாவட்ட பக்தர்கள்
மகாசிவராத்தியை முன்னிட்டு சிவாலய ஓட்டத்தில் பங்கு கொள்ளும் அனைத்து பக்தர்களும், மகா சிவராத்திரிக்கு முன்பு வரும் தேய்பிறை ஏகாதசிக்கு ஒரு வாரம் முன்பிருந்தே தங்களுடைய விரதத்தை தொடங்கிவிடுகின்றனர். விர
கன்னியாகுமரி: மகா சிவராத்திரி தினத்தில் கன்னியகுமரி மாவட்டத்திலுள்ள பக்தர்கள் பலரும் ஒன்று சேர்ந்து, 12 சிவன் கோவில்களை ஓட்டமும் நடையுமாக சென்று தரிசிக்கின்றனர். கிட்டத்தட்ட மாரத்தான் ஓட்டம் போல் ஆண்டுதோறும் நடைபெறுகிறது. சிவாலய ஓட்டத்தில் பங்கு கொள்ளும் அனைத்து பக்தர்களும், மகா சிவராத்திரிக்கு முன்பு வரும் தேய்பிறை ஏகாதசிக்கு ஒரு வாரம் முன்பிருந்தே தங்களுடைய விரதத்தை தொடங்கிவிடுகின்றனர். விரத நாட்களில் காலை முதல் மாலை வரை இளநீர் மற்றும் நுங்கு ஆகியவற்றையும், இரவு வேளையில் துளசி இலையும், துளசி தீர்த்தமும் அருந்துகின்றனர். சபரிமலைக்கு செல்பவர்களுக்கு எப்படி ஒரு குருசாமி வழிநடத்திச் செல்வாரோ, அது போலவே, சிவாலய ஓட்டத்திலும் ஒரு குருசாமி வழி நடத்திச் செல்கிறார்.
எம்பெருமான் ஈசனுக்கு உகந்த மந்திரம் சிவாயநம என்னும் மந்திரமாகும். இந்த மந்திரத்தை சொல்லும் அனைவருக்கும் எமபயம் நீங்கும். அதிலும் சிவாயநம என்னும் திருமந்திரத்தை சிவபெருமானகுக்கு உகந்த மஹாசிவராத்திரி நாளில் விரதமிருந்து நாள் முழுவதும் உச்சரித்துக்கொண்டே இருந்தால், அவன் இப்பிறவியில் செய்த பாவங்களோடு முற்பிறவியில் செய்த பாவங்கள் அனைத்தும் அவனை விட்டகலும் என்பது ஐதீகம்.
அதனால் தான், மகாசிவராத்திரி நாளில் இந்துக்கள் அனைவரும் நாள் முழுவதும் விரதமிருந்து எம்பெருமானின் திருநாமத்தையே உச்சரித்துக்கொண்டு இருப்பார்கள். நாடு முழுவதும் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் சிவாயநம என்னும் மந்திரமே ஒலித்துக்கொண்டிருக்கும். அது நாள் வரையில் கோவிலுக்கு போகாதவர்கள் கூட இந்த ஒரு நாளாவது சிவன் கோவிலுக்கு சென்று அங்கு நடக்கும் ஜாம பூஜைகளில் கலந்துகொண்டு இறைவனை தரிசிப்பார்கள்.
சிவாயநம மந்திரம்
நாடு முழுவதும் சிவன் கோவில்களில் 'சிவாயநம' என்னும் மந்திரம் ஒலித்தாலும், தமிழ்நாட்டின் தென்கோடி மாவட்டமான கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 12 சிவன் கோவில்களில் மட்டும் கோவிந்தா... கோபாலா என்னும் ஸ்ரீநாராயணனின் திருநாமம் ஒலித்துக்கொண்டிருக்கும். இதற்கு காரணம், சிவனும், நாராயணனும் வேறு வேறல்ல,,, இரண்டும் ஒன்று தான் என்பதை மக்களுக்கு உணர்த்தவே.
கோவிந்தா.... கோபாலா கோஷம்
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள, அனைத்து சிவன் கோவில்களிலும் வழக்கமாக சிவபெருமானுக்கு செய்யும் பூஜையுடன், கூடவே ஸ்ரீமன் நாராயணனின் திருநாமமான கோவிந்தா... கோபாலா என்னும் மந்திரமும் ஒலிக்கும். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சிவன் கோவில்களில் மட்டுமே இந்த வித்தியாசமான திருநாமம் ஒலிக்கிறது.
குமரி மாவட்ட மாரத்தன் ஓட்டம்
கன்னியகுமரி மாவட்டத்திலுள்ள பக்தர்கள் பலரும் மகா சிவராத்திரி தினத்தில் ஒன்று சேர்ந்து, 12 சிவன் கோவில்களை நோக்கி கோவிந்தா... கோபாலா என்று ஸ்ரீமன் நாராயணனின் திருநாமத்தை உச்சரித்தவாறே, ஓட்டமும் நடையுமாக ஓடிச்சென்று 12 சிவாலயங்களையும் தரிசித்து வருவது இந்த சிவாலய ஓட்டத்தின் சிறப்பம்சமாகும். கிட்டத்தட்ட மாரத்தான் ஓட்டம் போல் இந்த நிகழ்ச்சி நடைபெறுவதால் இந்த ஓட்டத்தை சிவாலய ஓட்டம் என்று அழைக்கின்றனர். இந்தியாவில் குமரி மாவட்டத்தில் மட்டுமே சிவாலய ஓட்டம் என்னும் வழிபாடு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சாலிய ஓட்டம்
சிவாலய ஓட்டம் என்று பெரும்பாலானவர்கள் அழைத்தாலும், அங்குள்ள பாமர மக்களால் சாலிய ஓட்டம் என்றே அழைக்கப்படுகிறது. இந்த ஓட்டத்தில் ஆண்களும் பெண்களும் பெருமளவில் பங்கு கொண்டு ஓடுகிறார்கள். இதில் குமாரி மாவட்ட பக்தர்கள் மட்டுமல்லாது, அண்டை மாநிலமான கேரளாவிலிருந்தும் பக்தர்கள் கலந்துகொண்டு ஓடுகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் இந்த ஓட்டத்தில் பங்கேற்கும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. ஓட முடியாத பக்தர்கள் இரு சக்கர வாகனங்களிலும், கார் வேன் போன்ற வாகனங்களிலும் சென்று 12 சிவாலயங்களையும் தரிசிக்கிறார்கள்.
சிவாலய ஓட்ட விரதம்
சிவாலய ஓட்டத்தில் பங்கு கொள்ளும் அனைத்து பக்தர்களும், மகா சிவராத்திரிக்கு முன்பு வரும் தேய்பிறை ஏகாதசிக்கு ஒரு வாரம் முன்பிருந்தே தங்களுடைய விரதத்தை தொடங்கிவிடுகின்றனர். விரத நாட்களில் காலை முதல் மாலை வரை இளநீர் மற்றும் நுங்கு ஆகியவற்றையும், இரவு வேளையில் துளசி இலையும், துளசி தீர்த்தமும் அருந்துகின்றனர். சபரிமலைக்கு செல்பவர்களுக்கு எப்படி ஒரு குருசாமி வழிநடத்திச் செல்வாரோ, அது போலவே, சிவாலய ஓட்டத்திலும் ஒரு குருசாமி வழி நடத்திச் செல்கிறார்.
பனை ஓலை விசிறி, சுறுக்கு பை
சிவாலய ஓட்டத்தில் பங்கேற்கும் பக்தர்கள் அனைவரும் சிவப்பு அல்லது மஞ்சள் நிற ஆடையை அணிந்துகொண்டு, கையில் பனை ஓலையால் ஆன சிறு விசிறியையும், பணம் வைக்க ஒரு சிறு சுறுக்கு பை ஒன்றையும் இடுப்பில் கட்டியவாறு ஓடுகின்றனர். சிவாலய ஓட்டம் ஓடும் அனைவரும் ஒவ்வொரு சிவன் கோவிலையும் தரிசித்த பின்பு அருகிலுள்ள குளம், ஆறு என அருகிலுள்ள நீர் நிலைகளில் குளிக்க வேண்டும் என்பது ஐதீகம். ஓட்டத்தின் போது தென்னங்கீற்றுகளால் உருவாக்கப்பட்ட தீப்பந்தத்தையும், சிறிய டார்ச் லைட்டையும் உடன் கொண்டு செல்கிறார்கள்.
12 சிவாலயங்கள்
சிவாலய ஓட்டத்தை, கன்னியாகுமரி மாவட்டத்தின் சூலபாணி என்னும் இடத்திலுள்ள திருமலை தேவர் என்ற கோவிலில் இருந்து தொடங்கி, அப்படியே திக்குறிச்சி சிவன் கோவில், பொன்மனை திம்பிலேஸ்வரர் சிவன் கோவில், பன்னிப்பாகம் கிராதமூர்த்தி சிவன் கோவில், பத்மநாபபுரம் நீலகண்டர் கோவில், மேலாங்கோடு பெரிய காலகாலர் கோவில், திருவிடைக்கோடு கொடம்பீஸ்வரமுடையார் கோவில், திருவிதாங்கோடு பிரதிபாணி கோவில், திருப்பன்றிக்கோடு பக்தவச்சலர் கோவில், நட்டாலம் அர்த்த நாரீஸ்வரர் கோவில் என 12 கோவில்களையும் ஓட்டமும் நடையுமாக ஓடிச்சென்று தரிசிக்கிறார்கள்.
சிவாலய ஓட்டத்தில் பங்கேற்கும் அனைத்து பக்தர்களுக்கும் வழிநெடுகிலும், களைப்பு தெரியாமல் இருக்க பானகம், மோர், கஞ்சி போன்ற நீராகாரங்களை மக்கள் வழங்கிவருவதுண்டு. ஓட்டத்தில் கடைசி கோவிலான நட்டாலம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் மட்டுமே சந்தனம் கொடுக்கின்றனர். மற்ற 11 கோவில்களில் வழக்கமாக திருநீறு வழங்கப்படுகிறது. 12 கோவில்களையும் தரிசித்த பின்பு, திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபடவேண்டும் என்று வழக்கமும் காலங்காலமாக இருந்து வருகிறது.