மகாளய அமாவாசை 2020: செப்டம்பர் 17ல் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் நீராட, தர்ப்பணம் செய்ய தடை
கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மகாளய அமாவாசை தினத்தில் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் நீராட பக்தர்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
ரமேஸ்வரம்: புரட்டாசி மகாளய அமாவாசை தினத்தன்று ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் நீராடவும், கடற்கரையில் அமர்ந்து திதி தர்ப்பண பூஜை செய்யவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் சாமி தரிசனம் செய்ய எந்த தடையும் விதிக்கப்படவில்லை என்று மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.
சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தாலும் கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அக்னி தீர்த்த கடற்கரையில் அமர்ந்து திதி தர்ப்பணம் செய்யவும், கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடவும் தொடர்ந்து தடை இருந்து வருகிறது.
இந்த நிலையில் வருகிற 17ஆம் தேதி புரட்டாசி மகாளய அமாவாசை வருகிறது. தை, ஆடி அமாவாசை நாட்களை போன்று புரட்டாசி மாதம் வரும் மகாளய அமாவாசை அன்றும் ராமேஸ்வரம் கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம்.
ராமேஸ்வரம் வானில்.. சூரியனைச் சுற்றி ஒரு கருப்பு வட்டம்.. அது என்ன.. வாய் பிளந்த மக்கள்!
அதனால் வருகிற 17ஆம் தேதி அன்று ராமேஸ்வரத்திற்கு ஏராளமான பக்தர்கள் வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதுபோல் அன்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அக்னி தீர்த்த கடலில் நீராட பக்தர்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் வெளியிட்டுள்ள அறிக்கையில் வருகிற 17-ந் தேதி புரட்டாசி மகாளய அமாவாசை நாளாகும். அன்று வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் நீராடவும், கடற்கரையில் அமர்ந்து திதி தர்ப்பண பூஜை செய்யவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. கோவிலுக்குள் பக்தர்கள் தரிசனத்திற்கு வழக்கம் போல் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரிசனத்திற்கு வரக்கூடிய பக்தர்கள் அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்றி கோவிலுக்குள் ஒருவர் பின் ஒருவராக சென்று வரவேண்டும். பக்தர்களின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் அன்று ராமேஸ்வரம் கோவிலில் கூடுதலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.