மகாளய பட்சம் இன்றுமுதல் ஆரம்பம் - வீடு தேடி வரும் முன்னோர்களை வரவேற்போம்
முன்னோர்களுக்கு உகந்த மகாளய பட்ச காலம் இன்று முதல் ஆரம்பமாகிறது.
மதுரை: முன்னோர்கள் நம் வீடு தேடி வந்து நமக்கு ஆசி வழங்கும் தினமே மகாளய பட்ச காலமாகும். மகிமை வாய்ந்த மகாளய பட்ச காலம் இன்று முதல் ஆரம்பமாகிறது. மகாளயம் என்றால் பெரிய கூட்டம் என்று பொருள். மறைந்த நம் முன்னோர் மொத்தமாக நம் இல்லத்தில் கூடும் நேரமே மகாளய பட்சம். நம்முடைய வீட்டிற்கு வரும் முன்னோர்களை வரவேற்று நம் உணவு உள்ளிட்டவைகளை அளிப்பதன் மூலம் அவர்களின் ஆசி நமக்கு கிடைக்கும்.
பட்சம் என்றால் பதினைந்து நாட்கள். மறைந்த நம் முன்னோர் பித்ரு லோகத்திலிருந்து இந்த பதினைந்து நாட்கள் நம்மோடு தங்கும் காலமே மகாளய பட்சம் ஆகும். பொதுவாக ஒவ்வொரு அமாவாசையன்றும் விடும் தர்ப்பணம் எமதர்மராஜனின் கைகளுக்கு சென்று அவர் நம் முன்னோர்களை அழைத்து அவர்களிடம் ஒப்படைப்பாராம். மகாளய பட்சம் ஆரம்பிக்கும் நாளன்று நம் முன்னோர்களை அவரவர்கள் விருப்பமான இடத்திற்கு சென்று
வரும்படி அனுமதிப்பாராம்.
நம் முன்னோர்களுக்கு விருப்பமான இடம் நம் இல்லம் தானே, எனவே அவர்கள் மஹாளய பட்சமான பதினைந்து நாட்களும் முன்னோர்கள் நம் இல்லத்தில் வந்திருப்பதாக நம்பிக்கை. இந்த பதினைந்து நாட்களும் நம் வசிப்பிடத்தை சுத்தமாக வைத்திருந்து நம் முன்னோர்களை வணங்கி வந்தால் நம் வாழ்க்கை விருத்தியடைவது உறுதி. மகாளய பட்சம் நாட்களில் திதி கொடுப்பதன் மூலம் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
மகாளய பட்சம் 2020: தலைமை பதவி தேடி வர முன்னோர்களுக்கு இந்த நாளில் தர்ப்பணம் கொடுங்க
மகாளய அமாவாசை
மகாளய பட்சம் என்பது புரட்டாசி அமாவாசைக்கு முந்தைய 15 நாட்கள் கடைபிடிக்கப்படுகிறது. பவுர்ணமிக்கு மறுதினம் பிரதமை திதியில் துவங்கி, புரட்டாசி மாதம் அமாவாசை வரை மகாளய பட்ச காலம். புரட்டாசியில் வரும் அமாவாசையே மகாளய அமாவாசை எனப்படும்.
முன்னோர்களுக்கு தர்ப்பணம்
தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகியவற்றை விட திதி கொடுப்பதற்கு மிகவும் சிறந்தது. வருடத்தில் மற்ற மாதங்களில் வரும் அமாவாசையன்று முன்னோரை நினைத்து தர்ப்பணம் செய்வோம். அவர்கள் மறைந்த தமிழ் மாதத்தில் வரும் திதியில், சிராத்தம் முதலியன செய்வோம். ஆனால், மகாளய பட்ச காலத்தில் பிரதமை துவங்கி அமாவாசை வரை தினமும் தர்ப்பணம் செய்ய வேண்டும்.
புனித நீராடல்
நம்மை விட்டு மறைந்த அனைத்து முன்னோரையும் அப்போது நினைவு கூர வேண்டும். புனித நீர் நிலைகள் கடலுக்கு சென்று புனித நீராடி, நம் முன்னோர் ஆத்மசாந்திக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும். தமிழகத்தில் இராமேஸ்வரம், வேதாரண்யம், நெல்லை பாபநாசம், உவரி, திருவையாறு ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் ஆகிய தலங்கள் திதி கொடுப்பதற்கு ஏற்றவை.
படைத்து வழிபடுவோம்
ராமேஸ்வரம் போன்ற புண்ணிய தலங்களுக்குச் செல்ல இயலாதவர்கள் அருகிலுள்ள நதி, குளக்கரைகளில் வைதீக காரியங்களை நிகழ்த்தலாம். இந்த தர்ப்பணம் இன்று முதல் பதினைந்து நாட்களில் மகாபரணி மகாவியதீபாதம் மத்யாஷ்டமி அவிதவா நவமி ஆகிய நட்களில் ஒருமுறையும் மகாளய அமாவாசை அன்று ஒரு முறையாக இரு நாட்களில் முன்னோர்களுக்கான தில தர்ப்பணம், படையல் வைத்தல், தானதர்மங்கள் செய்தல் ஆகியவை செய்யலாம். நம் வீட்டிற்கு முன்பு வரும் காகங்களுக்கு இந்த 14 நாட்களும் உணவு கொடுக்கலாம்.
தானம் கொடுப்பதால் மகிழ்ச்சி
ஆடைகள், ஏழைகளுக்கு பசிக்கு உணவு படிக்க சிரமப்படும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை என தானமளிக்க வேண்டும். தானம் கொடுப்பதன் மூலம் நம்முடைய முன்னோர்கள் மகிழ்ச்சியடைந்து நம்மை நன்கு அசீர்வாதம் செய்வார்கள். அதன் மூலம் பித்ரு சாபம், பங்காளிகளின் சாபம், முன்னோர்கள் சாபம் ஆகியவை விலகி வாழ்க்கையில் சுபீட்சம் உண்டாகும்.
ஆசி தரும் முன்னோர்கள்
நமது தேசத்தின் பல நூற்றாண்டுகளுக்கும் முந்தைய வரலாற்றைக் கூட தெரிந்து வைத்திருக்கும் பலர், தங்கள் மூதாதையரில் மூன்று தலைமுறைகளுக்கு முன்புள்ளவர்கள் பெயரை நினைவில் வைத்திருப்பதில்லை. அந்த பயிற்சியை இந்த காலத்தில் நமது குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும். தற்போது நினைவில் உள்ள தலைமுறையினர் பெயரை டைரியில் குறிக்கச் சொல்ல வேண்டும். அப்படியானால் தான் எதிர்காலத்தில்
தர்ப்பணம், சிராத்தம் குறித்த அறிவு நம்மிடையே நீடித்து நிலைத்திருக்கும்.