மகாளய பட்சம் 2020: தலைமை பதவி தேடி வர முன்னோர்களுக்கு இந்த நாளில் தர்ப்பணம் கொடுங்க
நம்மை காண வரும் முன்னோர்களை வரவேற்கும் மகாளய பட்சம் இன்று தொடங்குகிறது. பிரதமை முதல் அமாவாசை வரை ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதன் பலன்கள் தரப்பட்டுள்ளன.
மதுரை: மகாளய பட்சம் இன்று தொடங்கி உள்ளது. பிரதமை தொடங்கி புரட்டாசி அமாவாசை வரை அதாவது மகாளய அமாவாசை வரை 15 நாட்களும் நம்முடைய மறைந்த முன்னோர்கள் நம்முடன் இருக்கின்றனர். இந்த நாட்களில் நாம் தர்பணம் செய்து தான தர்மங்கள் கொடுத்து வழிபட்டால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும். எந்த திதியில் தர்ப்பணம் செய்தால் என்ன பலன் கிடைக்கும், திதி கொடுக்க முக்கிய தினங்கள் எவை என்று பார்க்கலாம்.
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.
வாழ்ந்து மறைந்தோரை நினைவு கூர்தலும், தெய்வத்தைப் போற்றுதலும், விருந்தோம்புதலும், சுற்றம் பேணுதலும் ஆகிய கடமைகளை நிறைவேற்றத் தன்னை நிலைப்படுத்திக் கொள்ள வேண்டும். இவை இல்வாழ்வானுக்குரிய ஐவகை அறநெறிகளாவன என்று வள்ளுவப்பெருமான் வழிகாட்டுகின்றார்.
பித்ரு லோகத்தில் இருக்கும், நமது முன்னோர்களுக்கு நாம் செய்யும் தர்ப்பணம், அமாவாசை படையல்களை நமது முன்னோர்கள் நேரில் வந்து பெற இயலாது. பித்ரு லோகத்தை விட்டு வெளியே வர நமது முன்னோர்களுக்கு அனுமதி இல்லை. நாம் செய்யும் தர்ப்பணம், அமாவாசை படையல்களை பித்ரு தேவன் பெற்றுக்கொண்டு அதை நமது முன்னோர்களிடம் சேர்ப்பார்.
மகாளய அமாவாசை உட்பட மகாளய பட்ச 15 நாட்களுக்கு மட்டும் நமது முன்னோர்கள் பித்ரு லோகத்தை விட்டு வெளியே வந்து நமது வீட்டிற்கோ அல்லது அவர்கள் இஷ்டப்படும் இடத்திற்கோ சென்று வர அனுமதி உண்டு.
இந்த 15 நாட்களும் நம்மை காண வரும் முன்னோர்களுக்கு நாம் திதி தர்ப்பணம் அளிக்கலாம். நம்மால் இயன்ற தான தர்மம் செய்ய வேண்டும். எந்த நாட்களில் திதி கொடுத்தால் என்ன புண்ணியம் என்று பார்க்கலாம்.
- முதல்நாள் - பிரதமை - பணம் சேரும்
- இரண்டாம் நாள் - துவிதியை - ஒழுக்கமான குழந்தைகள் பிறத்தல்
- மூன்றாம் நாள் - திரிதியை - நினைத்தது நிறைவேறுதல்
- நான்காம் நாள் - சதுர்த்தி - பகைவர்களிடமிருந்து தப்பித்தல்
- ஐந்தாம் நாள் - பஞ்சமி - செல்வம் சேரும் நியாயமான சொத்துகள் கிடைக்கும். வீடு, நிலம் முதலான சொத்து வாங்கலாம்.
- ஆறாம் நாள் - சஷ்டி - புகழ் கிடைத்தல்
- ஏழாம் நாள் - சப்தமி - சிறந்த பதவிகளை அடைதல் உத்தியோகத்தில் தலைமைப் பதவி கிடைக்கும், தடை பட்ட பதவி உயர்வு கிடைக்கும்.
- எட்டாம் நாள் - அஷ்டமி - சமயோசித புத்தி, அறிவாற்றல் கிடைத்தல்
- ஒன்பதாம் நாள் நவமி - திருமண தடை நீங்கும். சிறந்த வாழ்க்கைத்துணை, குடும்பத்திற்கேற்ற மருமகள் அமைதல், பேத்தி, புத்திசாலியான பெண் குழந்தைகள் பிறத்தல். குடும்ப ஒற்றுமை சிறப்படையும்.
- பத்தாம் நாள் - தசமி - நீண்ட நாள் ஆசை நிறைவேறுதல், எல்லா விருப்பங்களும் நிறைவேறும்.
- பதினொன்றாம் நாள் - ஏகாதசி - படிப்பு, விளையாட்டு, கலையில் வளர்ச்சி
- பன்னிரெண்டாம் நாள் - துவாதசி - தங்கநகை சேர்தல், விலை உயர்ந்த ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும்.
- பதின்மூன்றாம் நாள் - திரயோதசி - பசுக்கள், விவசாய அபிவிருத்தி, தீர்க்காயுள், ஆரோக்கியம், சுதந்திரமான வேலை அல்லது தொழில்
- பதினான்காம் நாள் - சதுர்த்தசி - ஆயுள் விருத்தியாகும், பாவம் நீங்குதல், எதிர்கால தலைமுறைக்கு நன்மை.
- பதினைன்தாம் நாள் - மகாளய அமாவாசை - முன் சொன்ன அத்தனை பலன்களும் நம்மைச் சேர முன்னோர் ஆசி வழங்குதல்.
மகாளய பட்சத்தில் விசேஷமாக உள்ள நாட்கள் :
- ஆவணி 22 செப்டம்பர் 7 திங்கட் கிழமை மகாபரணி - அனைவருக்கும் பொதுவானது
- ஆவணி 25 செப்டம்பர் 10 வியாழக்கிழமை மத்யாஷ்டமி - அனைவருக்கும் பொதுவானது
- ஆவணி 26 செப்டம்பர் 11 வெள்ளிக்கிழமை அவிதவாநவமி - அனைவருக்கும் பொதுவானது
- ஆவணி 27 செப்டம்பர் 12 சனிக்கிழமை மகாவியாதிபாதம் - அனைவருக்கும் பொதுவானது
- ஆவணி 29 செப்டம்பர் 14 திங்கட்கிழமை சந்நியஸ்தமாளயம் - சந்நியாசிகள் செய்வதற்கானது
- ஆவணி 30 செப்டம்பர் 15 செவ்வாய்கிழமை கஜச்சக்ஷமாளயம் - கணவரை இழந்தவர்கள் செய்வதற்க்கானது
- ஆவணி 31 செப்டம்பர் 16 புதன் கிழமை சஸ்த்ரஹதமாளயம் - துர்மரணம் நேரிட்டவர்களுக்கு
- புரட்டாசி 1 செப்டம்பர் 17 வியாழன்கிழமை மகாளய அமாவாசை - மறைந்த முன்னோர்கள் அனைவருக்கும் தர்ப்பணம் தர ஏற்ற நாள்.
மகாளய பட்சம் என்னும் அரிய சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் இருந்தால் லாபம் நமக்கு மட்டுமல்ல! நம் தலைமுறைக்கும் சேர்த்து தான். மகாளய பட்சம் தர்ப்பணம் செய்வதால் நமது முன்னோர்களின் ஆசியுடன் நமது வாழ்க்கையும் நமது குழந்தைகளின் வாழ்க்கையும் உயர்வு பெறும் என்பது நிச்சயம். இன்று முதல் தொடங்கி உள்ள மகாளய பட்ச நாட்களில் மறைந்த நம் முன்னோர்களை நினைத்து தான தர்மங்களை, செய்து நாம் நம் தலைமுறைக்கு புண்ணியம் சேர்த்துக்கொள்வோம்.