மகா சிவராத்திரி 2019: கோவிந்தா... கோபாலா... பக்தி மனம் கமழும் கன்னியாகுமரி சிவாலய ஓட்டம்
அரியும் சிவனும் ஒன்று என்பதை உணர்த்தும் விழாக்களும் விசேஷங்களும் குமரி மாவட்டத்தில் நிறையவே உண்டு. கன்யாகுமரி மாவட்டத்தில், மகா சிவராத்திரி நாளில், 12 சிவாலயங்களை தரிசித்து வழிபடும் சிவாலய ஓட்டம் என்ற
கன்னியாகுமரி: மகா சிவராத்திரி நாளில் சிவனை நினைத்து விரதம் இருக்கும் பக்தர்கள் ஹரியை நினைத்துக்கொண்டு கோவிந்தா.... கோபாலா... என்ற முழக்கத்துடன் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். ஒன்றல்ல இரண்டல்ல கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 12 சிவாலயங்களையும் ஓடி ஓடி தரிசனம் செய்கிறார்கள். இதனை சிவாலய ஓட்டம் என்று அழைக்கின்றனர் பக்தர்கள்.
மகா சிவராத்திரியன்று பக்தர்கள் உறங்காமல் விரதம் இருந்து சிவனை தரிசிப்பார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்குளம், திருமலை, திக்குறிச்சி, திற்பரப்பு, திருநந்திக்கரை, பொன்மனை, பன்றிப்பாகம், மேலாங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதாங்கோடு, திருப்பன்றிக்கோடு, திருநட்டாலம் என்கிற 12 சிவாலயங்களை சிவராத்திரிக்கு முதல்நாளான நேற்றில் இருந்து ஓடி ஓடி தரிசனம் செய்கின்றனர் பக்தர்கள்.
சிவாலய ஓட்டம் என்று பக்தியோடு அழைக்கப்படும் இந்த ஓட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவி உடை அணிந்து கொண்டு பங்கேற்கின்றனர். ஒரு கையில் பனை விசிறி, மற்றொரு கையில் சிறு பண முடிப்பும் வைத்துக்கொண்டு ஓடி ஓடி தரிசிக்கின்றனர். அரியும் சிவனும் ஒன்று என்ற தத்துவத்தை விளக்கும் வகையிலேயே இந்த சிவாலய ஓட்டம் அமைந்துள்ளது. ஏன் இந்த ஓட்டம் என்று கேட்டால் அதற்கொரு சுவாரஸ்யமான புராண கதையை கூறுகின்றனர் குமரி மாவட்ட மக்கள்
மகா சிவராத்திரி 2019: சிதம்பரம் தொடங்கி காஞ்சிபுரம் வரை சிவனின் பஞ்ச பூத ஸ்தலங்கள் தரிசனம்
புருஷாமிருகம்
இடுப்புக்கு மேலே மனித வடிவமும், இடுப்புக்கு கீழே புலி வடிவமும் கொண்டது புருஷாமிருகம். புலிக்கால் முனிவரான வியாக்ரபாதரே சிவபெருமானை வேண்டி இப்படி உருவம் எடுத்தார் என்பார்கள். புருஷாமிருகம் சிவபக்தன். விஷ்ணு என்றால் ஆகாது. தனது எல்லைக்குள் எவரேனும் திருமால் நாமத்தைக் கூறினால், அவரைத் தாக்கிவிடும்.
பீமனும் புருஷாமிருகமும்
தவ வலிமையைவிட புஜ பலமே சிறந்தது! என்று நம்பியவர் பீமன். புருஷாமிருகத்துக்கும் பீமனுக்கும் அரியும் சிவனும் ஒன்று என்பதை உணர்த்த ஸ்ரீகிருஷ்ணர் திருவுளம் கொண்டார். ஒருமுறை தர்மர் நடத்தும் ராஜசூய யாகத்துக்கு புருஷாமிருகத்தின் பால் கொண்டு வருமாறு பீமனை அனுப்பினார். வைணவத்தை வெறுக்கும் புருஷாமிருகத்திடம் சென்று பால் பெற்று வருவது எப்படி? எனத் தயங்கினார் பீமன். ஆனால் கிருஷ்ணரோ, பயப்படாதே. உன்னிடம் பன்னிரெண்டு ருத்திராட்சக் கொட்டைகள் தருகிறேன். புருஷாமிருகம் உன்னைத் தாக்க வரும்போது, ருத்திராட்சக் கொட்டைகளில் ஒன்றைக் கீழே போடு. அது சிவலிங்கமாக மாறும். லிங்கத்தைப் பார்த்ததும், புருஷாமிருகம் பூஜையில் இறங்கிவிடும். அப்போது தப்பித்து விடலாம்! என்றார்.
ஓடிய பீமன்
திருமலையில் ஒரு பாறை மீது அமர்ந்து, சிவதவம் புரிந்து கொண்டிருந்தது புருஷாமிருகம். அப்போது அங்கு வந்த பீமன், கோவிந்தா... கோபாலா!... என்று கூவினான். இந்த சத்தத்தில் புருஷா மிருகத்தின் தவம் கலைந்தது. கோபத்துடன் பீமனைத் துரத்தியது. உடனே பீமன், ஒரு ருத்திராட்சத்தைக் கீழே போட்டார். அந்த விநாடியே ருத்ராட்சம் சிவலிங்கமாக மாறியது. இதைக் கண்டதும் புருஷாமிருகம் சிவபூஜையை ஆரம்பித்தது. பீமன், கோவிந்தா, கோபாலா என்று மீண்டும் குரல் எழுப்பினார். புருஷாமிருகம் மீண்டும் பீமனைத் துரத்த, பீமன் மீண்டும் ருத்திராட்சத்தைக் கீழே போட்டார். அங்கும் அது ஒரு சிவலிங்கமாக மாறியது. அந்த இடமே திக்குறிச்சி.
சிவாலய தரிசனம்
ஓடி ஓடி பதினோரு இடங்களைக் கடந்து பன்னிரெண்டாவது இடமான திருநட்டாலம் என்ற இடத்தில் ருத்திராட்சத்தைப் போடும்போது, புருஷாமிருகம் பீமனைப் பிடித்தது. பீமனுடைய ஒரு கால் புருஷாமிருகத்தின் எல்லைக்குள்ளும், மற்றொரு கால் வெளியேயும் இருந்தன. உடனே பீமன் உன் எல்லையைக் கடந்து விட்டேன். என்னை விட்டுவிடு! என்றார். அப்போது, அங்கே வந்த தர்மரிடம் நியாயம் கேட்டார்கள். தம்பி சிக்கலில் இருப்பது தெரிந்தும், பாரபட்சம் பாராமல், ஒரு கால் பகுதி புருஷாமிருகத்தின் எல்லையில் இருப்பதால், பாதி உடல் புருஷா மிருகத்துக்கே! என்றார். அப்போது அங்கே தோன்றிய ஸ்ரீகிருஷ்ணர், பீமனுக்கும் புருஷாமிருகத்துக்கும், அரியும் சிவனும் ஒன்றே! எனும் தத்துவத்தை உணர்த்தினார். இருவரும் ஸ்ரீகிருஷ்ணரை வணங்கினர். தர்மரின் ராஜ சூய யாகம் நடக்க புருஷாமிருகம் உதவியது.
12 சிவாலயங்கள்
இந்தப் புராண நிகழ்வைக் குறிக்கும் வகையில், மகா சிவராத்திரி நாளில், பன்னிரெண்டு சிவனுடைய திருக்கோயில்களை தரிசிக்க சிவாலய ஓட்ட தரிசனத்தை மேற்கொள்ளும் பக்தர்கள், மாசி மாதம் ஏகாதசி அன்று, மாலை அணிந்து, விரதம் இருப்பார்கள். சிவராத்திரிக்கு முன் தினம் காலையிலிருந்தே எதுவும் சாப்பிடாமல், காவி உடை அணிந்து புறப்படுவார்கள்.கோவிந்தா... கோபாலா எனும் கோஷமிட்டபடி குமரி மாவட்டம் திருமலையில் இருந்து சிவாலய ஓட்டம் துவங்குவர். இப்படியாக ஓடி பன்னிரெண்டு சிவன் ஆலயங்களையும் தரிசிப்பார்கள்.
திருமலை மகாதேவர் சூலபாணி கோவில்
சிவாலய ஓட்டத்தின் முதல் ஆலயம் முஞ்சிறை திருமலை மகாதேவர் சூலபாணி கோவில் ஆகும். இது நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் சாலையில் உள்ள மார்த்தாண்டத்தில் இருந்து தேங்காய்ப்பட்டணம் செல்லும் வழியில் 7 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. இரண்டாவது திருக்கோவில் திக்குறிச்சி மகா தேவர் கோவில். இது முஞ்சிறையில் இருந்து மார்த்தாண்டம் வழியாக 18 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. திற்பரப்பு மகாதேவர் வீரபத்திரர்கோவில் சிவாலய ஓட்டத்தில் மூன்றாவது தலமாகும். திக்குறிச்சியில் இருந்து கிழக்கே அருமனை வழியாக 14 கிலோமீட்டர் தூரத்தில் இந்தக் கோவில் இருக்கிறது.
திருநந்திக்கரை நந்திகேஸ்வரர்
சிவாலய ஓட்டத்தின் நான்காவது ஆலயம், திருநந்திக்கரை நந்திகேஸ்வரர் கோவில் ஆகும். திற்பரப்பில் இருந்து குலசேகரம் சந்திப்பு வழியாக 7 கிலோமீட்டர் தூரத்தில் இந்த ஆலயம் உள்ளது. பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர் கோவில் சிவாலய ஓட்டத்தில் 5வது திருத்தலம் ஆகும். திருநந்திக்கரையில் இருந்து கிழக்கே 7 கிலோமீட்டர் தூரத்தில் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது. திருபன்னிப்பாகம் கிராத மூர்த்தி மகாதேவர் கோவில் ஆறாவது திருக்கோவிலாகும். பொன்மனையில் இருந்து குமாரபுரம் முட்டைக்காடு வழியாக 12 கிலோ மீட்டர் தொலைவில் இது உள்ளது.
காலகாலர் கோவில்
கல்குளம் பத்மநாபபுரம் ஆனந்தவல்லி உடனுறை நீலகண்ட சுவாமி கோவில் 7வது ஆலயம் ஆகும். திருபன்னிப்பாகம் ஆலயத்தில் இருந்து 7 கிலோமீட்டர் தூரத்தில் இந்தக் கோவில் இருக்கிறது. மேலாங்கோடு காலகாலர் கோவில் சிவாலய ஓட்டத்தின் 8வது திருத்தலம். கல்குளத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் இந்தக் கோவில் அமைந்துள்ளது.
நீலகண்ட சுவாமி
திருவிடைக்கோடு வில்லுக்குறி சடையப்பர் கோவில் 9வது திருக்கோவில் ஆகும். மேலாங்கோடு ஆலயத்தில் இருந்து தெற்கில் திருவனந்தபுரம் நெடுஞ்சாலை வழியாக செல்ல வேண்டும். சிவாலய ஓட்டத்தின் பத்தாவது திருக்கோவில் திருவிதாங்கோடு நீலகண்ட சுவாமி கோவில், வில்லுக்குறி தலத்தில் இருந்து தக்கலை, கேரளபுரம் வழியாக தெற்கே 8 கிலோமீட்டர் தூரத்தில் திருத்தலம் உள்ளது.
சங்கரநாராயணர்
11வது திருத்தலம் திருபன்றிகோடு பக்தவத்சலர் மகாதேவர் கோவில் ஆகும். இது திருவிதாங்கோடு ஆலயத்தில் இருந்து பள்ளியாடி வழியாக 8 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. சிவாலய ஓட்டத்தின் நிறைவு ஆலயமாக விளங்குவது திருநட்டாலம் அர்த்தநாரீஸ்வரர் மற்றும் சங்கரநாராயணர் கோவில்கள் ஆகும். திருபன்றிகோடு ஆலயத்தில் இருந்து மேற்கில் 3 கிலோமீட்டர் தூரம் சென்றால் இந்த ஆலயத்தை அடையலாம்.