கழுதை வாகனத்தில் மகர சங்கராந்தி பிரவேசம் - எந்த நட்சத்திரக்காரர்களுக்கு என்ன பலன்
சென்னை: விகாரி வருடம் மார்கழி மாதம் 29ஆம் தேதி ஜனவரி 14,2020 செவ்வாய்கிழமை நள்ளிரவில் 2.08 மணியளவில் கிருஷ்ண பட்சம் பஞ்சமி திதி துலா லக்னம் சிம்ம ராசி பூரம் நட்சத்திரத்தில் சோபனம் நாமயோகம் தைதூலை கரணத்தில் மகர சங்கராந்தி பகவான் மகர ராசியில் பிரவேசிக்கிறார்.
ஒவ்வொரு ஆண்டுக்கும் சங்கராந்தி தேவதை என்று ஒன்று உண்டு. இதனை 'மகர சங்கராந்தி தேவதை' என்று அழைப்பார்கள். 60 வருடங்களுக்கு தனித்தனிப் பெயருடைய சங்கராந்தி தேவதைகள் உள்ளன. இந்த தேவதைகளின் தோற்றம், உடை, வாகனம், உணவு, அணிந்திருக்கும் ஆபரணம், புஷ்பம் போன்றவற்றுக்குத் தக்கபடி தேசத்தின் அப்போதைய நன்மை தீமைகளுக்குப் பலன் கூறுவார்கள். இந்த ஆண்டு மகரசங்கராந்தி தேவதை எப்படி எதன் மீதேறி வருகிறார் அதற்கான பலன்கள் எப்படி என்று பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது.
தை மாதத்தில் சூரியனுக்கு பகன் என்று பெயர். தை மாதம் சூரியனை வழிபட்டவர்களுக்கு எல்லா வளங்களும், பால்பாக்கியமும் உண்டாகும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதுவரை தெற்கு திசையில் பயணித்து வந்த சூரியன், தனது பயணத்தை தைமாத பிறப்பன்று வடக்கு திசையை நோக்கி தொடங்குகிறார். இதை உத்திராயண புண்ணியகாலம் என்பர். உத்திராயணம் என்றால் வடக்குப்புறமான வழி என்று பொருள். இக்காலம் தேவர்களுக்கு பகல் பொழுதாகும். ஆண்டுதோறும் தை மாதம் முதல் ஆனி மாதம் வரையுள்ள ஆறு மாதங்கள் உத்தராயணம் என்றும் ஆடி முதல் மார்கழி வரையுள்ள மாதங்கள் தட்சிணாயணம் என்றும் கூறப்படுகிறது. இதில் தை மாதம் முதல்நாளை மகர சங்கராந்தி, தைப் பொங்கல் என்று கொண்டாடுகிறோம்.
தைதூலை கரணத்திற்கான விலங்கு கழுதை என்பதால் இந்த ஆண்டு மகர சங்கராந்தி கழுதை வாகனத்தில் உலா வருகிறார். இந்த ஆண்டு
மகர சங்கராந்தி பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
பெயர் : மஹோதைரியா - மகாயுத்தம்
வாகனம் : கழுதை - வியாதி
வஸ்திரம் : மஞ்சள் - சுகம்
ஆபரணம் : நீலம்
அபிஷேகம் : கருப்பஞ்சாறு
செவ்வாய் - ராஜ கலகம்
துலா லக்கினம் - நல்ல மழை பெய்யும்
மல்லிகை - பெண்களுக்கு சௌக்கியம்
முகபலன் - வைராக்கியம் - ஆட்சியாளர்களுக்குக் கெடுதி.
மகர சங்கராந்தி நட்சத்திர பலன்கள்
அசுவினி, பரணி, கிருத்திகை ஆகிய மூன்று நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ராஜகோபமும், ரோகிணி, மிருகஷீரிடம், திருவாதிரை,புனர்பூசம், பூசம், ஆயில்யம் ஆகிய 6 நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ராஜ வெகுமானமும் கிடைக்கும். மகம், பூரம், உத்திரம் ஆகிய மூன்று நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு தன நாசமும் ஹஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுசம், கேட்டை ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு தன லாபமும் கிடைக்கும். மூலம், பூராடம், உத்திராடம் ஆகிய மூன்று நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ஸ்தான நாசமும், திருவோணம், அவிட்டம், சதயம்,பூராட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ஆகிய 6 நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ஸ்தான லாபமும் ஏற்படும்.