கல்யாணத்தையும் செய்து வீட்டையும் கட்டிபார்க்கும் செவ்வாய் தோஷம்!
- அஸ்ட்ரோ சுந்தரராஜன்
சென்னை: இன்று திருமாகாத பல ஆண் மற்றும் பெண்கள் செவ்வாய் தோஷத்தால் திருமணம் தாமதமாவதாக கூறுகின்றனர். செவ்வாய் தோஷம் எனப்படும் அங்காரக தோஷம் இன்று பலராலும் பல கற்பனைகளையும் கட்டுகதைகளையும் சேர்த்து புனைந்து ஓரு பூதாகரமான விஷயமாக கல்யாணத்திற்கு பெரும் தடையாக பேசப்படும் முக்கிய தோஷமாக இது கருதப்படுகிறது. ஆனால் இந்த செவ்வாய் தோஷம் ஆணுக்கும், பெண்ணுக்கும் இருந்தால் திருமணம் செய்யலாம். ஒருவருக்கு செவ்வாய் தோஷம் இருந்து மற்றொருவற்கு செவ்வாய் தோஷம் இல்லை எனில் அவர்களுக்கு திருமணம் செய்யக்கூடாது என சோதிடம் கூறுகிறது.
செவ்வாய் தோஷம்:
லக்கனம், சந்திரன், முதலியவைகளுக்கு 1,2,4,7,8,12, ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷ ஜாதகமாக கருத வேண்டும். அப்படி மீறி திருமணம் செய்தால் செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு செவ்வாய் தெசை நடைபெற்றால் அக்காலத்தில் துணைவர் துணைவியை இழக்க வேண்டிய நிலை வரும் என சோதிடம் கணிக்கிறது.
1,2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் உள்ள எல்லோருக்கும் செவ்வாய் தோஷம் என்று கூறிவிட முடியாது. நடைமுறையில் லக்கினத்தை மட்டுமே கணக்கில் எடுத்து பெரும்பாலான ஜோதிடர்கள் கூறுவர். சிலர் முதல் வீட்டையும் கணக்கில் எடுப்பது உண்டு.
செவ்வாய் தோஷம் எப்படி ஏற்பட்டது?
நீர் காரகனான சந்திரனால் ஏற்படும் நோயை ஜல தோஷம் என கூறி மருத்துவம் செய்துக்கொள்கிறோம். ஆனால் செவ்வாயினால் உடம்பில் ஏற்படும் மாற்றத்தை செவ்வாய் தோஷம் என கூறி திருமண வாழ்க்கையையே சீரழித்து விடுகிறோம். ரத்தத்தின் காரகன் செவ்வாய் ஆதிக்கம் உள்ளவர்களுக்கு மற்றவர்களை விட சற்றே கூடுதலான உணர்ச்சி இருக்கும் . அது சிலருக்கு கோப உணர்ச்சியாகவும் சிலருக்கு வேக உணர்ச்சியாகவும் சிலருக்கு காம உணர்ச்சியாகவும் இருக்கும்.
செவ்வாய் ஆதிக்கம் பெற்றவர்களுக்கு தாம்பத்தியத்தில் அதிக நாட்டம் இருக்கும். செவ்வாய் ஆதிக்கம் பெற்றவர்களையே செவ்வாய் தோஷம் பெற்றவர்களாக கூறப்படுகிறது. ஆனால் தோஷம் இல்லாதவர்கள் காலப் போக்கில் தாம்பத்தியத்தில் இருந்து விலகுவர். தோஷம் உள்ளவர்களுக்கு, தோஷம் இல்லாதவர்களை திருமணம் செய்து வைத்தால், அவர்களுக்கிடையில் தாம்பத்திய ரீதியான பிரச்சனைகள் ஏற்படும். சூசகமாகக் கூற வேண்டுமென்றால் ஒருவர் விரும்ப, ஒருவர் அதற்க்கு மறுப்பு தெரிவிப்பார்.
ஒருகட்டத்தில் உங்களுக்கு தேவைப்பட்டால்/விருப்பமிருந்தால் வேறு எங்காவது சென்று கொள்ளுங்கள் என்று விளையாட்டாக கூறினாலும், அதை தனக்கு கிடைத்த அனுமதியாகக் கருதி வேறு துணையை தேடுவார். செவ்வாய் தோஷத்தால் பெற்றோருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. அதேபோல் மாமனார், மாமியாரையும் செவ்வாய் தோஷம் பாதிக்காது. தாம்பத்திய, காம வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவே தோஷம் உள்ள இருவருக்கும் திருமணம் செய்து வைத்தால் நன்றாக இருக்கும் என்று கூறுகின்றனர்.
சுக்கிரன்,செவ்வாய் சேர்க்கை:
செவ்வாய் என்பது ஒரு ஆண் கிரகமாகும். வீரம், ஆண்மை, கம்பீரம் வீரியம், இரத்தம், உணர்ச்சியை தூண்டுதல் ஆகியவற்றின் காரக கிரகமாகும். சுக்கிரன் என்பது பெண் கிரகமாகும்.
செவ்வாய் தோஷம் என்பது எப்படி உருவாகியிருக்கும் என ஆராய்ந்தபோது காலபுருஷ ஜாதகத்தை ஒட்டியே செவ்வாய் சுக்கிரனின் சேர்க்கையை ஒட்டி ஏற்பட்டதாக தெரிகிறது. கால புருஷ ஜாதகத்தில் மேஷத்தை லக்னமாக கூறப்படுகிறது. காலபுருஷ ஜாதகத்தில் சுக்கிரன் சேர்க்கையையும் செவ்வாய் நீசத்தையும் கருத்தில் கொண்டே செவ்வாய் தோஷ விதிமுறைகள் உருவாகியிருப்பது தெள்ள தெளிவாக விளங்கும்.
லக்னத்திற்க்கு 1, 2,4,7,8,12 ஆகிய இடங்களில் செவ்வாய் நின்றால் தோஷமாக கூறப்படுகிறது. இதை சற்று கால புருஷ ஜாதகப்படி ஆராய்ந்து பார்ப்போம். கால புருஷ லக்னமான மேஷத்திற்க்கு இரண்டாம் வீடு ரிஷபம் சுக்கிரனின் சேர்க்கை ஏற்படுகிறது. நான்காம் வீடான கடகம் குரு உச்சம் பெறும் வீடு அதே சமயம் செவ்வாய் நீசமடையும் வீடு. ஏழாம் வீடான துலாம் சுக்கிரனின் வீடாகும். இங்கு செவ்வாய் நின்றாலும் சுக்கிர சேர்க்கை ஏற்படும்
அடுத்தது காலபுருஷனுக்கு எட்டாம் வீடான விருச்சிகம். இது செவ்வாயின் சொந்த வீடென்றாலும் ஆட்சி பெற்றாலும் பார்க்கும் பார்வை சுக்கிரனின் வீடாகிய ரிஷபத்தில் தான் அமைகிறது. இதுவும் செவ்வாய் சுக்கிர சேர்க்கையை ஏற்படுத்திவிடுகிறது. மேலும் எட்டாம் வீடு என்பது மர்ம ஸ்தானங்களை குறிக்குமிடமாகும்.
அடுத்தது காலபுருஷனுக்கு பன்னிரெண்டாமிடமெனப்படும் அயன சயன போக ஸ்தானமாகும். இது குருவின் ஆட்சி வீடாகும். மேலும் சுக்கிரன் உச்சமடையும் இடமாகும். இங்கு செவ்வாய் இருந்துவிட்டால் அந்த ஜாதகன் பக்திக்கும் படுக்கைக்கும் இடையில் அலை கழிக்கப்படுவான். எனவே ஒரு ஜாதகத்தில் குரு பார்வையில்லாமல் செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை அதிக காமத்தையும் குருபார்வையில்லாமல் செவ்வாய் நீசமடைவது ஆண்மை குறைவையும் ஏற்படுத்தும்.
இதை கருத்தில் கொண்டுதான் மருத்துவ வசதி இல்லாத காலத்தில் ஒரு தம்பதி அதிக தாம்பத்திய சுகத்தினாலோ அல்லது ஆண்மை குறைபாட்டினால் திருப்த்திபடுத்த முடியாத தன்மையாலோ பாதிப்படைய கூடாது என கருதி சமூக பாதுகாப்பை கருத்தில் கொண்டு செவ்வாய் தோஷம் எனும் கட்டுபாட்டை உருவாக்கினார்கள் என தோன்றுகிறது.
கட்டில் சுகத்தில் திருப்த்தி அடையாத கணவன்/மனைவி ஜாதகங்களில் இந்த செவ்வாய் சுக்கிர சேர்க்கை இருப்பதை கண்கூடாக பார்க்க முடியும்.
காதல் செவ்வாய்:
காதல் கண்களை மறைக்கும் என்பது பழமொழி அதேபோல காமம் என்பது தனது நிலை மற்றும் குல பெருமை போன்றவற்றை மறக்க செய்யும் என்பது பலவகையிலும் நாமறிந்த ஒன்றே. இருப்பினும் இந்த உறவு சார்ந்த சிக்கல்களில் தவறு செய்பவர்கள் அது கணவனாயினும் அல்லது மனைவியாயினும் தவறு நடக்கும் வரை எந்த ஒரு வருத்தமும் இல்லாமல் ஒரு ஆர்வத்தினாலும் ஆசையினாலும் அளவு கடந்த விருப்பத்தினாலும் தங்களது பெருமை நிலை வசதி போன்ற எல்லாவற்றையும் மறந்து விடுகின்றனர்
ஜாதகத்தில் சுக்கிரன்,செவ்வாய் பங்கு மிக முக்கியமானது எனலாம்.செவ்வாய் நம் உடலில் ஓடும் ரத்தத்துக்கு அதிபதி ஆகிறார். போர் தளபதி செவ்வாய். கோபம்,வீரம் போன்றவற்றுக்கு முக்கிய காரண கர்த்தா செவ்வாய். இவருக்கு உரிய தெய்வம் முருகன். பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய் கெட்டுப்போனால் ஆண்களால் பல பிரச்சினைகளை சந்திக்க நேருகிறது. கணவனுக்கு பாதிப்பு தருகிறது. பலமுள்ள செவ்வாய் கணவனை அடக்கி ஆளவும் , கணவருக்கு யோகத்தையும் தந்து விடுகிறது.
ஆனால் இன்று இளைஞர்கள் திருமணம் ஆகாமல் சேர்ந்து வாழ்தல்,தங்கள் ஜோடிகளை அடுத்தவர்களுடன் பகிர்தல், "கூடி வாழ்ந்தால் கோடி நன்மை" என பலருடன் சேர்ந்துவாழ்தல் என வாழ்ந்துவரும் இந்த காலத்திற்க்கும் செவ்வாய் தோஷம் என்பது பொருந்துமா என சிந்திக்க வேண்டும். அறிவியல் வளர்ச்சி இல்லாத காலத்தில் தாம்பத்ய நிலையறிய அறிவியலின் காரகனான செவ்வாயை கொண்டு அறியப்பட்டது. ஆனால் தற்போது அரை மணி நேரம் முன்பு யாருடன் சேர்ந்து இருந்தார்கள் என அறியுமளவுக்கு விஞ்ஞானம் வளர்ந்துவிட்டது. இதற்கும் செவ்வாயே காரகனாகும். எனவே கால தேச வர்தமானத்தை உணர்ந்து செவ்வாய் தோஷம் என்பது தேவையா என சிந்திக்க வேண்டும்.
செவ்வாய் தோஷத்திற்க்கு விதிவிலக்கு உண்டா?
ஒருசிலர் செவ்வாய் மேஷம், விருச்சிகம், மகரம், கடகம் ஆகிய வீடுகளில் செவ்வாய் இருந்தால் தோஷம் வலிமை குன்றி தோஷமற்ற நிலை ஏற்படும் என கருதுகின்றனர். காரணம் என்னவென்றால் சம்பந்தப்பட்ட வீடுகளில் செவ்வாய் ஆட்சி, உச்சம், நீசம், பெற்று இருப்பதால் தோஷம் குறையும் என்றும் மேஷம், விருச்சிகம், மகரம், கடகம் ஆகிய லக்னங்களிலோ இராசியிலோ பிறந்தவர் என்றால் உங்களுக்கு தோஷம் கிடையாது என்றும் கூறி வருகிறார்கள். உண்மையில் செவ்வாய் தோஷத்திற்க்கு விதிவிலக்கு என்பதெல்லாம் கிடையாது. செவ்வாய் தோஷம் என்பதே ரத்தத்தின் உட்கூறுகளான RH+ மற்றும் RH- சம்மந்தபட்ட விஷயம் என்பதால் அதே இனத்தில் திருமணம் செய்வது பிரச்சனையை குறைக்கும்.
உதாரணமாக ஆண் ஜாதகருக்கு லக்னம் அல்லது சந்திரனுக்கு 1, 7, 8 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் பெண்ணிற்க்கும் அதே இடங்களில் செவ்வாய் இருக்குமாறு திருமணம் செய்வது நல்லது, அதேபோல 2,4,12 ஆகிய எந்த இடங்களில் செவ்வாய் இருந்தாலும் அதே அமைப்புடையா ஜாதகரோடு திருமணம் செய்யும்போது தாம்பத்ய வாழ்வு சிறக்கும். எத்தனை பரிகாரங்கள் செய்தாலும், இத்தகைய இணைப்போடு செய்யும் திருமணங்களே சிறப்பாக இருக்கும்
வீடு வாங்கும் யோகம் தரும் செவ்வாய் தோஷம்:
ஒரு ஜாதகருக்கு லக்னத்திற்க்கு செவ்வாய் 1,4,7,8,12 ஆகிய இடங்களில் இருந்தால் அவர்களுக்கு சொந்த வீடு வாங்கும் யோகம் ஏற்படுகிறது. இதே அமைப்பு தான் செவ்வாய் தோஷத்திற்க்கும் பொருந்துகிறது. இன்று திருமணத்திற்க்கு காத்திருக்கும் ஆண் மகன்களிடும் சொந்த வீடு இருக்கா என பல பெண்களும் கேட்கின்றனர். இனிமேல் செவ்வாய் தோஷமுள்ள வரனை தைரியமாக திருமணம் செய்து சொந்த வீட்டில் வாழலாம்.
எனவே செவ்வாய் தோஷம் என்றாலே யாரும் பயந்து விட வேண்டாம். இன்றைய நடைமுறையில் , பாதிக்கும் மேல் , செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் தான் அதிகம். திருமண தாமதத்திற்கு , செவ்வாய் தோஷம் மட்டுமே காரணம் ஆகாது.