யாருக்கு புதையல் கிடைக்கும்? மங்களகரமான செவ்வாய் பற்றி படிங்க தெரியும்!!
-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர். சுப்ரமணியன்
ஜோதிட ரீதியாக செவ்வாயைப் பற்றி ஆராயும்போது செவ்வாயின் நிறம் சிவப்பாக உள்ளதாகவும், செவ்வாய் ஆண் கிரகமாகவும் கருதப்படுகிறது. செவ்வாய்க்கு தெற்கு திசை யோக திசையாகும். செவ்வாய் பூமிகாரகன் என்பதால் ஒருவருடைய ஜாதகத்தில் செவ்வாய் இருக்கும் நிலையைப் பொருத்து புதையல் கிடைக்கக்கூடிய வாய்ப்பும் உண்டாகும் என்கின்றனர் ஜோதிடர்கள்.
சூரியன் சந்திரனைப் போல் நவகிரகங்களில் செவ்வாயும் ஒரு முக்கியமான கிரகமாகும். பெண்களுக்கு களத்திர காரகனாய் விளங்குபவர் செவ்வாய். நவகோள்களில் நடுநாயகமாக விளங்கும் செவ்வாய்க்கு பூமிகாரகன், அங்காரகன், மங்கள காரகன், சகோதரகாரகன், காமாதிபதி என பல பெயர்கள் உண்டு.
நவகிரகங்களில் செவ்வாய் அங்காரகன் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். சனி, ராகு, கேதுவிற்கு அடுத்தபடியாக அசுப கிரகங்களில் ஒருவராக சித்திரிக்கப்படுகிறார். செவ்வாய் மேஷம், விருச்சிகத்தில் ஆட்சியும், மகரத்தில் உச்சமும், கடகத்தில் நீசமும் பெறுகிறார். சிம்மம், தனசு, மீனம் முதலியவை நட்பு ராசிகளாகும். கன்னி, மிதுனம் முதலியவை பகை ராசிகளாகும்.
இயற்கையில் செவ்வாய், எஜமானரின் உத்தரவினை கண்மூடித்தனமாகப் பின்பற்றும் ஒரு தொண்டனாக, படைவீரனாக, காவல்காரனாக இருக்கும் குணத்தினைக் கொண்டவர். செவ்வாய் பற்றி ஆராய மங்கள்யானை அனுப்பியுள்ள இந்தியா. நாம் செவ்வாய் கிரகம் ஒருவரின் ஜாதகத்தில் இருக்கும் நிலை, பார்க்கும் நிலையைப் பொறுத்து என்ன செய்யும் என்பதை அறிந்து கொள்வோம்.
செவ்வாயின் காரகத்துவங்கள்
செவ்வாய் பகவான் சகோதர, சகோதரிகள், பூமி, முருகக் கடவுள், பத்ரகாளி, இனப்பற்று, கோபப்படுதல், நெருப்பு சம்பந்தமுள்ள தொழில், தீப்பெட்டி, கெரசின், சுண்ணாம்பு, ஓடு, போலீஸ், ராணுவம், அரசாங்க பதவி, சண்டையிடுதல் சாகச செயல்கள், செம்பு, பவழம், துவரை, சமையல் செய்தல், கவலை, அலைச்சல், தைரியம், விதவைப் பெண்ணிடம் உறவு, விபத்தினால் மரணம், மல்யுத்தம், தூது செல்லுதல் போன்றவற்றிற்கு காரகம் வகிக்கிறார்.
கம்பீரம், அதிகாரம்
தோற்றத்தில் கம்பீரம், நடையில் மிடுக்கு, குரலில் அதிகாரத்தை ஏற்படுத்தி தரக்கூடியவர் செவ்வாய். போட்டி, பந்தயங்களில், சாகச நிகழ்ச்சிகளில் புகழ்பெற செவ்வாயின் பலம் அவசியம் தேவை. ரத்த கிரகம் நம் உடலில் ரத்தத்திற்கும், வெப்பத்திற்கும் காரகமாக இருப்பவர் செவ்வாய். இவர் பலமாக இருந்தால்தான் உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.
ஆற்றல் சக்தி நாயகன்
மூளைக்கு ஆற்றலும், சக்தியும் தரக்கூடிய கிரகம் செவ்வாய். பெண்கள் பூப்பெய்துவதற்கு முக்கிய காரண கர்த்தாவாக விளங்கக்கூடியவர். செவ்வாய் பலம் குறைந்தால் உடலில் ரத்த சம்பந்தமான நோய்கள் தோன்றும். குறைந்த ரத்த அழுத்தம், அதிக ரத்த அழுத்தம் போன்றவற்றை ஏற்படுத் தக்கூடியவர். சகோதரகாரகன் ஒவ்வொரு கிரகத்துக்கும் ஒவ்வொரு காரகம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் செவ்வாய்க்கு சகோதர காரகன் என்ற சிறப்பு ஏற்பட்டுள்ளது.
செவ்வாய்கிழமை விரதம்
செவ்வாய் கிரகத்துக்கு உரிய நாள், செவ்வாய்க் கிழமை என்று அழைக்கப்படுகிறது. செவ்வாய் என்ற சொல்லுக்கே மங்களம் என்றுதான் பொருள். கோயில்களில் முக்கிய பரிகார பூஜைகளை செவ்வாய்க் கிழமையில்தான் செய்வார்கள். ஆகையால் செவ்வாய்க் கிழமையை ஒதுக்கவேண்டிய அவசியம் அறவே இல்லை. தர்ம சாஸ்திரத்தில் மௌன அங்காரக விரதம் என்று ஒரு விரதத்தினைப் பற்றி மிகவும் விசேஷமாகக் கூறப்பட்டுள்ளது என்கிறார்கள் சாஸ்திரம் அறிந்தவர்கள். அதாவது, செவ்வாய்க்கிழமை நாளன்று மௌனவிரதம் அனுஷ்டித்தால் ஒரு யாகம் செய்த பலன் கிடைக்கும் என்கிறது சாஸ்திரம்.
செவ்வாய் வெறும்வாய்
'செவ்வாய் வெறும் வாய் ' என்ற பழமொழி புழக்கத்தில் உள்ளது. இதற்குக் காரணம் செவ்வாய்க்கிழமை அன்று எந்த ஒரு தர்க்கத்திலும் ஈடுபடக்கூடாது, அவ்வாறு தர்க்கம் செய்வதாலோ, விவாதத்தில் ஈடுபடுவதாலோ தீமையே உண்டாகும் என்பது நம்பிக்கை எனவேதான் சில நிறுவனங்கள் செவ்வாய்க்கிழமை அன்று விடுமுறை விட்டுவிடுவதைக் காணலாம். தமிழ்நாட்டில் திருமண சம்பந்தம் பேசச் செல்பவர்கள் கூட செவ்வாய் மங்களவாரமாக இருந்தாலும் அதனைத் தவிர்க்கிறார்கள்.
மங்கள்வார்
நம் நாட்டில் தென்பகுதி, வடபகுதிகளில் மாறுபட்ட பழக்கவழக்கங்கள் உள்ளன. இங்கு நாம் செவ்வாய்க்கிழமையை காரணமே இல்லாமல் தவிர்க்கிறோம். வடநாட்டில் மங்கல நிகழ்ச்சிகள் சர்வ சாதாரணமாக நடக்கின்றன. அவர்கள் செவ்வாயை 'மங்கள்வார்' என்று குறிப்பிடுகின்றனர். இந்நாளில் சுபநிகழ்ச்சிகளைச் செய்தால், யோகத்தை விருத்தி செய்யும் என்று நம்புகின்றனர்.
செவ்வாய் தோஷம்
செவ்வாய்க்கும் திருமணத்திற்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது. செவ்வாய் தோஷம் என்பது பரவலாக எல்லோருக்கும் தெரிந்த ஒன்றாகும். செவ்வாய் தோஷம் பற்றி அச்சப்படும்படி பலவிதமான கருத்துகள் சொல்லப்பட்டாலும் அவை வெறும் வதந்திகள்தான். பழமையான ஜோதிட நூ ல்களில் செவ்வாய் தோஷம் இருந்தால் திருமணம் தாமதமாகும் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது.
செவ்வாயால் உண்டாகும் நோய்கள்
அம்மை, கண்களில் பாதிப்பு, குடல் புண், காக்காய் வலிப்பு, இருதய பாதிப்பு, உஷ்ண நோய், தோல் நோய், எதிரி மற்றும் உடன்பிறப்புகளிடம் சண்டையிடும் நிலை விஷம் மற்றும் ஆயுதத்தால் கண்டம், தொழுநோய், தோல் நோய் போன்றவை உண்டாகும். காதுநோய், பெண்களுக்கு கருமுட்டை பாதிப்பு, மாதவிடாய் கோளாறு போன்றவையும் ஏற்படும். செவ்வாய் ரத்தகாரகன் என்பதால் பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய் பலம் பெறுவது நல்லது. செவ்வாய் பலமிழந்து இருந்தால் ரத்த சம்பந்தப்பட்ட பாதிப்பு, மாதவிடாய் கோளாறு உண்டாகும்.
வழிபாடு - பரிகாரம்
செவ்வாய்க்குரிய கடவுள் முருகப்பெருமான். எல்லா முருகன் தலங்களும் செவ்வாய் பரிகாரத் தலங்களே. அறுபடை வீடுகளுக்கு சென்று முரு கப்பெருமானை வணங்குவதால் செவ்வா யால் உண்டாகும் பிரச் னைகள் விலகும். பழநியில் தண்டாயுதபாணி செவ்வா யாகவே அரு ள்பாலிக்கிறார். மயிலாடுதுறை அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோயில், முக்கிய பரிகாரத் தலமாக விளங்குகிறது. அறுவை சிகிச்சை செய்வதற்கு மு ன்பும், பின்பும் இங்கு வந்து வழிபடுவது சிறப்பாகும். நவத் திருப்பதிகளில் திருக்கோளூர் செவ்வாய் தலமாகும். இத்தலத்தில் உள்ள பெருமாளை தரிசிப்பதால் சொத்துப் பிரச்னைகள் தீரும். தினமும் கந்த சஷ்டி கவசம், கந்தகுரு கவசம், திருப்புகழ், முருகன் துதி பாடல்களை பாடி முருகனையும், செவ்வாய் எனப்படும் அங்காரகனையும் வணங்கி வழிபட்டால் புத்திர யோகம், பூமி பாக்யம் முதலான சகல யோகங்களும் வளங்களும் பெருகும்.
செவ்வாய் கிரகத்தினால் உண்டாகக்கூடிய யோகங்கள்
குரு மங்கள யோகம், ருச்சுக யோகம், பிருகு மங்கள யோகம், சந்திர மங்கள யோகம், ஆகியவை செவ்வாய் கிரகத்தினால் ஏற்படும் யோகம்.
செவ்வாய் ஆட்சியோ, உச்சமோ பெற்று லக்னத்திற்கோ சந்திரனுக்கோ கேந்திரம் பெறுவது ருச்சுக யோகம். இதனால் நீண்ட ஆயுள், உயர்ந்த பதவி மற்றவரைவழி நடத்தும் அமைப்பு உண்டாகும். குருவுக்கு கேந்திரத்தில் செவ்வாய் இருப்பது குருமங்களயோகம் இதனால் வீடு, மனை, வண்டி, வாகன யோகம், நீண்ட ஆயுள்யாவும் சிறப்பாக அமையும். சுக்கிரனுக்கு கேந்திரத்தில் செவ்வாய் இருப்பது பிருகுமங்களயோகம். இதனால் வீடு, மனை, வண்டி வாகனம், ஆடை, ஆபரணம் சேரும்.
சந்திர மங்கள யோகம்
ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் தான் இருக்கும் இடத்திலிருந்து 4,7,8 ஆகிய இடங்களை பார்வை செய்வார். செவ்வாயின் பார்வை நற்பலன்களை ஏற்படுத்துவதில்லை. இதில் 7ம் பார்வை மிகவும் கொடியது. 4,8 ம் பார்வைகள் 75 சதவீதம் கொடியது என்கின்றனர் ஜோதிடர்கள். அதே நேரத்தில் செவ்வாயினால் யோகங்களும் ஏற்படுகின்றன. சந்திரனுக்கு கேந்திரத்தில் செவ்வாய் இருப்பது சந்திர மங்கள யோகம். வீடு மனை, செல்வம், செல்வாக்கு யாவும் உயரும். பூமி, மனை சேர்க்கை அதிகரிக்கும்.
புதையல் கிடைக்கும் யோகம்
ஒருவரின் ஜெனன ஜாதகத்தில் செவ்வாயும் சந்திரனும் கூடி 2,4 க்கும் உடையவர்களின் சேர்க்கையுடன் ஜென்ம ராசிக்கு 2ல் இருந்தாலும், ஜென்ம லக்னத்திற்கு 4,11 க்கு உடையவர்கள் 9 ல் நிற்க அவர்களை செவ்வாய் பார்வை செய்தாலும் எதிர்பாராத வகையில் புதையல் கிடைக்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும் என்பது விதி.
செவ்வாயின் பரிகார ஸ்தலம்
செவ்வாய்க்குரிய அதிதேவதையான முருகனையும் சிவனையும் வழிபடுவது. செவ்வாயின் பரிகார ஸ்தலமாக வைத்தீஸ்வரன் கோவில் விளங்குகிறது. சகல வியாதிகளையும் தீர்க்கும் வல்லமை கொண்டு ஸ்ரீவைத்திய நாத சுவாமி இத்ரரிருத்தலத்தில் செவ்வாயின் தொழுநோயை குணப்படுத்த மருத்துவராக வந்தவர். இங்கு செவ்வாய் எனும் அங்காரகன் வீற்றிருப்பதால் இது அங்காரக ஷேத்திரம் எனப்படும். முத்து குமாரசுவாமியே இத்தலத்தின் முருகன். வைத்தீஸ்வரன் கோவில் மயிலாடுதுறையிலிருந்து சிதம்பரம் சாலையில் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
செவ்வாய்கிழமை என்ன செய்யலாம்
செவ்வாய்க்கிழமை மற்றும் செவ்வாய் ஓரையில் செய்வதற்கென்றே சில சுபநிகழ்ச்சிகள் உள்ளன. இந்த நாளில் சொத்துகள் வாங்குவது, விற்பது பற்றி பேசலாம். இடம், தோட்டம், நிலத்தைப் போய் பார்க்கலாம். ஒப்பந்தங்களில் கையெழுத்திடலாம். சகோதரர்களிடையே பிரச்னை இருந்தால் இந்நாளில் பேசித் தீர்க்கலாம். வேலையில் சேரலாம். பூமி பூஜை போடலாம். வீடு மாறலாம். புது வீட்டில் பால் காய்ச்சலாம். இந்நாளில் வாங்கிய கடனை அடைத்தால் மீண்டும் கடன்படாத நிலைமைக்குக்கூட வாய்ப்புண்டு. இந்த நாளில் முருகன் கோயில்களுக்குச் சென்று வழிபட்டால், நாளும், வினையும் நம்மை எதுவும் செய்யாது.செவ்வாய்க் கிழமையில் செய்கின்ற சுபநிகழ்ச்சிகள் நிலைத்து நின்று பலன் தரும். வரும் நாட்களில் செவ்வாய் தோஷம் பற்றி விரிவாக அறிந்து கொள்வோம்.