மன்மத ஆண்டு: கன்னி ராசிக்காரர்கள் என்ன பரிகாரம் செய்யலாம்
-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர். சுப்ரமணியன்
இனிய புத்தாண்டு வாழ்த்துகளோடு ஸ்ரீ மன்மத வருஷத்தில் அடி எடுத்து வைக்கும் கன்னி ராசி அன்பர்களே இவ்வாண்டு நடக்கவிருக்கும் சில பொதுவான பலன்களைப் பார்ப்போம்.
விட்டுக் கொடுக்கும் சுபாவம் கொண்டவரான நீங்கள் அனைவரிடமும் கண்ணியத்துடன் நடந்து கொள்வீர்கள். கடந்த ஆண்டில் சிரமப்பட்டதிற்கு காரணம் ஏழரைச் சனி தான். மேலும் கடந்த ஆண்டு குருவின் நன்மை ஓரளவு உங்களை கீழே தடுக்கி விழாமல் தாங்கி பிடித்தபடி காப்பாற்றி வந்தார். பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனைகளும் கிடைக்கும். நண்பர்கள் உதவி கரமாக இருப்பார்கள். பொருள் லாபம் அதிகரிக்கும் குடும்பத் தேவை அனைத்தும் நிறைவேறும்.
சனி பகவானால் நன்மை
சனி பகவான் ஏழரை ஆண்டு காலத்தை முடித்து மூன்றாம் இடத்தில் இருக்கிறார். இது உன்னதமான நிலை இதுவரையில் இலையுதிர் காலமாக இருந்தது. இந்த ஆண்டு பொற்காலமாக அமையும். சனீஸ்வரர் உங்கள் முயற்சிகள் அனைத்தையும் வெற்றியடையச் செய்வார். எதிர்பார்ப்பு எளிதில் நிறைவேறும். சமூகத்தில் அந்தஸ்த்து மிக்கவராக திகழ்வீர்கள், திட்டமிட்டு செயல்பட்டு எதிலும் வெற்றி காண்பீர்கள்.
குருவும் சிறப்பு நிலை
குரு இப்போது பதினொன்றாம் இடத்தில் இருக்கிறார். இது உங்களுக்கு மிகவும் உன்னதமான நிலை அவர் எண்ணற்ற பல நன்மைகளைத் தருவார். அவரால் பொருளாதார வளம் மேம்படும். உத்தியோகம் சிறப்படையும். புதிய பதவி வாய்ப்பு கிடைக்கப் பெறுவீர்கள், அதோடு குருவின் ஏழு மற்றும் ஒன்பதாம் இடத்துப் பார்வைகள் சாதகமாக விழுகிறது, அதன் மூலமும் நன்மை பன்மடங்கு கிடைக்கும்.
ஆடம்பர செலவுகள்
குரு ஆனி மாதம் 29ம் நாள் 14-07-2015ல் சிம்மத்திற்கு மாறுகிறார். இது சிறப்பான இடம் அல்ல. அங்கு அவர் பொருள் விரயத்தையும், வீண் அலைச்சலையும் ஏற்படுத்தலாம். ஆடம்பர பொருட்கள் வாங்கத் தூண்டுவார். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்துவதில் தாமதமேற்படலாம். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் போகலாம். கணவன் - மனைவி இடையே கருத்துவேறுபாடு வரலாம். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து போகவும். உரவினர் வகையிலும் அதிக நெருக்கம் வேண்டாம். வீடு - மனை வாங்கும் எண்ணம் நிறைவேறும்.
ராகு - கேது
நிழல் கிரகமான ராகு உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்தில் இருக்கிறார் அங்கு அவர் உடல் உபாதையையும் , உறவினர்கள் வகையில் வீண் மனக் கசப்பையும் தரலாம், இன்னொரு நிழல் கிரகமான கேது தற்போது மீனத்தில் இருப்பதால் அலைச்சலையும் மனைவி வகையில் சிற்சில கருத்து வேறுபாட்டையும் ஏற்படுத்தலாம்.
பொருளாதார வளம் அதிகரிக்கும் முயற்சிகள் அனைத்தும் சிறப்பாக நிறைவேறும் மதிப்பு, மரியாதை சிறப்பான முறையில் அமைந்திருக்கும் உங்கள் மீதான அவப்பெயர் மறைந்து மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும் சமூகத்தில் மதிப்பு சுமாராகவே இருக்கும். வீண் விவாதங்களை தவிர்த்து விட்டு கொடுத்து போவது நல்லது.
பரிகாரம்
தினசரி ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம பாராயணம் செய்யவும். புதன் கிழமை தோறும் விரதமிருந்து ஸ்ரீ சக்கரத்தாழ்வாரை மலர்களால் அர்ச்சனை செய்து வர இவ்வாண்டு சகல நன்மை உண்டாகும்.