மார்ச் மாத ராசி பலன் 2021: சுக்கிரன் உச்சத்தால் இந்த ராசிக்காரர்களுக்கு யோகம் தேடி வரும்
மார்ச் மாதத்தில் சூரியன் சுக்கிரன் கூட்டணி கும்பம், மீனம் ராசியில் பயணிக்கின்றன. இந்த மாதத்தில் தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
சென்னை: மார்ச் மாதத்தில் சூரியன் கும்ப ராசியிலும் மீனம் ராசியிலும் பயணம் செய்கிறார். கும்பம் ராசியில் உள்ள சுக்கிரன் இந்த மாதத்தில் மீனம் ராசியில் உச்சமடைகிறார். புதன் இந்த மாத இறுதியில் மீனம் ராசியில் நீசமடைகிறார். உச்சமடைந்த சுக்கிரனுடன் இணைந்த புதன் நீசபங்கமடைகிறார். இந்த கிரகங்களின் சஞ்சாரம் கூட்டணியால் தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன் கிடைக்கும் பரிகாரம் என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.
இந்த மாதம் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் கும்பத்தில் சூரியன், சுக்கிரன், குரு, சனி, புதன் மகரம் ராசியில் சஞ்சரிகிறார். செவ்வாய் ரிஷபம் ராசியில் ராகு உடன் பயணிக்கிறார். கேது விருச்சிகம் ராசியில் சஞ்சரிக்கிறார்.
இந்த மாதத்தில் கிரகங்களின் மாற்றத்தை பார்த்தால் 11ஆம் தேதி புதன் கும்பம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். 14ஆம் தேதி சூரியன் மீனம் ராசியில் பயணம் செய்கிறார். மார்ச் 16ஆம் தேதி சுக்கிரன் மீனம் ராசியில் உச்சமடைகிறார். மார்ச் இறுதியில் புதன் சூரியன், சுக்கிரன் உடன் இணைந்து நீசபங்கமடைகிறார். உச்சமடைந்த சுக்கிரனாலும் நீசமடைந்த புதனாலும் எந்த ராசிக்கு யோகங்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
தனுசு
மார்ச் மாதத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு இரண்டாம் வீட்டில் குரு, சனி,புதன், மூன்றாம் வீட்டில் சூரியன், சுக்கிரன்,ஆறாம் வீட்டில் செவ்வாய், ராகு, விரைய ஸ்தானத்தில் கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. ஏழரை சனியில் பாத சனி இருந்தாலும் ஆட்சி பெற்ற சனியோடு நீச பங்கம் பெற்ற குருவும் குடும்ப ஸ்தானத்தில் இணைந்துள்ளார். இரண்டாம் வீடு வலுவடைந்துள்ளது. குருவும் புதனும் இரண்டாம் வீட்டில் இணைந்துள்ளதால் உங்களின் விருப்பம் நிறைவேறும். கிரகங்களின் கூட்டணி குடும்ப ஸ்தானத்தில் சாதகமாக உள்ளதால் உங்களின் பலம் அதிகரிக்கும். சொத்து சேர்க்கை ஏற்படும். பண வருமானம் அதிகரிக்கும். கடன் பிரச்சினை நீங்கும். பொருளாதார நெருக்கடிகள் முடிவுக்கு வரும். முயற்சி ஸ்தானத்தில் உள்ள சூரியனும், சுக்கிரனும் இருப்பதால் திடீர் அதிர்ஷ்டம் வரும். மாத பிற்பகுதியில் சுக்கிரன் நான்காம் வீட்டில் உச்சமடைவதால் சுகங்களை அனுபவிக்கலாம். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கலாம். சுப செலவுகளை வாங்கலாம். செவ்வாய் ஆறாம் வீட்டில் ராகு உடன் இணைந்திருப்பதால் வம்பு சண்டைக்கு போக வேண்டாம். பிரச்சினைகளை தவிர்த்து விடுங்கள். திடீர் மருத்துவ செலவுகள் வரலாம் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். மாணவர்களுக்கு முன்னேற்றம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இந்த மாதம் உங்களுக்கு சந்திராஷ்டமம் மார்ச் 23ஆம் தேதி மாலை 04.30 மணி முதல் மார்ச் 25ஆம் தேதி இரவு 10.48 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் அவசியம். வண்டி வாகனங்களில் போகும் போது நிதானம் அவசியம்.
மகரம்
மகரம் ராசிக்கு ஜென்ம ராசியில் சனி, குரு, இரண்டாம் வீட்டில் ராகு, செவ்வாய், ஐந்தாம் வீட்டில் செவ்வாய், ராகு, லாப ஸ்தானத்தில் கேது என கிரகங்கள் சஞ்சரிகின்றன. வேலை, தொழிலில் லாபம் கிடைக்கும். குடும்ப ஸ்தானத்தில் உள்ள சூரியன், சுக்கிரனால் குடும்பத்தில் தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்த்து விடவும். புதன் உங்கள் ராசிக்குள் இருந்து இரண்டாம் வீட்டிற்கு நகர்வதால் வளர்ச்சியும் முன்னேற்றமும் அதிகரிக்கும். ஏழரை சனியில் ஜென்ம சனி நடைபெறுவதால் அலைச்சல்கள் அதிகரிக்கும். வேலையில் இடமாற்றம் உண்டாகும். திருமண, சுப காரிய பேச்சுவார்த்தைகள் நடைபெறும் தடைகளை தாண்டி சுப காரியங்கள் நடைபெறும். திருமணம் முடிந்து புத்திர பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு இந்த மாதத்தில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் யோகம் உண்டு. இந்த மாதத்தில் பெரிய அளவில் முதலீடுகளை தவிர்த்து விடுங்கள். உயரதிகாரிகளுடன் மோதலை தவிர்த்து விடுங்கள். பங்குச்சந்தை முதலீடுகளை தவிர்த்து விடவும். மாணவர்களுக்கு திடீர் மறதிகள் வரலாம். படிப்பில் கவனமும் அக்கறையும் தேவை. இந்த மாதத்தில் சந்திராஷ்டமம் உங்களுக்கு மார்ச் 25ஆம் தேதி இரவு 10.48 மணி முதல் மார்ச் 28ஆம் தேதியன்று அதிகாலை 01.20 மணி வரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் செயல்களில் விழிப்புணர்வும் அவசியம். வண்டி வாகன போக்குவரத்தில் கவனமும் பொறுமையும் தேவை. புதிய முதலீடுகளைத் தவிர்த்து விடவும்.
கும்பம்
விரைய ஸ்தானத்தில் சனி, குரு, புதன், உங்கள் ராசியில் சூரியன், சுக்கிரன், நான்காம் வீட்டில் செவ்வாய், ராகு, பத்தாம் வீட்டில் கேது என கிரகங்கள் உள்ளன. திடீர் விரைய செலவுகள் வரும். குடும்பத்தில் தேவையில்லாத குழப்பங்கள் வரும். திருமணத்திற்கு வரன் பார்க்க இது சரியான நேரமாக இருந்தாலும் சில தடைகள் வரும். தடைகளை தாண்டி சுப காரியங்கள் நடைபெறும். ராசியில் உள்ள சுக்கிரனால் தொழில் வளர்ச்சியில் முன்னேற்றம் ஏற்படும். பலமும் மன தைரியமும் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். சுக்கிரன், சூரியன் இரண்டாம் வீட்டிற்கு நகரும் போது உங்களுக்கு பண வரவு அதிகரிக்கும். தொழில் வியாபரத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கும். குடும்பத்தில் சில சிக்கல்கள் வந்தாலும் எளிதில் பிரச்சினைகள் சரியாகும். திடீர் திருமணங்கள் நடைபெறும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து வரனை தேர்வு செய்யவும். குடும்ப வாழ்க்கையில் பொறுமையும் நிதானமும் தேவைப்படும் மாதம். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இந்த மாதத்தில் உங்களுக்கு 28ஆம் தேதி அதிகாலை 01.20 மணி முதல் 30ஆம் தேதி அதிகாலை 01.42 மணிவரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை. பேச்சிலும் வாகன போக்குவரத்திலும் நிதானம் தேவை. இந்த நாட்களில் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. பண முதலீடுகளை தவிர்த்து விடவும்.
மீனம்
மீனம் ராசிக்கு இந்த மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் லாப ஸ்தானத்தில் சனி,குரு, புதன், விரைய ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன், மூன்றாம் வீட்டில் செவ்வாய் ராகு, ஒன்பதாம் வீட்டில் கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. இந்த மாதத்தில் முதல் 10நாட்களில் கிரகங்களின் கூட்டணியால் தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். முயற்சிகளும் முன்னேற்றங்களும் அதிகரிக்கும். சகோதரர்கள், நண்பர்களின் உதவி கிடைக்கும். புதிய பதவிகள் தேடி வரும். வேலை தேடுபவர்களுக்கு இந்த மாதம் சாதகமாக இருக்கும். அரசு வேலைக்காக எதிர்பார்த்துக்கொண்டிருப்பவர்களுக்கு நல்ல ரிசல்ட் கிடைக்கும். சுப காரியங்கள் நடைபெறும். தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். கொடுத்த கடன்கள் வசூலாகும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். சகோதரர்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாத பிற்பகுதியில் சூரியன், சுக்கிரன் கிரகங்கள் விரைய ஸ்தானத்தில் சஞ்சரிக்கின்றன. சுக்கிரன் உங்கள் ராசியில் உச்சமடைகிறார். முகத்தில் பொலிவு கூடும். வேலை தொழிலில் புதிய மாற்றம் ஏற்படும். சுப செலவுகள் நிறைய ஏற்படும் என்பதால் சேர்த்து வைத்த பணம் கரையும். மொத்தத்தில் மீனம் ராசிக்காரர்களுக்கு மார்ச் மாதம் மகத்தான மாதமாக அமைந்துள்ளது. இந்த மாதத்தில் உங்களுக்கு சந்திராஷ்டமம் மார்ச் 02ஆம் தேதி மாலை 04.29 மணி முதல் மார்ச் 04ஆம் தேதி மாலை 06.20 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் பேச்சில் நிதானம் தேவை. மார்ச் 30ஆம் தேதி அதிகாலை 01.42 மணி முதல் இரண்டு நாட்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை.