இதமான காற்று... காதில் ஒலிக்கும் திருப்பாவை- மகத்துவம் தரும் மார்கழி
மார்கழி மாதம் வந்தாலே அனைவருடைய மனதிலும் ஒரு உற்சாகம் தொற்றிக்கொள்ளும். அதிகாலை எழுந்து திருப்பாவை, திருவெம்பாவை முதலியவை படிப்பது சிறப்பு.
-அஸ்ட்ரோ சுந்தரராஜன்
சென்னை: மார்கழி மாதம் வந்தாலே அனைவருடைய மனதிலும் ஒரு உற்சாகம் தொற்றிக்கொள்ளும். அதிலும் பெண்களின் உற்ச்சாகத்தை பற்றி கேட்கவே வேண்டாம்.
நாளை என்ன கோலம் போடுவது என்பதே அவர்களின் நாள் முழுவதின் சிந்தனையாக இருக்கும். அத்தனை சிறப்பு வாய்ந்த மார்கழி மாதம் நாளை பிறக்கிறது. அதிகாலை எழுந்து திருப்பாவை, திருவெம்பாவை முதலியவை படிப்பது சிறப்பு.
அதிகாலை வேலையில் எழுவது பல நன்மைகளைத்தரும் என்று சாஸ்திரங்களும், விஞ்ஞானமும் கூறுகின்றன. வைகறைப் பொழுதில் சூரியனிடம் இருந்து பூமியை வந்தடையும் ஒளிக் கதிர்கள் சக்தி வாய்ந்தவை. இவை நம் உடலில் படும்போது நரம்புகளுக்கு புதுத்தெம்பையும், உற்சாகத்தையும் கொடுக்கின்றன.
அதிகாலை நீராடல்
கண்கள் ஆரோக்கியத்தையும், உடல் வலிமையையும் பெறுகின்றன. அதனால் தான், சூரிய நமஸ்காரம் செய்வது மிகச் சிறந்த வழிபாடு என்று நம் முன்னோர்கள் கூறினார்கள். இதனாலேயே விடியற் காலை நேரம் உஷத் காலம் எனப்படுகிறது. இந்த தேவதையின் செழிப்பான கிரணங்கள் விடியற்காலையில் பூமியை நோக்கிப்பாய்வதால் தான் அந்த வேளையில் நீரில் மூழ்கி நீராடுதல் விஷேஷ சொல்லப்படுகிறது. இதனால்தான் அதிகாலை நேரத்தில் நீரும் வெதுவெதுப்பாக காணப்படுகிறது.
பிரம்மாவின் சக்தி
அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில்எழுந்திருக்க வேண்டும் என்று நம் சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன.
சூரியன் உதித்தெழுவதற்கு நாற்பத்தெட்டு நிமிடங்களுக்கு முன் பிரம்ம முகூர்த்தம் ஆரம்பமாகின்றது. படைத்தற் தொழிலைப் புரியும் நான்முகன் தன்னுடைய நாவில் சரஸ்வதியை அமரச் செய்து 24 கலைகளையும் படைத்தார். எனவே பிரம்ம முகூர்த்தம் என்பது பிரம்மனுடைய சக்தியை நினைவாற்றலை தன்னைத்தானே வழிபப்படுத்திக்கொண்டு மேன்மை அடைய வேண்டிய நிலைக்கு அடித்தளம் இடும் காலமாகும்.
தியானம் செய்வோம்
அத்துடன் பிரம்மனுடைய பத்தினி சரஸ்வதி தேவி விழித்துச் செயற்படும் நேரம் பிரம்மமுகூர்த்தம் என்பதும் நம்பிக்கை இதனால் இந்நேரம் சரஸ்வதி யாமம் எனவும் அழைக்கப்படுகின்றது. பிரம்மமுகூர்த்தத்தில் எழுந்து செயற்படும் போது மனநிலையானது ஒரு நிலைப்படுகின்றது. அதற்கு ஏற்ற காலமாக இது விளங்குகின்றது. அதிகாலையில் சூரிய வெப்பம் கிடையாது. சந்திரனுடைய வெப்பதிட்ப குளுமையும் கிடையாது. இவை இரண்டுக்கும் மத்தியில் நிலவுவது பிரம்ம முகூர்த்தம் இந்நேரத்தில் எழுந்து ஜெபிப்பது. தியானம் செய்வது, யோகம் செய்வது, கல்வி கற்பது, வேலைகள் செய்வது சிறந்த பயனைத் தருவதோடு ஞாபக சக்தியும் விருத்தியாகும்.
பலன் தரும் மந்திரங்கள்
உபாசனைக்கு காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருக்க வேண்டும் என்பது முக்கியமானதொரு கடமையாகும். இக்காலம் ஜீவன்களை எழச்செய்வது போல மந்திரங்களையும் எழச் செய்கின்றது. மந்திரங்கள் ஜெபிப்பவனுடைய மனதிலிருந்து படிப் படியாக அவனுடைய நுண் அலைகளை ஒலி அலைகளாக மேலே எழுப்பிச் செபம் செய்பவனது மந்திர ஒலியானது வெளிப்படச் செய்கிறது. இவ்வாறு பிரம்மமுகூர்த்தத்தில் அவன் செய்யும் ஜெபம் அவன் செல்லும் இடமெங்கும் அவனை அறியாமலே நன்மைகளை விளைவிக்கின்றது.
அதிகாலையில் சிறப்பு
அதிகாலையில் எழுவதும், படிப்பதும் சிறந்தது என பெரியவர்கள் கூறுவார்கள். இதை இன்று விஞ்ஞானமும் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்துக்கள் அதிகாலையில் எழுந்து வீடு வாசல் பெருக்கி, நீர் தெளித்து கோலமிடுவார்கள். தங்கள் முன் வாசலை திறந்து வைப்பார்கள். அதிகாலை லக்ஷ்மி வீட்டிற்குள் வரும் நேரம் என்பது நம்பிக்கை. இவ்வதிகாலை பொழுதே பிரம்ம முகூர்த்தமாகும். இக்காலத்தில் எழுந்து படித்தால் ஒரு போதும் மனதிலிருந்து மறக்காது தலையில் இடது பக்கம் இருக்கும் கல்வி மையம் செயற்படும் போது படிப்பது மிகவும் பயனைத் தரும் என்பது விஞ்ஞான கண்டுபிடிப்பு. இதனால் அதிகாலையில் எழுந்து படிக்க வேண்டும்.
தெய்வீக காரியங்கள்
பிரம்மமுகூர்த்ததில் எழுவதற்குறிய பழக்கத்தை நாமே பழகிக் கொள்ள வேண்டும். பிரம்மம் அறியப்படாதது போல பிரம்ம முகூர்த்தத்தின் இனிமையும் சாதரமாக அறிய முடியாதது. அந்நேரத்தில் எழுந்து அனுபவத்தாலே அதன் பயன் விளங்கும். இந்நேரத்தில் தெய்வங்களுக்கு ஜெபம் செய்து மேன்மையடையலாம். தெய்வீகக் காரியங்கள் படிப்படியாக மேலோங்கி வளரும். சாதாரணமாக அந்நேரத்தில் அதாவது அதிகாலையில் எழுந்து எமது கடமைகளை செய்தால் அந்த நாள் முழுவதும் உற்சாகமும் மனஅமையும் கிடைப்பதை உணரலாம்.
மஹாவிஷ்ணுவுக்கும், சிவபெருமானுக்கும், வாயுபுத்திரன் அனுமனுக்கும் உகந்த மார்கழி மாதத்தில் நாமும் இறைவனை வழிபட்டு சகல நன்மைகளும் பெறுவோம். சிறப்பு வாய்ந்த தேவர்களின் பிரம்ம முகூர்த்த காலமான மார்கழியில் நாமும் பிரம்ம முகூர்த்த காலத்தில் எழுந்து பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய முப்பெரும் தேவர்களின் அருளை பெருவோமாக!