மார்கழி மாத ராசி பலன் 2020: இந்த நான்கு ராசிக்காரர்களுக்கு மன மகிழ்ச்சி கூடும்
மார்கழி மாதம் பிறந்து விட்டது. இந்த மாதத்தில் நவகிரகங்களின் சஞ்சாரம், கூட்டணி, பார்வையால் மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
சென்னை: மகத்துவம் நிறைந்த மார்கழி மாதம் பிறந்து விட்டது. சூரியனின் பயணம் இந்த மாதத்தில் தனுசு ராசியில் உள்ளது. தனுசு குருபகவானின் வீடு. குருவின் வீட்டில் சஞ்சரிக்கும் சூரியனால் சில ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். இந்த மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் ரிஷபம் ராசியில் ராகு, விருச்சிகம் ராசியில் கேது, சுக்கிரன், தனுசு ராசியில் சூரியன், புதன், மகரம் ராசியில் குரு, சனி, மீனம் ராசியில் செவ்வாய் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. சந்திரன் சஞ்சாரம் தனுசு ராசியில் தொடங்கி தனுசு ராசியில் முடிகிறது. மார்கழி மாதத்தில் 16-12-2020 முதல் 13-01-2021 வரை மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் சாதகங்கள் நடைபெறும் என்று பார்க்கலாம்.
இந்த மாதம் சில கிரகங்கள் இடப்பெயர்ச்சி அடைகின்றன. சனிபகவான் வாக்கியப்பஞ்சாங்கப்படி தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். மார்கழி 2ஆம் தேதி புதன் பகவான் தனுசு ராசிக்கு மாறுகிறார். செவ்வாய் 9ஆம் தேதி மேஷ ராசிக்கு மாறுகிறார்.19ஆம் தேதி சுக்கிரன் தனுசு ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைகின்றனர். 20ஆம் தேதி புதன் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார்.
மார்கழி மாதத்தில் முக்கிய விஷேசங்கள் உள்ளன. மார்கழி 10ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி, மார்கழி 15 ஆருத்ரா தரிசனம், 27ஆம் தேதி கூடாரவல்லி ஆண்டாள் தரிசனம் செய்ய திருமண தடைகள் நீங்கும். 28ஆம் தேதி அமாவாசை தினம் அனுமன் ஜெயந்தி ஆகிய திருவிழாக்கள் உள்ளன. பல்வேறு சிறப்புகள் கொண்ட மார்கழி மாதத்தில் மேஷம், ரிஷபம்,மிதுனம், கடகம் ராசிக்காரர்களுக்கு பலன்கள், பரிகாரங்கள் என்ன என்று பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே, மார்கழி மாதத்தில் சூரியன் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். புதனும் ஒன்பதாம் வீட்டில் சூரியனுடன் உங்கள் ராசிக்கு ராசிநாதன் செவ்வாய் விரைய ஸ்தானத்தில் இருக்கிறார். 9ஆம் தேதிக்கு மேல் உங்கள் ராசியில் ஆட்சி பெற்று அமர்வது சிறப்பு. சுக்கிரன் கேது உடன் இணைந்து எட்டாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். மாத பிற்பகுதியில் ஒன்பதாம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சியாகி சூரியனுடன் சுக்கிரன் இணைகிறார். 20ஆம் தேதிக்கு மேல் ஒன்பதாம் வீட்டில் உள்ள புதன் இடப்பெயர்ச்சியாகி 10ஆம் வீட்டிற்கு நகர்கிறார். இந்த கிரகங்களின் சஞ்சாரத்தினால் மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு நிறைய நன்மைகள் நடக்கப்போகிறது. கணவன் மனைவி இடையே ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். நெருக்கம் கூடும், உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உறவினர்களின் உதவியும் ஆதரவும் கிடைக்கும். வழக்கு விவகாரங்களில் வெற்றி கிடைக்கும். நண்பர்களால் நிறைய நல்ல விசயங்கள் நடைபெறும். வேலையில் இருந்த அழுத்தங்கள், பிரச்சினைகள் முடிவுக்கு வரும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் உதவியும் ஆதரவும் கிடைக்கும். கலைத்துறையில் இருப்பவர்கள் கவனமாக இருப்பது அவசியம். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும் வெளிநாட்டு தொழில் தொடர்புகள் சிறப்படையும். பணம் விவகாரங்களில் கவனமாக இருக்கவும். விலை உயர்ந்த நகை,பணத்தை பத்திரமாக வைத்திருக்கவும். சுக்கிரன் 9ஆம் வீட்டிற்கு வந்த பின்னர் மாறுதல் அதிகரிக்கும். பெண்களால் நன்மை உண்டாகும். குரு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் வங்கி ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும், ஆசிரியர் வேலைக்கு தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். சனி உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழில் உத்தியோகம் சிறப்படையும், செய்யும் செயல்கள் சிறப்படையும். இல்லத்தரசிகள் இந்த மாதம் முற்பகுதியில் பொறுமையும் நிதானமும் தேவை. பண வரவு அதிகரிக்கும். கூடவே வரவுக்கு மீறிய சுப செலவுகள் வரும். மாத பிற்பகுதியில் வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். வேலையில் மாற்றமும் சம்பள உயர்வும் கிடைக்கும். உறவினர்களிடையே இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். திருமண சுப காரிய பேச்சுவார்த்தைகள் வெற்றியில் முடியும். அரசு வேலைக்கு முயற்சி செய்யலாம். வியாபாரிகளுக்கு முதலீடுகளில் லாபம் அதிகரிக்கும்.
ரிஷபம்
சுக்கிரபகவானை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷபம் ராசிக்காரர்களே, உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் சுகாதிபதி சூரியன் மறைகிறார். கூடவே புதனும் இணைந்து மறைகிறார், மாத முற்பகுதியில் உங்களின் முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படும். குருவின் பார்வையால் தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் கவனம் தேவை வியாபாரம் விருத்தியாகும், 20 ஆம் தேதிக்குப் பின்னர் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும் வெளிநாட்டு தொழில் தொடர்புகள் சிறப்படையும். உயர் கல்வியில் மேன்மை நிலை உண்டாகும். மாத பிற்பகுதியில் பெரிய பொறுப்புகள் பதவிகள் தேடி வரும். கணவன் மனைவி இடையே அந்நியோன்னியம் அதிகரிக்கும் வீண் செலவுகள் குறையும். பண வரவு அதிகரிக்கும் வங்கி சேமிப்பும் கூடும். வண்டி வாகனம் வாங்கலாம். வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்கலாம். பிள்ளைகளுக்கு வரன் தொடர்பாக பேசலாம். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வாடிக்கையாளர்கள் அதிகம் வருவார்கள். வேலை செய்யும் இடத்தில் அங்கீகாரம் கிடைக்கும்.
லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய் 12ஆம் வீட்டில் மறைகிறார். சுப செலவுகள் வரலாம். சொத்து விற்பனையில் லாபம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகள் மூலம் செலவுகள் வரும். கணவன் மனைவி இடையே இருந்த பிணக்குகள் நீங்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் மருத்துவ செலவுகள் கட்டுப்படும். மாத பிற்பகுதியில் மகிழ்ச்சிகரமான செய்திகள் வெளியூரில் இருந்து வரும். வேலை விசயத்தில் அவசரப்பட வேண்டாம் பொறுமையும் நிதானமும் தேவை. கலைத்துறையினருக்கு பல வழிகளில் பணம் வரும். அரசியல்வாதிகள் விழிப்புணர்வுடன் இருக்கவும். பெண்களுக்கு உடல் சூடு காரணமாக சில பிரச்சினைகள் வரலாம் கவனம் தேவை. சுக்கிரன் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் இருக்கிறார் தம்பதியரிடையே ஒற்றுமை அதிகரிக்கும். 19ஆம் தேதிக்குப் பின்னர் பெண்கள் விசயத்தில் கவனம் தேவை. பொன்நகைகளை யாருக்கும் இரவல் கொடுக்க வேண்டாம். சனி உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பரம்பரை சொத்தான பழைய வீடு உங்கள் பங்குக்கு கிடைக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. ஜாமீன் கையெழுத்து போட்டு யாருக்கும் பணம் வாங்கி தர வேண்டாம். பங்குச்சந்தை முதலீடுகளை தவிர்த்து விடவும். ராகு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் குழப்பம் உண்டாகும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை கேது உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் நண்பர்களினால் நன்மை கிடைக்கும். ஆருத்ரா தரிசனம் நாளில் சிவபெருமானை தரிசனம் செய்வது நல்லது. சந்தோஷமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுங்கள். சர்க்கரை தானமாக கொடுங்கள்.
மிதுனம்
மிதுனம் ராசிக்காரர்களுக்கு மார்கழி மாதம் அருமையான மாதம்.சூரியன் ஏழாமிடத்தில் இருக்கிறார் அரசுமுறை பயணம் உண்டாகும் அரசாங்கத்துடன் செய்துகொண்ட ஒப்பந்த தொழில் சிறப்படையும். செவ்வாய் லாப ஸ்தானத்திற்கு வருகிறார். சொத்து விற்பனை மூலம் பண வரவு அதிகரிக்கும். திடீர் பண வரவு, ஷேர் மார்க்கெட் மூலம் லாபம் வரும் கடன் பிரச்சினை தீரும். வரவேண்டிய தொகை கைக்கு வரும். சூரியன் ஏழாம் வீட்டில் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். கணவன் மனைவி இடையை சில பிரச்சினை வரலாம் விட்டுக்கொடுத்து செல்லவும். புதன் ராசிக்கு ஏழாம் வீட்டில் இருக்கிறார் கூட்டுத் தொழில் சிறப்படையும் வியாபாரம் விருத்தியாகும் தாய் மாமனால் நன்மை உண்டாகும் 20ஆம் தேதிக்குப் பின்னர் மாணவர்கள் படிப்பில் கவனம் தேவை. சுக்கிரன் ஆறாமிடத்தில் இருக்கிறார் பெண்களால் தொல்லை உண்டாகும், 19ஆம் தேதிக்குப் பின்னர் கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும், குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். பிள்ளைகள் திருமணம் விசயமாக பேசலாம். சனி உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் எதிர்பாராத பண வரவு உண்டாகும் அஷ்டமத்து சனி காலமாக இருப்பதால் உத்தியோகத்தில் மன உளைச்சல் அதிகரிக்கும். மார்கழியில் பிற்பகுதியில் லாபகரமான மாதம் வேலையில் இருந்த பிரச்சினைகளை சமாளிப்பீர்கள். புதன் சாதகமாக இருப்பதால் உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும் புது வேலை கிடைக்கும். ராகு பன்னிரெண்டாம் இடத்தில் இருக்கிறார் அலைச்சல் அதிகரிக்கும் கேது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் எதிரிகளால் தொல்லை உண்டாகும். புதன்கிழமை ஸ்ரீ சக்கரத்தாழ்வாரை வணங்குங்கள் நன்மைகள் நடக்கும்.
கடகம்
கடகம் ராசிக்காரர்களே சூரியன் ஆறாம் வீட்டில் வலிமையாக சஞ்சரிக்கிறார். நோய் நொடிகள் நீங்கும். பிள்ளைகளால் இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கும். உங்களின் மன உளைச்சல் நீங்கும். முகத்தில் சந்தோஷ ரேகைகள் தென்படும். சுக்கிரன் சாதகமாக இருப்பதால் வீடு மனை வாங்கலாம். ஜனவரி 3ஆம் தேதி முதல் சுக்கிரன் ஆறாம் வீட்டில் மறைவதால் கவனம் தேவை. கணவன் மனைவி விட்டுக்கொடுத்து செல்வது. குரு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் வாழ்க்கைத்துணையினால் சந்தோஷம் அதிகரிக்கும் உறவினர்களுடன் நல்லுறவு அதிகரிக்கும். புதன் உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் தாய் மாமனுடன் பிரச்சினையை தவிர்க்கவும் ஷேர் மார்க்கெட் முதலீடுகளை தவிர்க்கவும் 20ஆம் தேதிக்குப் பின்னர் தரகு கமிஷன் வியாபாரம் சிறப்படையும். சுக்கிரன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பெண்களால் நன்மை உண்டாகும், 19ஆம் தேதிக்குப் பின்னர் நகைகளை அடகு வைக்க வேண்டியிருக்கலாம். மார்கழி மாதத்தின் பிற்பகுதியில் யாருக்கும் புதிதாக கடன் கொடுக்க வேண்டாம், பண விசயத்தில் கவனம் தேவை. வேலைச்சுமை கூடும். வேலையில் இடமாற்றம் ஏற்படும். சனி உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் தகவல் தொடர்பு சிறப்படையும், தொழில் கூட்டாளிகளுடன் நல்லுறவு நீடிக்கும். உங்களுக்கு இந்த மாதத்தில் நண்பர்கள் உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். குருவின் பார்வை மாதம் முழுக்க உங்கள் ராசிக்கு கிடைப்பதால் நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். ராகு காலத்தில் துர்க்கைக்கு விளக்கேற்றி வழிபடுங்கள் பச்சரிசி தானமாக கொடுங்கள்.