திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் - 29 #Margazhi,#Thiruppaavai
சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்
பொற்றாமரையடியே போற்றும் பொருள்கேளாய்!
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.
பாடல் விளக்கம்:
கண்ணா! அதிகாலையில் உன் பொன்போன்ற தாமரை பாதங்களை வணங்க வந்திருக்கிறோம். அதற்கான காரணத்தைக் கேள்! பசுக்களை மேய்த்துப் பிழைக்கும் ஆயர்குலத்தில் பிறந்த நீ, எங்களது இந்த சிறு விரதத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடாதே! நீ தரும் சிறு பொருட்களுக்காக இந்த விரதத்தை மேற்கொள்ளவில்லை. என்றும், ஏழுபிறவிகளிலும் நீ எங்கள் குலத்தில் பிறக்க வேண்டும். எங்களை உன் உறவினர்களாக ஏற்க வேண்டும். உனக்கு மட்டுமே சேவை செய்யும் பாக்கியத்தை தரவேண்டும். இது தவிர மற்ற விருப்பங்களைஎல்லாம் நீயே அழித்து விடு.
திருப்பள்ளி எழுச்சி - பாடல் 9
வின்னக தேவரும் நன்னவு மாட்டா
விழுப் பொருளே உன தொழுப்பாடியோங்கள்
மண்ணகத்தே வந்து வாழ செய்தானே
வன் திருப்பெருந்துரையை வழி அடியோம்
கண்ணகத்தே நின்று களி தரு தேனே
கடலமுதே, கரும்பே விரும்படியார்
என்னகத்தாய் உலகுக்கு உயிர் ஆனாய்
எம் பெருமா பள்ளி எழுந்தருளாயே.
பாடல் விளக்கம் :
கடவுள்களால் கூட அறிய முடியாத, அடைய முடியாத கடவுளே, நாங்கள் உங்கள் பாதங்களில் வீழ்ந்து கிடக்கும் சேவகர்கள். எங்களுக்காக இந்த மண்ணில் இறங்கி வந்து எங்களுக்கு அருள் புரிந்து வாழ வழி செய்தவனே. வளமிக்க திருப்பெருந்துறையில் வாழும் கடவுளே, எங்களை மகிழ்விக்கும் களி தரும் தேன் நீ. பாற்கடலில் கடைந்தெடுத்த அமுதம் நீ, தித்திக்கும் கட்டிக் கரும்பு நீ. பக்தர்களின் சிந்தனையெல்லாம் நீயே, உலகுக்கு உயிர் ஆக திகழும் எம்பெருமானே, பள்ளி எழுந்தருளாய் என்று அழைக்கிறார் மாணிக்கவாசகர்.