மார்கழி தேய்பிறை அஷ்டமி: உயிர்களுக்கு உணவளிக்கும் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர்
மார்கழி தேய்பிறை அஷ்டமி தினத்தில் மதுரையில் மீனாட்சியம்மனும், சுந்தரேஸ்வரரும் ரிஷப வாகனத்தில் சட்டத்தேரில் வெளி வீதிகளில் உலா வருவார்கள். அந்தத் தேரினை பெண்கள் இழுத்து வருவது விழாவின் சிறப்பம்சமாகும்.
மதுரை: மார்கழி மாத தேய்பிறை அஷ்டமியன்று சகல ஜீவராசிகளுக்கும் இறைவன் படியளப்பதால் அன்றைய தினம் இறைவன் சிவபெருமானை வழிபட்டால் வாழ்நாள் முழுவதும் உணவு கிடைக்கும். வளர்ச்சியும் கூடும். சகல ஜீவராசிகளுக்கும் இறைவன் படியளக்கும் இனிய திருநாள், மார்கழி மாதம் 3ஆம் தேதி வியாழக்கிழமை அன்று வருகின்றது. மார்கழி அஷ்டமி தினத்தில் மதுரையில் மீனாட்சியம்மனும், சுந்தரேஸ்வரரும் ரிஷப வாகனத்தில் சட்டத்தேரில் வெளி வீதிகளில் உலா வருவார்கள். அந்தத் தேரினை பெண்கள் இழுத்து வருவது விழாவின் சிறப்பம்சமாகும்.
தேய்பிறை அஷ்டமி திதியன்று சகல ஜீவ ராசிகளுக்கும் இறைவன் படியளப்பதாக ஐதீகம். எனவே அன்றைய தினம் சிவபெருமானை வழிபட்டால் வாழ்நாள் முழுவதும் உணவு கிடைக்கும். இன்றைய நாளில் அன்னதானம் செய்தால் புண்ணியம் பெருகும். பொருளாதார நிலையும் உயரும். மாதங்களில் நான் மார்கழி என்று கிருஷ்ணர் உயர்வாக கூறிய மார்கழி மாதத்தில் வரும் இந்த மகத்தான தினத்தில் முறையாக ஈசனை வழிபட வேண்டும். கைப்பிடி அரிசியேனும் யாருக்காவது தானமாகக் கொடுக்க வேண்டும்.
படியளக்கும் திருநாள் வழிபாட்டையும் செய்து வந்தால் முன்னேற்றம் பன்மடங்காகும். அன்று ஈசனின் சன்னிதியில் சிறிதளவு அரிசியை வைத்து வழிபட்டு அதைக் கொண்டுவந்து உணவில் சேர்த்தால், உணவு பஞ்சம் இன்றி வாழலாம் என்பது ஐதீகம்.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர்
கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும் படியளப்பவன் ஈசன். ஓரறிவு உயிரணுவில் தொடங்கி ஆறறிவு மனிதன் வரை அவனின் அருட்பார்வையினால் தான் ஜீவிக்கிறது. உலகில் உள்ள அனைத்து ஜீவ ராசி களுக்கும் சிவபெருமான் உணவு படியளக்கும் திரு விழாவே, அஷ்டமி பிரதட்சண சுவாமி புறப்பாடு ஆகும். இது மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் மிகவும் பிரசித்திப் பெற்றது. இந்த விழா அங்கு, ரிஷப வாகன சட்டத்தேர் உலாவாக கொண்டாடப்படுகிறது. இந்த படியளக்கும் திருநாள் எதற்காக சிறப்பிக்கப்படு கிறது என்பது பற்றிய ஒரு சுவாரசியமான புராணக் கதையைப் பார்ப்போம்.
மார்கழி அஷ்டமி
ஒருநாள் உமாதேவி ஈஸ்வரனிடம், இவ்வுலக மக்கள் பிறப்பு இறப்பின்றி முக்தி பெற என்ன வழி எனக் கேட்டாள். மார்கழி மாத அஷ்டமி தினத்தில் சிவாலய பிரதட்சணம் செய்தால் அந்த பலன் பெறலாம் என்று கூறினார் என்கிறது ஸ்கந்தபுராணம். பாவங்கள் விலகி முக்தி தரும் பிரதட்சணம் இது. சகல ஜீவ ராசிகளுக்கும் இறைவன் படியளக்கும் இனிய திருநாள் இன்று தேய்பிறை அஷ்டமியில் நடைபெறுகிறது.
படியளந்த ஈசன்
கைலாயத்தில் பார்வதி தேவிக்கு ஒரு சந்தேகம் எழுந்தது. அனைத்து உயிர்களுக்கும் சிவபெருமான் உணவு அளிக்கிறாரா? இல்லையா?'என்பது தான் அது. சந்தேகம் என்று வந்த பின்னர் அதை சோதித்து பார்க்க வேண்டும்தானே. ஒரு எறும்பை எடுத்து குடுவைக்குள் போட்டு அடைத்து வைத்து விட்டாள் பார்வதிதேவி. குடுவைக்குள் அடைப்பட்டுள்ள அந்த சின்னஞ் சிறிய உயிருக்கு ஈசன் எப்படி படியளக்கிறார் பார்ப்போம் என்று நினைத்தாள்.
வழக்கம் போல், சிவபெருமான் அன்றைய தினம் அனைத்து உயிர்களுக்கும் படியளந்து விட்டு திரும்பி வந்தார். அவரை இடை மறித்த பார்வதி, அனைத்து ஜீவ ராசிகளுக்கும் படியளப்பதாக கூறுகிறீர்களே. இன்று அனைத்து உயிர்களுக்கும் படியளந்து முடித்துவிட்டீர்களா? என்று எதுவும் அறியாததுபோல கேட்டாள்.
சிவனின் திருவிளையாடல்
உடனே மனதிற்குள் சிரித்துக்கொண்ட சிவபெருமான், ஆம் தேவி அதில் உனக்கென்ன சந்தேகம்..? என்று கேட்டார். இன்று ஈசன் நம்மிடம் வசமாக சிக்கிக் கொண்டார் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்ட பார்வதி தேவி, எறும்பை அடைத்து வைத்திருந்த குடுவையை எடுத்து வந்தாள். அந்தக் குடுவையை திறந்து பார்த்தபோது, அதற்குள் இருந்த எறும்பு, ஒரு அரிசியை சாப்பிட்டுக் கொண்டிருந்தது. இதைப் பார்த்த பார்வதி தேவிக்கு அதிர்ச்சியாக இருந்தது.
மதுரையில் திருவிழா
ஈசனை சந்தேகப்பட்டதற்காக அவரிடம் மன்னிப்பும் கேட்டுக் கொண்டார். இந்த திருவிளையாடல் நடந்த நாள் மார்கழி மாதத்தில் வருகிற தேய்பிறை அஷ்டமி திதி ஆகும். அன்றுதான் அஷ்டமி பிரதட்சணம் செய்யும் நாள். இந்த படியளக்கும் லீலை சொக்கநாதர் வீற்றிருக்கும் மதுரையம்பதியில் திருவிழாவாக நடத்தப்படுகிறது.
அஷ்டமி சப்பரம்
மார்கழி அஷ்டமி தினத்தில் மதுரையில் மீனாட்சியம்மனும், சுந்தரேஸ்வரரும் ரிஷப வாகனத்தில் சட்டத்தேரில் வெளி வீதிகளில் உலா வருவார்கள். அந்தத் தேரினை பெண்கள் இழுத்து வருவது விழாவின் சிறப்பம்சமாகும். அனைத்து உயிர்களுக்கும் இறைவன் படியளக்கும் நிகழ்வை நினைவு கூறும் வகையில் அஷ்டமி சப்பரம் புறப்பாட்டின்போது கோவில் நிலத்தில் விளைந்த நெல் , அரிசி ஆகியவை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுவது வழக்கம். ஏற்ற தாழ்வு இன்றி அனைத்து மக்களுக்கும் உணவளிக்க வேண்டும் என்ற அடிப்படையில் படியளக்கும் விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் பங்கேற்று அங்கு கொடுக்கும் பிரசாதத்தை கொண்டு வந்து வீட்டில் அரிசி பானையில் போட்டு வைக்க வேண்டும்.
பொருளாதார வளர்ச்சி
இந்த மார்கழி அஷ்டமியன்று சகல ஜீவராசிகளுக்கும் இறைவன் படியளப்பதால் சிவபெருமானை வழிபட்டால் வாழ்நாள் முழுவதும் உணவு கிடைக்கும். வளர்ச்சியும் கூடும் என்பது நம்பிக்கை எனவே அன்றைய தினம் அன்னதான வைபவங்களை நாம் செய்தால் புண்ணியமும் நமக்கு வந்து சேரும். பொருளாதார வசதியும் பெருகும். இன்றைய நாளில் பெரிய அளவில் நம்மால் தான தர்மங்கள் செய்ய முடியாவிட்டாலும்,நம்மால் இயன்ற அளவு, விரதமிருந்து மார்கழி அஷ்டமி திருநாளில் நம்மால் முடிந்த உதவியைப் பிறருக்குச் செய்து மீனாட்சி சுந்தரேஸ்வரரின் அருளைப் பெறலாம்.