திருமணத்திற்கு தடை: பெண்களின் சந்தோஷத்தை கெடுக்கும் தோஷங்கள் - பரிகாரங்கள் என்ன?
சென்னை: மங்களகாரகன் எனப்படும் செவ்வாய் பெண்ணின் மாங்கல்யத்திற்கு தடையாக அமைந்து விடுகிறது. மாங்கல்ய தோஷமும், சர்ப்ப தோஷமும் மணமாலை கிடைப்பதில் தாமதத்தை ஏற்படுத்துகின்றன. ஆயில்யமும், மூலமும் மணமகன் வீட்டாரை தெறித்து ஓட வைக்கிறது. இந்த தோஷங்களுக்கான பரிகாரங்களை செய்து பெண்களுக்கு மணவிழா காண வைப்பது எப்படி என்ன பரிகாரம் செய்யலாம் என்று ஜோதிடர் பழனியப்பன்.
காலம் இருக்கிற இருப்புக்கு சூரியனுக்கே ராக்கெட் விட்டுறலாம். அது ஒரு மேட்டரே அல்ல. ஆனால் வரன் தேடி அலைந்து அந்த வரனும் மனதுக்குப் பிடித்த மாதிரி அமைவது இருக்கே? குதிரைக்கு கொம்பு முளைக்கிற கதைதான். இதில் பெண்ணை பெற்வர்கள் படுகிற பாடு இருக்கே. அடடா சொன்னாலும் ஆறாது, எழுதினாலும் தீராது.
வயது வந்த பொண்ணுக்கு எந்த அவப்பெயரும் வந்துவிடாமல், ஒருத்தன் கையிலே பிடிச்சு கொடுத்திட்டா நிம்மதி இது பெற்றோர் தரப்பு சிந்தனை அது நியாயம்தான். சிலருக்கு இளமையில் திருமணம் நடந்துவிடும். கொடுத்து வைத்தவர்கள். சிலருக்கு எல்லா வளமும் இருந்தும் இந்தக் கல்யாணம் மட்டும் கைகூடாமல் கடுக்காய் கொடுத்துக் கொண்டிருக்கும். என்னன்னு தோண்டி துடுப்பெடுத்து ஆராய்ந்து பார்த்தால், காரணம் இப்படி இருக்கும்.
Rasi Palan Today: இன்றைய ராசிபலன்
சந்தோஷத்தைக் கெடுக்கும் தோஷங்கள்
தோஷங்கள் பலவகை. செவ்வாய் தோஷம், இது ஊர் அறிந்த ரகசியம். இன்னொன்று இருக்கிறது புனர்பூ தோஷம். தாமத திருமணத்திற்கு உரிய காரணிகள் என்றாலும் பிரபலம் இல்லை. பிரபலம் பெயரில் தான் இல்லையே தவிர, தருகிற பலன் சூப்பர் வில்லன். அடுத்து நாகதோஷம் அல்லது சர்ப்ப தோஷம். 1, 7 மற்றும் 2, 8ல் ராகு கேது அமர்வதால் ஏற்படுவது. இந்த கிரக நிலையைப் பார்த்தாலே ஜோதிடர்கள் சொல்லாமல் விடுவதில்லை.
எந்த நட்சத்திரம் யாருக்கு ஆகாது
இது தவிர்த்து இருக்கிறது நட்சத்திர தோஷம். இதுவும் ரொம்பப் பிரபலம். ஆயில்ய தோஷம். மாமியாருக்கு ஆகாது. ஆயில்யம் இல்லாத இடமா பார்க்கணும். மூல நட்சத்திர தோஷம். மாமனாரை மூலையில் முடக்கிப்போடும். ஆண் மூலம் அரசாளும், பெண் மூலம் நிர்மூலம். கேட்டை நட்சத்திர தோஷம் மூத்த கொழுந்தனாருக்கு ஆகாது. விசாக நட்சத்திர தோஷம். இளைய கொழுந்தனுக்கு ஆகாது என்று கட்டம் கட்டி விடுவார்கள். ஒரு வகையில் இவர்களும் பாவம் செய்தவர்கள்தான் போலும்.
ஆயில்யம் மாமியாருக்கு ஆகாதா
ஒரு பெண்ணின் ஜாதகத்தில் மாமியாரை குறிக்கும் இடம் பத்து. அந்த வீட்டில் ராகு கேது அல்லது சனி இருந்து அந்த வீட்டுக்கு உரிய கிரகம் லக்னத்திற்கு மறைவு ஸ்தானங்களில் நீசமாகவோ, அல்லது வக்கிரம் பெற்ற நிலையிலோ இருந்தால் மாமியார் ஸ்தானம் வலுகுன்ற வாய்ப்புண்டு. அதேசமயம் மாமியாரின் ஆயுள் பலத்தைச் சொல்ல மாமியாரின் ஜாதகத்தைப் பார்ப்பதுதான் நல்லது. பார்க்க தேவையில்லாதது ஆயில்ய நட்சத்திரத்தை.
மாமனாரின் ஆயுள்
அதேபோல் ஒரு பெண்ணின் ஜாதகத்தில் மாமனாரை குறிக்கும் இடம் 3ம் பாவம். இவ்விடத்தில் முன் சொல்லியது போல் சனி அல்லது ராகு கேது இருந்து அந்த வீட்டிற்குரிய கிரகம் லக்னத்திற்கு மறைவு ஸ்தானங்களில் நீசம் அல்லது வக்கிரம் பெற்று காணப்பட்டால் மாமனார் ஸ்தானம் வலுகுன்றும். மற்றபடி ஆயுளை நிர்ணயிப்பது மாமனார் ஜாதகமே என்கின்றனர் ஜோதிடர்கள்.
பழமொழி படுத்தும் பாடு
பொதுவாக ஜோதிடத்தின் பெயரால் உலா வரும் பழமொழிகள் ஏராளம். இதற்கு கால் முளைத்த இடத்தைக் கண்டுபிடிப்பது சிரமம்.
ஆனால் இன்று முளைத்திருப்பது கால் அல்ல ரெக்கை. உதாரணமாக 'பூரடாத்தில் பெண் பிறந்தால் நூலாடாது என்றும், உறவாடாது' என்றும் சொல்கிறார்கள். அது என்னவாம்? அதா... கூட்டுக் குடும்ப வாழ்க்கைக்கு அந்த பெண்கள் லாயக்கற்றவர்கள். தான் தன் சுகம் என்று குறுகிய வட்டத்திற்குள் வாழ்க்கையை அமைத்துக் கொள்வார்கள். தலையனை மந்திரத்தை ஓதுவதில் படுகெட்டியான இவர்கள், கட்டிய கணவனை கைக்குள் போட்டுக் கொண்டு மாமனார் மாமியாரை விட்டுத் தனிக்குடித்தனம் போவார்கள்.
பரணி தரணி ஆளும்
கேட்டையிலே பிறந்த பொண்ணு கோட்டையை கட்டினாலும் கட்டுவா? கோட்டையை அழிச்சாலும் அழிப்பா . அவிட்டத்தில் பிள்ளை பிறந்தா தவிட்டு பானை எல்லாம் தங்கம். பரணி தரணி ஆளும். நாலாவது பொண்ணுடா... நாதாங்கி முளைகூட மிஞ்சாது. இது எட்டாவது பிறப்பு குட்டிச்சுவர் - ஒரு குதர்க்கம். ஒரு பிள்ளையை பெத்தா உரியிலே சோறு, நாலு பிள்ளையை பெத்தா நாயோட்டில் சோறு இப்படி வழக்கில் சொல்லிக்கொண்ட வார்த்தையை வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்ப்பதால் ஏக களேபரம்.
தோஷத்திற்கு பரிகரம்
செவ்வாய் சந்திரன் வீட்டில் நீச்சம் மற்றும் குரு உச்சம் பெரும் இடத்தில நீச்சம் பெற்றிருந்தால் அதிக தண்ணீர் குடிப்பதும், தியானம் செய்வதும், தெய்வ ஸ்லோகங்கள் அடிக்கடி உச்சரிப்பதும் இதற்கு பரிகாரம். திருமணம் செவ்வாய் தோஷத்தால் தடை பட்டால் வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள முத்துக்குமார சுவாமியை வணங்கி வர விரைவில் திருமணம் நிச்சயமாகும்.
வியாழக்கிழமையில் தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றி அர்ச்சித்து வழிபட திருமணம் கை கூடும். ஞாயிறு தோறும் ராகு காலத்தில் தீபம் ஏற்றி துர்க்கையை வழிபட திருமண தடை நீங்கும்.