அடங்காபிடாரி மனைவி... அடக்கி ஆளும் கணவன்- உங்க ஜாதகத்தில பிரச்சினை இருக்கா
மதுரை: மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பார்கள். அதேபோல கணவன் அமைவதெல்லாம் கடவுள் கொடுத்த வரம். ஒருவருக்கு தாமதமாக திருமணம் நடந்தது. அடங்காப்பிடாரி மனைவி அமைய, மன உளைச்சல் ஏற்பட்டது. சுகர் கூடவே வந்தது. மனைவியின் டார்ச்சரால் பிரசர் பாடாய் படுத்தியது. தினசரி போர்க்களமானது இருந்தாலும் இரண்டு குழந்தைகளுக்காக பொறுத்துப்போனார். மனதில் அழுத்தம் அதிகமாக 44 வயதில் திடீரென மரணமடைந்தார் அந்த இளைஞர். பொறியியலில் பிஎச்டி படித்து கல்லூரி விரிவுரையாளராக வேலை செய்து அமைதியான குணம் கொண்டவர் என்று பெயர் எடுத்த அந்த இளைஞருக்கு விதி மனைவி வடிவத்தில் வந்து உயிரை காவு வாங்கி விட்டது.
சிலருக்கு திருமணம் தாமதமாகிறது. சிலருக்கோ காதல் திருமணம் நடக்கிறது. பெரும் பணக்காரர்களோ... பிரபல நட்சத்திரங்களோ ஆடம்பரமாக திருமணம் செய்து கொண்டு அதே வேகத்தில் விவாகரத்து செய்கின்றனர். இதற்குக் காரணம் ஜாதகத்தில் உள்ள கோள்களின் கூட்டணிதான்.
மண வாழ்க்கையில் குழப்பங்கள், சிக்கல்கள், மனமுறிவு, வழக்கு, விவாகரத்து போன்ற துயரங்கள் ஏற்படுவதற்கு சில கிரக அமைப்புகளே மூலகாரணம். இந்த விஷயத்தில் குரு இருக்கும் இடம், சனி பார்க்கும் இடம் தன, குடும்பஸ்தானம் எனும் இரண்டாம் இடம், களத்திரஸ்தானம் எனும் ஏழாம் இடம் ஆயுள், மாங்கல்யஸ்தானம் எனும் எட்டாம் இடம் முக்கியம்.
குடும்பம் ஜெயிக்க வேண்டும்
எந்த வீட்டில்
ஒரு பெண்ணை அடக்கி
ஒரு ஆண் ஜெயிக்கிறானோ
அங்கே ஓர் மிருகம் ஜெயிக்கிறது
என்று பொருள்...
எந்த வீட்டில்
ஒரு ஆணை அடக்கி
ஒரு பெண் ஜெயிக்கிறாளோ
அங்கே ஓர் அடங்கா பிடாரி ஜெயிக்கிறது
என்று பொருள்...
எந்த வீட்டில்
கணவன் மனைவியிடமும், மனைவி கணவனிடமும்
தோற்றுப்போகிறார்களோ அங்கே
ஒரு குடும்பம் ஜெயிக்கிறது
என்று பொருள்
இது யாரோ எழுதிய கவிதை. இப்படித்தான் சில குடும்பங்களில் கணவனும் மனைவியும் தோற்று குடும்பத்தை ஜெயிக்க வைக்கின்றனர்.
வாயில்லா பூச்சியும் வாயாடி மனைவியும்
திருமணத்திற்கு முன்பு கணவன், மனைவியின் குணநலன்களை அறிந்து கொள்வது நல்லது. இல்லாவிட்டால் வாயில்லா பூச்சிக்கு வாயாடி மனைவி அமைந்து வாட்டி வதைத்து விடுவார். ஆண் ஜாதகத்தில் 2ஆம் இடமான வாக்கு ஸ்தானதிபதி நீச்சமாகி அங்கு சுப கிரகம் இருந்தால் அவர் அமைதியானவர். அதே போல பெண் ஜாதகத்தில் வாக்கு ஸ்தானதிபதி உச்சமாகி அங்கு பகை கிரகம் இருந்தால் வாயாடி மனைவியாவாள்.
கடவுளாகும் கணவர்
உங்களின் மனைவியின் குணம் சரியாக இல்லை என்றால் உங்கள் ஜாதகத்தில் சுக்கிரனின் நிலையும் சரியாக இல்லை என்று அர்த்தம். ஒருவர் மனைவியை நல்ல முறையில் உள்ளங்கையில் வைத்து பாதுகாக்கிறார் என்றால் அவராது ஜாதகத்தில் சுக்கிரன் நல்ல நிலையில் இருக்கிறார் என்று அர்த்தம்.
திருமண வாழ்க்கை நரகம்
ஜாதகத்தில் ஏழாம் வீட்டில் சூரியன்,சந்திரன்,செவ்வாய் மூவரும் கூட்டணி போட்டு அமைந்து இருந்தால் திருமண வாழ்வு நரக வாழ்கையாகி விடும்.
ஏழாம் அதிபதியுடன் சூரியன் இணைந்திருந்தாலோ சூரியன் ஏழாம் வீட்டை பாத்தாலும். சிறப்பான மனைவி அமையமட்டார். சனி செவ்வாய் இணைந்து ஏழாம் இடத்தில் இருந்தால் பெண்கள் இளம் வயதில் துணைவரை இழக்கும் நிலை ஏற்படும்.
குடும்பத்தில் குழப்பம்
லக்னத்திற்கு ஏழாமிடமான களத்திர ஸ்தானத்தில் குரு பகவான் தனித்து நின்றால், மண வாழ்க்கையில் நிச்சயமற்ற தன்மை உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி குறையும். கணவன்- மனைவிக்குள் சதா பிரச்னைகள் ஏற்படும். வழக்குகளை கூட சந்திக்க வேண்டியிருக்கும். சனி ராகு இணைந்து மகரம், கும்பத்தில் இருந்தால் உடல் நலக்குறைவு ஏற்படும், திருமணவாழ்வு பிரச்சினையாகும், சண்டை சச்சரவு ஏற்படும். சில வீட்டில் கொலையே நடக்கும். விபரீத முடிவுகள், விவாகரத்து, பிரிவு ஏற்படும். அந்த இடத்தை சுபர் பார்த்தால் பிரச்சினை தீரும்.
எட்டாம் வீட்டின் அதிபதி
ஆண், பெண் ஜாதகத்தில் லக்னத்திற்கு எட்டாம் இடம் மிக முக்கியமான இடமாகும். இந்த இடம் ஆயுள், மாங்கல்யம் என்ற இரண்டு முக்கிய அம்சங்களை பற்றி அறிந்துகொள்ளும் இடம். இந்த எட்டாம் இடத்தின் அதிபதி எந்த நட்சத்திரத்தில் இருக்கிறாரோ, அந்த நட்சத்திர அதிபதி எந்தக் கிரகமோ அந்த கிரகத்தினுடைய நட்சத்திரத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்யாமல் தவிர்த்து விடலாம்.
ஆண்டாள் மடியில் ரங்கமன்னார்
ஆண்டாள் மடியில் ரங்கமன்னார் எழுந்தருளும் அந்த அற்புத திருக்கோலத்தை தரிசித்தால் தம்பதியர் ஒற்றுமை பலப்படும். ஸ்ரீரங்கத்தில் ஆண்டாள் மடியில் ரங்கநாதர் எழுந்தருளுவார். மயிலாப்பூர் மாதவப்பெருமாள் கோவிலில் ஆண்டாள் மடியில் மாதவன் எழுந்தருளுவதை காண்பது அழகு. அதே போல ஆடிப்பூரத்தின் ஏழாம் நாளில் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் மடியில் ரங்கமன்னார் எழுந்தருளி அருள்பாலிப்பார் அதை காண்பதன் மூலம் தம்பதியர் ஒற்றுமை பலப்படும். என்னதால் கிரகங்கள் ஏடாகூடமாக இருந்தாலும் விட்டுக்கொடுத்து செல்லும் தம்பதியர்கள் இருக்கும் குடும்பத்தில் குழப்பங்கள் வரவே வராது.