சனியும் செவ்வாயும் சண்டைக்காரங்க கூட்டணி சேர்ந்தா தசாபுத்தியில் என்ன நடக்கும்
நவகிரகங்களில் செவ்வாய் வீரத்தின் நாயகன், ரத்தகாரகன், சனி ஆயுள்காரகன், ஜீவனகாரகன், செவ்வாயும் சனியும் யுத்த கிரகங்கள் பகையாளிகள் ஒரு ராசியில் சேர்ந்திருந்தால் அந்த கிரகங்களின் தசாபுத்தியில் பாதிப்புகள்
சென்னை: நவகிரகங்கள் நம்மை ஆள்கின்றன. ஜாதகத்தில் கிரகங்கள் இருக்கும் நிலையைப் பொருத்து அந்த கிரகங்களின் தசாபுத்தி நடக்கும் போது நன்மையும் தீமையும் நடக்கிறது. கிரகங்களின் கூட்டணியும் கூட நல்லது கெட்டதை நிர்ணயிக்கின்றன. நவகிரகங்களில் சிறப்பு வாய்ந்த கிரகமான செவ்வாய் தனது தசா புக்தி காலங்களில் பல்வேறு விதமான நற்பலன்களை தருவார். அதே போல சனி பகவான் ஆயுள் காரகன், ஜீவனகாரகன் சனிபகவான் ஒருவரின் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் ஆயுளும் ஜீவனும் அற்புதமாக இருக்கும்.
செவ்வாய் பகவான் ஒரு மனிதனுக்கு உடல் வலிமை, ரத்த ஒட்டம், நோய் எதிர்ப்பு திறன், அதிகாரப் பதவி, உடன் பிறப்பு, நிர்வாக திறன் போன்றவற்றிற்கு காரகனாக இருக்கிறார். நம் உடலில் ரத்தத்திற்கும், வெப்பத்திற்கும் காரணமாகவும், காரகமாகவும் இருப்பவர் செவ்வாய். ஜாதக கட்டத்தில் செவ்வாயின் நிலையைக் கொண்டு இதை தீர்மானிக்க வேண்டும். ரத்த ஓட்டம் சீராக இருக்கவும், ரத்த அணுக்கள் வேறு சில தன்மைகள் குறையாமலும், கூடாமலும் இருக்க செவ்வாய்தான் காரணம். மூளைக்கு ஆற்றலும், சக்தியும் தரக்கூடிய கிரகம்.
லக்னத்திற்கு பத்தாம் இடமான ஜீவன ஸ்தானத்திற்கு செவ்வாயின் தொடர்பு ஏற்பட்டால் அதாவது, பத்தாம் வீட்டில் செவ்வாய் இருப்பது அல்லது பார்ப்பது, பத்தாம் அதிபதியுடன் சேர்க்கை, பார்வை பரிவர்த்தனை பெற்று இருப்பது உத்யோகத்திற்கு பலம் தரும் அமைப்பாகும். காலாகாலத்தில், முயற்சி செய்த உடனேயே நல்ல வேலை கிடைத்துவிடும்.
ஏழு ஆண்டுகள் செவ்வாய் திசை
செவ்வாய் பகவான் மேஷம், விருச்சிகம் ஆகிய ராசிகளுக்கு அதிபதி. மகரம் செவ்வாயின் உச்ச வீடாகவும், கடகம் செவ்வாயின் நீச்ச வீடாகவும் இருக்கிறது. செவ்வாய் ஒரு பாவகிரகமாக இருப்பதால் ஜாதகத்தில் லக்னத்திற்கு 3,6,10,11 ஆகிய உப ஜெய ஸ்தானங்களில் அமையப் பெற்றால் நன்மையான பலன்கள் ஏற்படும். ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் திசை என்பது சுமார் 7 வருடங்கள் காலம் நடைபெறும்.
சுறுசுறுப்பு அதிகரிக்கும்
மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய செவ்வாய் கிரகத்திற்குரிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் திசை முதல் திசையாக வரும். ஜாதகத்தில் செவ்வாய் பகவான் நன்கு பலம் பெற்று குழந்தை பருவத்தில் செவ்வாய் திசை நடைபெற்றால் அந்த குழந்தைக்கு பலம் வாய்ந்த, நோய்கள் எளிதில் அணுகாத உடலமைப்பு ஏற்படும். எப்போதும் சுறுசுறுப்புடன் செயல்படும் ஆற்றல் அக்குழந்தைகளுக்கு உண்டாகும். ஜாதகரின் இளம் பருவ வயதில் செவ்வாய் திசை நடைபெற்றால் கல்வியில் மேன்மையான நிலையை அடைவார். நல்ல உடல் பலம் இருப்பதால் விளையாட்டு துறைகளில் மிக பெரும் சாதனை செய்யும் அமைப்பு ஏற்படும். தைரியம் கூடும்.
பதவி பட்டம் யோகம்
ஜாதகரின் மத்திம வயதுகளில் செவ்வாய் திசை நடக்குமானால், அந்த ஜாதகர் சிறந்த நிர்வாக திறன் பெற்றவராக இருப்பார். அரசாங்கத்தில் மிக உயர் பதவிகளை வகுக்கும் யோகம் ஏற்படும். முதுமை காலத்தில் செவ்வாய் திசை நடைபெற்றால் மரணம் குறித்த பயமற்ற நிலை உண்டாகும். பூமி, மனை போன்றவற்றால் அனுகூலம் உண்டாகும், சமுதாயத்தில் மக்களால் மதிப்படக்கூடிய கௌரவமான பதவிகள் பெறும் யோகம் ஏற்படும்.
நன்மை தரும் செவ்வாய்
செவ்வாய் பலமாக இருந்து நல்ல ஆதிபத்யம் பெற்று அவரது தசை நடக்குமானால் சகோதர சகோதரிகள் மூலம் பெரும் அனுகூலம் ஏற்படும். பெரிய பதவிகளில் உள்ளவர்கள், தொழில் அதிபர்களின் தொடர்பு கிடைத்து அதன் மூலம் முன்னேற்றம் உண்டாகும். உடல்பலம், மனோபலம் அதிகரிக்கும். தெற்கு திசையில் இருந்து நல்ல செய்திகள், உதவிகளை அனுப்பி நற்பலன் ஏற்படுத்துவார். அரசுத்துறையில் பணிபுரிவோருக்கு உத்யோக உயர்வு ஏற்படும்.
வாகன விபத்து
செவ்வாய் பலம் குறைந்து இருந்து பாவ கிரகங்களுடன் சேர்க்கை பெற்றால் அவரது தசாபுத்தி காலத்தில் வாகன விபத்துகளை சந்திக்க நேரிடும். ரத்தக்காயங்கள், வெட்டுக்காயங்கள்,தலையில் அடிபடுதல் போன்றவற்றை ஏற்படுத்துவார். நெருப்பு மற்றும் இயந்திரங்கள் சம்பந்தமான தொழிற்சாலைகளில் பணிபுரிவோருக்கு பல பாதகமான சூழ்நிலைகளை ஏற்படுத்துவார்.
தொழில் லாபம்
மேஷ லக்னம் ராசியில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் தலைமை பதவி, அதிகாரம், ஆட்சி பீடத்தை தருவார். விருச்சிக லக்னம் ராசியில் பிறந்தவர்களுக்கு உயர்பதவி, ஆட்சி, அதிகாரத்தால் யோகம் தருவார். ரிஷப லக்னம் ராசியில் பிறந்தவர்களுக்கு மனைவி வழியில் கூட்டுத் தொழில் மூலம் யோகம் வரும். துலா லக்னம் ராசிக்காரர்களுக்கு சொல்லாற்றல், மனைவி வகையில் யோகம் வரும்.
கல்வி செல்வம் யோகம்
கடக லக்னம் ராசியில் பிறந்தவர்களுக்கு தொழில், பூர்வ புண்ணிய அமைப்பு, குழந்தைகளால் செல்வாக்கு கிடைக்கும். சிம்ம லக்னம் ராசியில் பிறந்தவர்களுக்கு நிலபுலன்கள், தந்தை வழியில் பூர்வீக சொத்து மூலம் கல்வி, செல்வம் மற்றும் வெளிநாட்டு தொடர்புகளால் யோகம். மிதுனம், கன்னி லக்னங்களில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் பலமாக இருந்தால் யோகமாகவும், பலமற்று இருந்தால் பாதகமாகவும் அமையும்.
அதிர்ஷ்டம் கிடைக்கும்
தனுசு லக்னம் ராசியில் பிறந்தவர்களுக்கு பூர்வ புண்ணிய பலத்தின்படி யோகம், திடீர் அதிர்ஷ்டங்கள், பிள்ளைகளால் யோகம் கிடைக்கும். மகர லக்னம் ராசியில் பிறந்தவர்களுக்கு தாய், தாய்வழி உறவுகளால் யோகம், நில புலன்கள், கல்வி செல்வத்தால் யோகம் வரும். கும்ப லக்னம் ராசியில் பிறந்தவர்களுக்கு செவ்வாயின் பலத்தை வைத்து யோகங்கள் கிடைக்கும். மீன லக்னம் ராசியில் பிறந்தவர்களுக்கு பூர்வீக சொத்துகள், தந்தை வழியில் சொல்லாற்றல் மூலம் அதிர்ஷ்டம் வரும்.
செவ்வாய் தோஷமல்ல
திருமணத்திற்கும், புத்திர பாக்கியத்திற்கும் செவ்வாய் பங்கு முக்கியமானது. செவ்வாய் சேர்க்கை பார்வை, ஜாதகத்தில் இருக்கும் நிலையைப் பொருத்து சிலருக்கு திருமண தடை ஏற்படும். எனவே செவ்வாய் தோஷம் இருக்கிறதே என்று பயப்பட வேண்டாம் பரிகாரம் இருக்கிறது. எந்த லக்னம், ராசியில் பிறந்தாலும் செவ்வாய் நீச்சமாக 6, 8, 12 ஆகிய இடங்களில் இருக்க வேண்டும். அதேபோல 6, 8, 12 ஆகிய கிரகங்களுடன் சேராமலும் இருக்க வேண்டும்.
பழமையான ஜோதிட நூல்களில் செவ்வாய் லக்னத்திற்கு 2, 4, 7, 8, 12ல் இருந்தால் தோஷம் ஆகும். இப்படி தோஷம் உள்ள ஜாதகத்தை அதேபோன்று தோஷமுள்ள ஜாதகத்துடன் சேர்க்க வேண்டும்.
பகையாளிகள் கூட்டணி
செவ்வாயும் சனியும் பகை கிரகங்கள். ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாயுடன் சனி சேர்ந்திருந்தால் இரும்பு, இயந்திரங்கள் சம்பந்தமான வகையில் ஜீவனம் அமையும். உடல்திறன் மிக்கவர்களாக இருப்பார்கள். சங்கீத ரசனை இருக்கும். ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் திசையில் சனி பக்தியானது 1 வருடம் 1 மாதம் 9 நாள்கள் நடைபெறும். சனி பகவான் பலம் பெற்று அமையப் பெற்றால் நல்ல தன லாபமும், பூமி மனை வீடு, வண்டி வாகனங்கள் வாங்கும் யோகமும், மனைவி பிள்ளைகளால் அனுகூலம், ஆடை ஆபரண சேர்க்கை, அரசு வழியில் உயர் பதவியினை வகிக்கும் யோகம் உண்டாகும்.
சனி செவ்வாய் சேர்க்கைப் பெற்றாலோ, சனி செவ்வாய் ஒருவரைவொருவர் பார்த்து கொண்டாலோ எதிர்பாராத விபத்துகள் ஏற்படும், பணம் பொருள் தொலையும்.
ஆபத்து என்ன
சனி மகா திசையில் செவ்வாய் புத்தி 1 வருடமும் 1 மாதமும் 9 நாட்கள் நடைபெறும். செவ்வாய் பலம் பெற்றிருந்தால் அரசு வகையில் ஆதரவு, மனை பூமி வீடு, வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். அதே நேரம் சனி செவ்வாய் இணைந்தே, பார்த்துக் கொண்டோ இருந்தால் இந்த கால கட்டத்தில் எதிர்பாராத விபத்துக்களால் ரத்த காயம்படுதல், அறுவை சிகிச்சை செய்யக் கூடிய நிலை ஏற்படும். வண்டி வாகனங்களால் வீண் விரயம் ஏற்படும். எதிர்பாராமல் கெட்ட பெயர் உண்டாகும். பொருள் இழப்பு ஏற்படும்.
பரிகாரம் என்ன
செவ்வாய்க்குரிய கடவுள் முருகப்பெருமான். எல்லா முருகன் தலங்களும் செவ்வாய் பரிகாரத் தலங்களே. அறுபடை வீடுகளுக்கு சென்று முரு கப்பெருமானை வணங்குவதால் செவ்வாயால் உண்டாகும் பிரச்னைகள் விலகும். பழநியில் தண்டாயுதபாணி செவ்வாயாகவே அருள்பாலிக்கிறார். மயிலாடுதுறை அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோயில் செவ்வாய் பகவானுக்கு முக்கிய பரிகாரத் தலமாக விளங்குகிறது. அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்பும், பின்பும் இங்கு வந்து வழிபடுவது சிறப்பு பாதிப்புகள் குறையும். நவகிரக திருப்பதிகளில் திருக்கோளூர் செவ்வாய் தலமாகும். இத்தலத்தில் உள்ள பெருமாளை தரிசிப்பதால் சொத்துப் பிரச்னைகள் தீரும். தினமும் கந்த சஷ்டி கவசம், கந்தகுரு கவசம் படிக்கலாம். முருகனையும், செவ்வாய் வணங்க பாதிப்புகள் நீங்கி செல்வங்களும் யோகங்களும் வரும்.