பூமியை நெருங்கிய செவ்வாய் - வானில் அதிசயத்தை பாருங்க - ஆபத்தில்லை
பூமிக்கு மிக அருகாமையில் செவ்வாய் கிரகம் நெருங்கி வருவதால் நீலவானம் செந்நிறமாக மாறும் அதிசயத்தை கண்டு ரசிக்கலாம் என அறிவியலாளர்கள் கூறியுள்ளனர்.
டெல்லி: பூமிக்கு மிக அருகில் செவ்வாய் கிரகம் நெருங்கி வருவதால் நீல வானம் செந்நிறமாக மாறும் என வானியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். வானத்தில் நிகழ உள்ள அதிசயத்தை இன்றும் நாளையும் இரண்டு நாட்கள் காணலாம் எனவும் அறிவித்துள்ளனர்.
சந்திரன் பூமிக்கு அருகில் நெருங்கி வரும் போது மிகப் பிரகாசமாக, பிரமாண்ட வடிவில் காட்சியளிக்கும். இதை சூப்பர் மூன்' என்கிறார்கள். முழு கிரகணத்தின் போது ரத்த சிவப்பாக காட்சியளிக்கிறது அதை ப்ளட் மூன் என்றும் வானியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். அதேபோல் இப்போது செவ்வாய் கிரகம் பூமிக்கு வெகு அருகில் வந்திருக்கிறது.
பூமி சூரியனை முழுதாகச் சுற்றி வர 365 நாள்கள் ஆகுமென்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், செவ்வாய் சூரியனை முழுதாகச் சுற்றி வர 687 நாள்கள் ஆகும். அதாவது கிட்டத்தட்ட பூமியை விட இரண்டு மடங்கு அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது. இதனால் 26 மாதங்களுக்கு ஒரு முறை செவ்வாய் கிரகமும், சூரியனும், பூமிக்கு நேரெதிரே வந்துவிடும்.
பூமியை நெருங்கும் செவ்வாய்
செவ்வாய் ஒவ்வொரு ராசியிலும் ஒன்றரை மாதங்கள் சஞ்சரிப்பார். கடகத்தில் சூரியன் இருக்க தற்போது செவ்வாய் மகர ராசியில் உச்சம் பெற்றிருப்பது கூடுதல் சிறப்பு. 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை செவ்வாய் கிரகம் பூமியை நெருங்கும். கடந்த 2003ம் ஆண்டு பூமிக்கு அருகில் செவ்வாய் வந்தது. 15 ஆண்டுகளுக்கு பின்னர் இன்றும், நாளையும் செவ்வாய் கிரகம் பூமிக்கு அருகாமையில் நெருங்கி வருவதால் அப்போது நீலவானம் செந்நிறமாக மாறப்போகும் எழில் கோலத்தை கண்டு ரசிக்கலாம் என ஹைதராபாத்தில் உள்ள பிர்லா அறிவியல் மைய இயக்குனர் டாக்டர் பி.ஜி. சித்தார்த் தெரிவித்துள்ளார்.
தெளிவாக தெரியும் செவ்வாய்
தென்கிழக்கு திசையில் தெளிவாக இருக்கும் சூழலில் `சாஜிட்டேரியஸ்' என்ற நட்சத்திரக் கூட்டத்துக்குக் கீழே செவ்வாய் காட்சி தரும். இதை எல்லோரும் வெறும் கண்களால் பார்க்க முடியும். அலாஸ்கா, வடக்கு கனடா, கிரீன்லாந்து மற்றும் ஐஸ்லாந்து ஆகிய வட கோளப் பகுதியில் வசிப்பவர்கள் செவ்வாயைக் காண வாய்ப்பில்லை. ஐரோப்பா, ஆசியா, தெற்கு கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, அன்டார்டிகா ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் செவ்வாயைத் தெளிவாகக் காணலாம்.
செவ்வாயினால் பாதிப்பா?
சூரியக் குடும்பத்தில் நான்காவது இடத்தில் இருக்கும் இந்தக் கோள், ஜாதகரீதியாகப் பெரும் பலம் வாய்ந்த கிரகம். துணிவுக்குப் பெயர் பெற்ற இந்த செவ்வாய், பூமியை நெருங்குவதால் பாதிப்புகள் ஏற்படுமோ என்ற அச்சம் பலருக்கும் எழுந்துள்ளது. இந்த நிகழ்வால் இயற்கையில் பெரும் மாறுதல் உருவாகுமோ என அச்சமும் உருவாகியுள்ளது.
பரிகாரம் யாருக்கு
மங்களகாரகன் என்றும் பூமிகாரகன் என்று போற்றப்படும் செவ்வாய் பகவானால் நன்மையே நடைபெறும் என்பதால் கவலைப்பட வேண்டாம். எனினும் கிருத்திகை, உத்திரம், உத்திராடம், பூராடம், திருவோணம், ரோஹிணி, அஸ்தம், அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் கூடுதல் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். அவர்களின் இஷ்ட தெய்வங்களை வணங்கலாம். செவ்வாயின் அதிபதி முருகனை வணங்கலாம்.
செவ்வாய் பகவானை வணங்குவோம்
பூதேவியின் திருமகனாக அவதரித்தவர் செவ்வாய் என்பதால், அவரால் பூமிக்கு எந்தக் கெடுதலும் உருவாக வாய்ப்பில்லை. ரத்த அழுத்தம், மன அழுத்தம், கடுமையான உஷ்ணம், கோபம் போன்றவற்றிலிருந்து நம்மை விடுவிப்பவர் செவ்வாய் பகவான். எனவே, பூமியை நெருங்கி வரும் இந்த நேரத்தில் செவ்வாய் பகவானை வணங்கினால் நன்மைகள் நடைபெறும். செவ்வாய் நெருங்குவதால் பூமிக்கு பாதிப்பு ஏற்படும் என்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்று ஜோதிடர்கள் கூறியுள்ளனர்.