ரத்தக்காரகன் செவ்வாய்... என்னென்ன நோய்கள் வரும் தெரியுமா?
Recommended Video
சென்னை: நவகிரகங்களில் சூரியனின் தளபதி செவ்வாய். ரத்தக்காரகன். ஒருவரின் உடம்பில் நோயை உணரவைப்பவர் செவ்வாய்தான். விபத்து நடக்கவும், ரத்தம் இல்லாமல் மரணம் நடப்பதற்கும் காரணம் செவ்வாய்தான். செவ்வாய் ஜாதகத்தில் வலிமையானவராக இருந்தால் உடம்பில் வேகமான ரத்த ஓட்டம் இருக்கும் சுறுசுறுப்பானவராக இருப்பார். செவ்வாய் நீசம் பெற்றிருந்தாலோ, பாவ கிரகங்களின் சேர்க்கை பெற்றாலோ, பாவிகளின் பார்வையால் பலம் குன்றியிருந்தால் நோய்கள் தாக்கும் விபத்துக்கள் ஏற்படும். ஜாதகத்தில் செவ்வாய் பாதிக்கப்பட்டால் என்னென்ன நோய்கள் வரும் என்று பார்க்கலாம்.
ஒரு வீட்டில் அடிக்கடி தீ விபத்து ஏற்படும், ஒருவருக்கு வெட்டுக்காயம் அடிக்கடி வரும். இதற்குக் காரணம் செவ்வாய் பலம் குன்றி இருப்பதுதான். மின்சாதனங்கள் அடிக்கடி பழுதாகும். தலைமுறை தலைமுறையாக ரத்தத்தில் உண்டாகும் நோய்கள்,ரத்தசோகை, ரத்த புற்றுநோய், கல்லீரல் மூலம் உண்டாகும் நோய், உடல் உணர்வற்று போவது, அதிக உஷ்ணத்தால் உடலில் கொப்பளம் ஏற்படுவது மண்ணீரல் பாதிப்பு, ஆயுதங்களால் உடல் சிதைவு ஏற்படுவது, கெட்டுப்போன உணவால் ஏற்படும் நோய்கள், மருந்துப் பொருட்களால் ஏற்படும் பாதிப்பு, தவறான சிகிச்சையால் மரணிப்பது போன்ற நோய்களுக்கும் செவ்வாயே காரணகர்த்தாவாக திகழ்கிறார்.
வெடி விபத்து, வாகனத்தில் தீவிபத்தால் பாதிக்கப்படுவது, கிணறு வெட்டும் போது மண் சரிந்து பலியாவது, நோயால் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றுவது, இடி மின்னலால் ஏற்படும் இறப்பு, துப்பாக்கி தயாரிக்கும் இடங்களில் உண்டாகும் விபத்து, பூமிக்காக நிலத்திற்கான பிரச்சினையில் ஏற்படும் கொலை போன்றவைகளுக்குக் காரணம் செவ்வாய்தான்.
புற்றுநோய்
செவ்வாய் நீச்ச ராசியான கடகத்தில் நின்று இருந்தால், பல நோய்களுக்கு ஜாதகரே மூலக்காரணமாக இருப்பார். செவ்வாய் தனது பகை கிரகங்களான புதன், ராகுவோடு இணைந்து இருந்தால் புற்று நோய்கள் ஏற்படும். நரம்பு பிரச்சினைகள் வரும். இவர்களது சகோதரர்களுடன் சண்டை சச்சரவுகள் இருந்து கொண்டே இருக்கும்.
பகை ராசிகள்
செவ்வாய் பகை ராசியான மிதுனம், கன்னி ஆகிய ராசிகளில் நின்றிருந்தால், ரத்த சோகை, உடலில் போதுமான ரத்தம் இல்லாமல் இருப்பது, உடல் சோர்வு போன்ற நோய்கள் உண்டாகும். தோல் அரிப்புகள் இருக்கும். புதன் தோல் நோய்களுக்கு காரணகர்த்தா. புதன் அதிபதியாக மிதுனம், கன்னி ராசிகளில் செவ்வாய் இருந்தால் தோல் நோய்கள் வரும். செவ்வாய் பகைக் கிரகமான புதன், ராகு ஆகிய கிரங்களின் நட்சத்திர பாதத்தில் நின்றிருந்தால், தோல் நோய்கள் வரலாம். ரத்தம் ஓட்டம் சீராக இல்லாமல் கை, கால் பிடிப்பு தலைவலி வரக் கூடும்.
ரத்தம் தொடர்பான நோய்கள்
செவ்வாய் லக்னத்திற்கு 6, 8, 12 ஆகிய இடத்தில் இருந்தால், அந்த ஜாதகர் செய்யும் கெட்ட பழக்க வழக்கத்தால் நோய்கள் வரக்கூடும். தொற்று நோய் தாக்கக்கூடும். செவ்வாய் லக்னத்திற்கு 6, 8, 12 ஆகிய இடங்களுக்கான அதிபதியுடன் இணைந்து இருந்தாலோ அல்லது இதன் நட்சத்திர பாதத்தில் நின்று இருந்தாலோ அந்த ஜாதகருக்கு நரம்பு தளர்வு, ரத்தக் குழாய் வெடிப்புகள், இனம் கண்டுபிடிக்க முடியாத நோய்கள் வரக்கூடும். ஜாதகரின் சகோதரர்கள் நம்பிக்கை துரோகம் செய்வார்கள்.
பற்களில் ரத்தக்கசிவு
செவ்வாய் லக்னத்திற்கு பாதகாதிபதியுடன் சேர்ந்து இருந்தாலோ அல்லது பாதகாதிபதியின் நட்சத்திர பாதத்தில் நின்றிருந்தாலோ ரத்தம் கெட்டு போகும் நிலை ஏற்படக்கூடும். பற்களில் ஈறுகளில் ரத்தக் கசிவு உண்டாகும்.செவ்வாய்க் கிரகமே லக்னத்திற்கு பாதகாதி பதியாக இருந்தால், அந்த ஜாதகருக்கு வெட்டுக் காயம், தீ காயம், விபத்துகள் மூலம் ரத்தம் வீணாகும். செவ்வாய் பகை கிரகங்கள் மற்றும் பாதகாதிபதிகளின் கிரகப் பார்வை பெற்றிருந்தால், நினைத்தது போல் உடல் ஒத்துழைப்பு தராது.