மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மாசி திருவிழா கொடியேற்றம் - 48 நாட்களும் உலா வரும் தெய்வங்கள்
மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில் மாசி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரரும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை, ஆடி, ஆவணி, மாசி ஆகிய மாதங்களில் நடைபெறும் திருவிழாக்கள் முக்கியமானவை.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் முக்கியவிழா மாசிமாதம் கொண்டாடப்படும் விழாவாகும். இவ்விழாவிற்கு மதுரையைச் சுற்றியுள்ள ஊர்களில் இருந்து அறுவடை முடிந்த பிறகு கட்டுச்சோறு கட்டிக்கொண்டு மாட்டுவண்டியிலேறியும் நடந்தும் குடும்பம் குடும்பமாக மாசி மாதத் திருவிழாவிற்கு வந்து சுவாமி அம்மனை தரிசனம் செய்து செல்வார்கள். 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் நடைபெறும்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இந்த ஆண்டுக்கான மாசி திருவிழா கொடியேற்று விழா நேற்று கோயிலில் சுவாமி சன்னதியில் உள்ள தங்க கொடிமரத்தில் நடந்தது. முன்னதாக மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர், பிரியாவிடை ஆகியோர் பல்லக்கில் கொடிமரம் அருகே எழுந்தருளினர்.
விழாவை முன்னிட்டு நேற்று முதல் 48 நாட்களுக்கு சுவாமி வீதி உலாவரும் நிகழ்ச்சி நடைபெறும். முதல் 6 நாட்களுக்கு விநாயகர் உலாவும், அதன்பின் வரும் 6 நாட்களுக்கு முருகன் உலாவும், அடுத்த 3 நாட்களுக்கு அப்பர், சம்பந்தர், சுந்தரமூர்த்தி உலாவும் நடக்கிறது. அதனை தொடர்ந்து 6 நாட்கள் சந்திரசேகர் உலா நடைபெறுகிறது.
பிப்ரவரி மாதம் 10ஆம்தேதியில் இருந்து 19ஆம்தேதி வரை காலை, இரவு என இருவேளையும் மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரரும் சித்திரை வீதிகளில் வலம் வந்து காட்சி அளிக்கின்றனர்.
அடுத்த 10 நாட்கள் பஞ்சமூர்த்திகள் சித்திரை வீதியில் உலா வருகின்றனர். அடுத்த 9 நாட்கள் மௌன உற்சவ உலா. 3 நாட்கள் சந்திரசேகரர் , 3 நாட்கள் சுவாமி உலா, 3 நாட்கள் சண்டிகேஸ்வரர் உலா நடைபெறுகிறது.
மாசி மகாமக தினத்தன்று தெப்பத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு கோயிலில் எட்டு திசையிலும் உள்ள கொடிமரத்தில் விழாவுக்கான கொடி ஏற்றப்படுவது முக்கியத்துவமானது. மற்ற விழாக்களில் தங்க கொடி மரத்தில் மட்டும் கொடி ஏற்றப்படும். மார்ச் 1ஆம்தேதி கணக்கு வாசித்தல் நிகழ்ச்சி நடந்து திருவிழா நிறைவு பெறுகிறது.