மாசித்திருவிழா 2019: திருச்செந்தூர் முருகன் கோவிலில் கொடியேற்றம் - 19ல் தேரோட்டம்
சென்னை: மாசி மகம் திருவிழா திருச்செந்தூர் முருகன் கோவிலில் கோலாகலமாக தொடங்கியுள்ளது. மகம் நட்சத்திர நாளான வரும் 19ஆம் தேதியன்று தேரோட்டம் நடைபெறுகிறது.
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக பக்தர்களால் போற்றப்படுவது திருச்செந்தூர் சுப்ரமணிய சவாமி கோவில். இங்கு ஆண்டு தோறும் பல்வேறு விழாக்கள் நடந்து வருகின்றன. மாசி மாதத்தில் நடைபெறும் திருவிழா தேரோட்டத்துடன் பன்னிரெண்டு நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறுகிறது.
தினசரியும் அலங்கரிக்கப்பட்ட வாகனத்திலும் சுவாமி அம்பாள் எழுந்தருளி வீதி உலா வருகின்றனர். மாசி மாதம் பௌர்ணமியும் மகம் நட்சத்திரமும் கூடி வரும் நாளில் தேரோட்டம் நடைபெறும். "கயிலை மலையனைய செந்திற்பதிவாழ்வே" என திருச்செந்தூரில் வாழ்வது கயிலாய வாழ்விற்குச் சமமானது என்று அருணகிரியார் போற்றிப் புகழ்கிறார். அப்புகழ் பெற்ற திருச்செந்தூரில் மாசித்திருவிழாவில் முருகப் பெருமானை தரிசனம் செய்வது மனதிற்கு நிம்மதியையும் நிறைவையும் தரக்கூடியது.
சிங்கக் கேடய சப்பரம்
இரண்டாம் ஆம் நாளான நேற்று சுவாமி சிங்க கேடயச் சப்பரத்திலும், அம்மாள் பெரிய கேடயச் சப்பரத்திலும் வீதி உலா வந்தனர். தூண்டுகை விநாயகர் கோவில் அருகே உள்ள ஆண்டியப்பபிள்ளை மண்டபத்தில் சுவாமி குமரவடங்கப்பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம் அலங்காரமாகி தீபாராதனை நடைபெற்றது. பின்னர் இரவு சுவாமி குமரவிடங்க பெருமான் சிங்ககேடயச் சப்பரத்திலும் வீதி உலா வந்த போது திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
தங்கக் கிடா வாகனம்
இன்று மூன்றாம் நாள் திருவிழாவாக காலை சுப்ரமணியர் பூங்கோயில் சப்பரத்திலும் அம்பாள் கேடயத்திலும் உலா வருகிறார். பின்னர் சுவாமி அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகளும் நடக்கிறது. இரவு சுவாமி தங்கக் கிடா வாகனத்திலும், அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் திருவீதி உலா வருகிறார்.
வெள்ளியானை சப்பரம்
4ஆம் நாள் திருவிழாவாக காலை முருகன் வெள்ளி யானை சப்பரத்திலும் அம்பாள் வெள்ளி சரப வாகனத்திலும் பவனி வருகிறார். 5ம் நாள் திருவிழாவாக மெல்லகோவில் குடவரவாயில் தீபாரதனையும் சுப்ரமணிய சுவாமி தெய்வானை அம்பாள் தனித்தனி தங்க மயில் வாகனங்களில் மாடவீதிகளில் உலா வருகிறார்கள். 6ஆம் நாள் திருவிழாவாக முருகன் கோ ரதத்தில் எழுந்தருளி திருவீதி உலா சென்று பந்தல் மண்டபம் சேர்கிறார். இரவு அம்மன் வெள்ளித் தேரில் இந்திர விமானத்திலும் எழுந்தருளி திருவீதி உலா நடைபெறும்.
சிவப்பு பட்டில் சண்முகரின் தரிசனம்
ஏழாம் நாள் திருவிழா மற்றும் எட்டாம் நாள் திருவிழாவில் மட்டுமே பிரதான உற்சவர் சண்முகக் கடவுளின் தரிசனம் பக்தர்களுக்கு கிடைக்கின்றது. ஏழாம் திருவிழா அன்று அதிகாலை 4.30 மணிக்கு முதல் 5.00 மணிக்குள் சண்முகபெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சி நடைபெறும்.அதனைத் தொடர்ந்து காலை சண்முகர் வெட்டிவேர் சப்பரத்தில் பக்த பெருமக்களுக்கு ஏற்ற தரிசனம் அருளி பிள்ளையன்கட்டளை மண்டபத்தை வந்தடைவார். அன்றைய தினம் மாலை நான்கு மணிக்கு மேல் சுவாமி தங்க சப்பரத்தில் சிகப்பு சாத்தியில், சிகப்புப் பட்டாடைகளாலும் சிகப்பு மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். சிவபெருமானும் தானும் ஒருவரே என்பதைக் குறிப்பாக உணர்த்தும் விதத்தில் முருகப்பெருமான் இவ்வாறு காட்சி தருகிறார்.
வெள்ளிச்சப்பரத்தில் வெள்ளை சாத்தி
எட்டாம் திருவிழாவை முன்னிட்டு காலை பெரிய வெள்ளிச்சப்பரத்தில் வெள்ளைச் சாத்தியில் சண்முகர் எழுந்தருளி, திருவீதி வலம் வருகிறார். படைக்கும் தொழிலைப் புரிகின்ற பிரம்மாவும் நானே என்பதை உணர்த்தும் விதத்தில் இவ்வாறு வலம் வருகிறார். பகல் 12.00 மணிக்கு மேல் பச்சைக் கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி எழுந்தருளி வீதி உலா வந்து திருக்கோவில் சேர்கிறார்.
பச்சை சாத்தி
"காத்தல் தொழிலைச் செய்கின்ற திருமாலும் நானே" என்பதைக் குறிக்கும் விதமாகக் காட்சி தருகிறார். பச்சை சாத்தியில் வருகின்ற முருகப்பெருமானை லட்சக் கணக்காண பக்தர்கள் பன்னீர் அபிஷேகம் செய்து தேங்காய், பழம் படைத்து வழிபடுவார்கள். இதனால் நகரின் ரத வீதிகளில் பன்னீர் வாசனையை நாள் முழுவதும் பக்தர்கள் உணர முடியும்.
தேரோட்டம்
ஒன்பதாம் நாள் திருவிழாவை முன்னிட்டு சுவாமி தங்க கையிலாய பர்வத வாகனத்திலும், அம்மன் வெள்ளிக் கமல வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடைபெறும். திருவிழாவின் முக்கிய நாளான பத்தாம் திருவிழாத் தேரோட்டம் அன்று காலை 6 மணிக்கு மேல் துவங்கும். பிள்ளையார் ரதம், சுவாமி தேர், அம்மன் தேர்கள் திரு வீதி வலம் வந்து நிலை சேர்கிறது.
மாசி மக தெப்ப உற்சவம்
பதினொன்றாம் திருவிழாவை முன்னிட்டு இரவு தெப்பத் திருவிழா நடக்கிறது. சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரமாகி செந்தூர் நகரின் ரத வீதிக்கு மெற்கே உள்ள தெப்பத்தில் எழுந்தருளி 11 முறை சுற்றி வரும் தெப்போற்சவம் நடைபெறும். 12ஆம் திருவிழாவுடன் திருவிழா நிறைவு பெறும்.