மாசி திருவிழா - திருச்செந்தூரில் சிவப்பு, வெள்ளை, பச்சை சாத்தி வந்த சண்முகர்
திருச்செந்தூரில் மாசித்திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்வான சிவப்பு சாத்தி, வெள்ளை சாத்தி பச்சை சாத்தி வந்த சண்முகரை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர் : மாசி திருவிழாவின் எட்டாம் நாளான இன்று திருச்செந்தூரில் சுவாமி சண்முகர் பெரிய வெள்ளி சப்பரத்தில் வெள்ளுடை அணிந்து வெண்ணிற பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். நண்பகல் 12 மணியளவில், பச்சை கடைசல் சப்பரத்தில், பச்சை பட்டுடுத்தி, பச்சை இலைகள் மற்றும் மணம் மயக்கும் மரிக்கொழுந்து மாலையணிந்து, பச்சை சாத்தி திருக்கோலத்தில் எழுந்தருளி திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஆறுகுகக்கடவுளான முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்ரமணியர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பல்வேறு திருவிழாக்களில் மாசி திருவிழா புகழ்பெற்றதாகும். இந்த ஆண்டு மாசி திருவிழாவானது கடந்த பிப்ரவரி 28ஆம் தேதியன்று கொடியேற்றத்துடன் இனிதே தொடங்கி நடைபெற்று வருகிறது.
இக்கோவிலில் மூலவராக சுப்ரமணியர் வீற்றிருந்தாலும், வள்ளி தெய்வானை சமேதராக காட்சியளிக்கும் உற்சவ மூர்த்திகளான சண்முகர் மற்றும் ஜெயந்திநாதர் தான் அதிக புகழ்பெற்றவராவர். பத்து நாட்கள் நடைபெறும் மாசி திருவிழாவில் நாள்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் உற்சவ மூர்த்தியான சண்முகர் வள்ளி தெய்வானையுடன் தம்பதி சமேதராக, பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
மும்மூர்த்திகள் தரிசனம்
முருகப் பெருமான் இத்தலத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளின் அம்சமாகவும் திகழ்ந்து அருள்பாலிக்கிறார் என்பது அர்த்தமாகும். அதை காட்டும் வகையில் சிவப்பு சாத்தி, வெள்ளை சாத்தி, பச்சை சாத்தி தேரோட்டங்கள் நடைபெறும். சிவப்பு சாத்தி தேரோட்டத்தின் போது அலங்காரம், ஆராதனைகள் சுவாமி அம்சம் எல்லாம் சிவப்பாக இருக்கும். அதுபோல வெள்ளை சாத்தி ஊர்வலத்தின் போது எல்லாம் வெள்ளை மயமாக இருக்கும். வெள்ளை சாத்தியை கண்டு இறைவான தரிசனம் செய்தால் பிரம்மாவின் அருளால் நம் தலை எழுத்தே மாறும் என்ற உண்மையை மக்கள் உணர்ந்துள்ளனர். இதனால் வெள்ளை சாத்திக்கு பக்தர்களிடையே மிகுந்த வரவேற்பு உள்ளது.
சண்முகர் திருவீதி உலா
மாசி திருவிழாவின் ஏழாம் நாளான நேற்று அதிகாலை மூலவரான சுப்ரமணியரின் விஸ்வரூப தீபாராதனையும், தொடர்ந்து உதயமார்த்தாண்ட அபிஷேகமும், பின்னர் சுவாமி சண்முகருக்கு உருகு சட்ட சேவையும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சுவாமி சண்முகர் ஸ்ரீபெலி மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சண்முகருக்கு தங்கம், வைரம் உள்ளிட்ட ஆபரணங்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
அங்கு கூடியிருந்த பக்தர்கள் அரோகரா... அரோகரா என கோஷமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
சண்முகருக்கு அபிஷேகம்
அதனைத் தொடர்ந்து தம்பதி சமேதராக சண்முகர் வெட்டிவேர் சப்பரத்தில் தூண்டுகை விநாயகர் கோவில் அருகிலுள்ள பிள்ளையன் கட்டளை மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சண்முகருக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனையும் நடைபெற்றன.
சிவப்பு மலர் அலங்காரம்
மாலையில், சுவாமி சண்முகர் தம்பதி சமேதராக செம்பட்டு அணிந்து சிவப்பு மலர்கள் சூடிக்கொண்டு சிவந்த மேனியராக சிவப்பு சாத்தி கோலத்தில் தங்க சப்பரத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து சுவாமி அம்பாள்களுடன் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மாசி திருவிழாவின் எட்டாம் நாளான இன்று அதிகாலை 5 மணியளவில் சுவாமி சண்முகர் பெரிய வெள்ளி சப்பரத்தில் வெள்ளுடை அணிந்து வெண்ணிற பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
மரிக்கொழுந்து மலர்கள்
நண்பகல் 12 மணியளவில், பச்சை கடைசல் சப்பரத்தில், பச்சை பட்டுடுத்தி, பச்சை இலைகள் மற்றும் மணம் மயக்கும் மரிக்கொழுந்து மாலையணிந்து, பச்சை சாத்தி திருக்கோலத்தில் எழுந்தருளி திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதனைத் தொடர்ந்து சுவாமி குமாரவிடங்க பெருமானும், அலைவாயுகந்த பெருமானும் வெள்ளிக்குதிரை வாகனங்களில் எழுந்தருளி திருவீதியுலா வந்து பாளையங்கோட்டை ரோட்டில் உள்ள வேட்டைவெளி மண்டபத்தில் திருக்கண் சாத்தி, பின்னர் மேல கோவில் சேர்ந்தனர்.
மாசி மகம் தேரோட்டம்
மாசி திருவிழாவின் ஒன்பதாம் நாளான நாளை இரவு 10 மணியளவில் தேர் கடாட்சம் நடைபெற உள்ளது. 10ஆம் நாளான ஞாயிறன்று சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது. இரவு சுவாமி, அம்பாள் பெரிய பல்லக்குகளில் எழுந்தருளி வீதி உலா வந்து மேலக்கோவில் சேர்கிறார்கள். 11ஆம் திருநாள் இரவு 7 மணிக்கு சுவாமியும், அம்பாளும் புஷ்ப சப்பரங்களில் எழுந்தருளி வெளிவீதி வழியாக தெப்பக்குளம் மண்டபம் சேர்கிறார்கள். அங்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடைபெறுகிறது. பின்னர் 8 வீதிகளிலும் உலா வந்து மேலக்கோவில் சேர்கிறார்கள்.