மாசி மகம் 2019: திருச்செந்தூரில் தேரோட்டம், திருக்கோஷ்டியூரில் தீபம் - கும்பகோணத்தில் புனித நீராடல்
மாசி மகம் திருவிழா இன்று தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஆறு, குளங்கள், கடலில் புனித நீராடிய மக்கள் இறைவனை வழிபட்டனர். திருச்செந்தூரில் தேரோட்டமும், திருக்கோஷ்டியூரில் தெப்ப உற்சவமும் ந
சென்னை: மகத்துவம் நிறைந்த மாசி மகம் இன்று தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் ஆறுகள், அருவிகள், நதிகள், கடலில் நீராடினால் பாவங்கள் நீங்கி புண்ணியம் பெருகும் என்பது நம்பிக்கை. இந்த நாளில் கும்பகோணம் மகாமகம் குளத்தில் அதிகாலை முதலே மக்கள் புனித நீராடி வருகின்றனர். திருச்செந்தூரில் தேரோட்டமும், திருக்கோஷ்டியூரில் தெப்ப உற்சவமும் நடைபெற்றது. தெப்பக்குளத்தில் தீபம் ஏற்றிய மக்கள் தங்களின் பிரார்த்தனை நிறைவேற வேண்டிக்கொண்டனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூரில் இருந்து 8 கிமீ தொலைவில் உள்ள திருக்கோஷ்டியூரில் ஸ்ரீசௌமிய நாராயணப் பெருமாள் கோயில் உள்ளது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக போற்றப்படுகிறது இந்த ஆலயம். கதம்ப மகரிஷி இப்பகுதியில் தவம் செய்த போது தன்னுடைய தவத்திற்கு மனிதர்களாலும், மிருகங்களாலும், அரக்கர்களாலும் எந்தவித இடையூறும் ஏற்படக் கூடாது என்று இறைவனை வேண்டிக்கொண்டார். இரணியாசுரன் என்ற அசுரன், முனிவர்கள் மற்றும் தேவர்களை துன்புறுத்தி வந்தான். அவனை வதம் செய்வது குறித்து, பிரம்மா, விஷ்ணு, சிவன், மற்றும் தேவர்கள் இங்கு ஆலோசனை செய்ததாகவும் இதனாலேய இவ்வூருக்கு திருக்கோஷ்டியூர் என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது.
மந்திர உபதேசம் வேண்டி ராமானுஜர், திருக்கோஷ்ட்டியூர் நம்பியை 18 முறை தேடி வந்தது இங்கு தான். உலகமக்கள் அனைவருக்கும் ஓம் நமோ நாராயணாய என்ற எட்டெழுத்து மந்திரத்தை ராமானுஜர் உபதேசித்ததால் திருமந்திரம் விளைந்த திவ்யதேசம் என்ற பெருமை இதற்குண்டு.
சவுமியநாராயண பெருமாள்
பேரழகு கொண்டவர் என்பதால் இங்கிருக்கும் பெருமாளுக்கு சவுமியநாராயணர் என்பது திருநாமம். பொதுவாக கோயில்களில் உற்ஸவர் விக்ரகங்களை பஞ்சலோகத்தால் அமைப்பர். ஆனால், தூய்மையான வெள்ளியால் ஆன விக்ரகம் இங்குள்ளது. இதை தேவலோக இந்திரனே தந்ததாக ஐதீகம்.இப்பெருமானை திருமங்கையாழ்வார் வெள்ளியான் கரியான் மணிநிற வண்ணன் என்று போற்றுகிறார். இங்குள்ள தாயாருக்கு திருமாமகள், நிலமாமகள், குலமாமகள் ஆகிய பெயர்களுண்டு. மகாமகக்கிணறு என்னும் சிம்மக்கிணறு இங்குள்ளது. இதில் மாசிமகத்தில் நீராடுவது சிறப்பு.
வேண்டுதல் நிறைவேறும்
மாசிமக தினமான இன்று தெப்பத்திருவிழா நடைபெறுகிறது. சவுமியநாராயணரிடம் வேண்டுகோள் வைத்து அது நிறைவேறியவர்கள், தெப்பக்குளத்தில் தீபமேற்றி வழிபடுவது சிறப்பாகும். அந்த விளக்கை புத்திர பாக்கியம், திருமணம் போன்ற கோரிக்கைகளை வைப்பவர்கள் வீட்டிற்கு எடுத்துச்சென்று பூஜையறையில் வைத்துக்கொள்ளலாம். வேண்டுதல் நிறைவேறியதும், அடுத்த மாசிமகத்தன்று மீண்டும் அந்த விளக்குடன் மேலும் 3 அல்லது 5 அகல் விளக்குகளை ஏற்றி வைக்கின்றனர். இன்று கோவிலுக்கு வந்திருந்த ஏராளமான பக்தர்கள் நீராடிவிட்டு தீபம் ஏற்றி வழிபட்டனர்.
திருச்செந்தூர் மாசி திருவிழா
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக பக்தர்களால் போற்றப்படும் திருச்செந்தூரில் இன்று மாசி மகம்
திருவிழா கடந்த 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. சிறப்பு நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. பிள்ளையார் ரதம், சுவாமி தேர், அம்மன் தேர்கள் ஆடி அசைந்து வலம் வந்ததை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இரவு தெப்பத் திருவிழா நடக்கிறது. சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரமாகி செந்தூர் நகரின் ரத வீதிக்கு மெற்கே உள்ள தெப்பத்தில் எழுந்தருளி 11 முறை சுற்றி வரும் தெப்போற்சவம் நடைபெறுகிறது.
கும்பகோணத்தில் புனித நீராடல்
மாசி மகத்துக்கு முகம் உண்டு என்பார்கள். அதாவது மாசி மகத்தில் விரதமிருந்து நீராடினால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். மாசிமகம் இன்றைய தினம் கும்பகோணத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதிகாலை முதலே ஏராளமானோர் மகாமகம் தெப்பக்குளத்தில் புனித நீராடினர். பிற தலங்களில் செய்த பாவம் காசியில் தீரும். காசியில் செய்த பாவம் கும்பகோணத்தில் நீங்கும் என்பதே கும்பகோணத்தின் மகிமையாகும். பன்னிரெண்டு நதிகளும் மக்கள் செய்த பாவச்சுமைகளை அகற்றி புனிதம் பெற மகாமக குளத்தில் நீராடுவதாக ஐதீகம். இந்த நாளில் எந்தப் புனித தீர்த்தத்தில் நீராடினாலும் புண்ணியம் அதிகரிக்கும்.