மாசி மகம் 2020 : மாசி மகத்தில் புனித நீராடினால் தோஷங்கள் நீங்கும்
மாசி மகம் திருவிழா இன்று தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஆறு, குளங்கள், கடலில் புனித நீராடிய மக்கள் இறைவனை வழிபட்டனர். திருச்செந்தூரில் தேரோட்டமும், திருக்கோஷ்டியூரில் தெப்ப உற்சவமும்
சென்னை: மகத்துவம் நிறைந்த மாசி மகம் மார்ச் 8ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. மாசி மகத்தன்று ஆறுகள், அருவிகள், நதிகள், கடலில் நீராடினால் பாவங்கள் நீங்கி புண்ணியம் பெருகும் என்பது நம்பிக்கை. இந்த நாளில் கும்பகோணம் மகாமகம் குளத்தில் அதிகாலை முதலே மக்கள் புனித நீராடி இறைவனை வழிபடுவார்கள். திருச்செந்தூரில் தேரோட்டமும், திருக்கோஷ்டியூரில் தெப்ப உற்சவமும் நடைபெறும். தெப்பக்குளத்தில் தீபம் ஏற்றிய மக்கள் தங்களின் பிரார்த்தனை நிறைவேற வேண்டிக்கொள்வார்கள்.
கும்ப ராசியில் சூரியன் இருக்கும் போது சந்திரன் சிம்ம ராசியில் மக நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வார். இந்நாளே மாசி பவுர்ணமியுடன் கூடிய மாசி மகமாக கொண்டாடப்படுகிறது. மாசி மகம் மகாவிஷ்ணு, உமாமகேஸ்வரன், முருகன் ஆகிய 3 தெய்வங்களுக்கும் உகந்த நாள் மாசி மகம்.
குரு பகவான் சிம்ம ராசியில் சஞ்சரிக்கும் போது 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமகம் கொண்டாடப்படுகிறது. கும்பகோணத்தில் மகாமகம் சிறப்பாக நடைபெறும். ஆண்டு தோறும் மாசிமகம் கும்பகோணத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பிற தலங்களில் செய்த பாவம் காசியில் தீரும். காசியில் செய்த பாவம் கும்பகோணத்தில் நீங்கும் என்பதே கும்பகோணத்தின் மகிமையாகும். மாசி மகத்தன்று, கும்பகோணத்தில் உள்ள முக்கிய கோவில்களில் இருந்து மகாமக குளத்திற்கும், காவிரியாற்றுக்கும் சுவாமிகள் எழுந்தருளுவர்.
மாசி மகம் புண்ணிய தினம்
ஒரு பிரளய காலத்தின் போது பிரம்மா மிதக்க விட்ட அமிர்தம் அடங்கிய குடத்தை சிவபெருமான் ஒரு பாணத்தால் அடித்து உதைத்து விட்டார். அமிர்தம் சிதறியது. உடைந்து போன குடம் சிதறி உருண்டு ஓடியது. அந்த குடம் நின்ற இடம் தான் கும்பகோணம். சிதறிய அமிர்தம் ஒன்று சேர்ந்த இடமே மகாமக குளம். அமிர்த துளிகள் லிங்கமானது. அவர் தான் கும்பேஸ்வரர். கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, சரயு, வேகவதி, சிந்து, கோதாவரி, காவேரி, தபதி, பிரம்மபுத்திரா, தாமிரபரணி, மகாநதி முதலான நதிகள் கைலாயம் சென்று பரமேஸ்வரனை வணங்கி மக்களின் பாவங்களை நாங்கள் வாங்கிக் கொள்கிறோம். எங்களிடம் வரும் பாவத்தை எப்படி தொலைப்போம் என கேட்டனர். அதற்கு பரமசிவன் நதிகளே! மகத்தன்று குடந்தையில் உள்ள மகாமக தீர்த்தத்தில் ஸ்நானம் செய்யுங்கள். பன்னிரெண்டு நதிகளும் மக்கள் செய்த பாவச்சுமைகளை அகற்றி புனிதம் பெற மகாமக குளத்தில் நீராடுவதாக ஐதீகம்.
புண்ணிய தினம் மாசி மகம்
உமா தேவியார் மாசி மாதம் மக நட்சத்திரத்தில்தான் தட்சணின் மகள் தாட்சாயணியாக அவதரித்தார் என்பதால் மிகவும் புண்ணிய நாளாக கருதப்படு கிறது. பெண்களுக்குரிய விரத தினமாகவும் போற்றப்படுகிறது. பாதாளத்தில் இருந்த பூமியை பெருமாள் வராக அவதாரம் எடுத்து வெளிகொணர்ந்த நாளும் மாசி மகத்தன்றுதான்.
மாசி மகம் கொடியேற்றம்
சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூரில் இருந்து 8 கிமீ தொலைவில் உள்ள திருக்கோஷ்டியூரில் ஸ்ரீசௌமிய நாராயணப் பெருமாள் கோயில் உள்ளது. இங்கு மாசி மகம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக போற்றப்படுகிறது இந்த ஆலயம். பேரழகு கொண்டவர் என்பதால் இங்கிருக்கும் பெருமாளுக்கு சவுமியநாராயணர் என்பது திருநாமம். பொதுவாக கோயில்களில் உற்ஸவர் விக்ரகங்களை பஞ்சலோகத்தால் அமைப்பர். ஆனால், தூய்மையான வெள்ளியால் ஆன விக்ரகம் இங்குள்ளது. இதை தேவலோக இந்திரனே தந்ததாக ஐதீகம்.இப்பெருமானை திருமங்கையாழ்வார் வெள்ளியான் கரியான் மணிநிற வண்ணன் என்று போற்றுகிறார். இங்குள்ள தாயாருக்கு திருமாமகள், நிலமாமகள், குலமாமகள் ஆகிய பெயர்களுண்டு. மகாமகக்கிணறு என்னும் சிம்மக்கிணறு இங்குள்ளது. இதில் மாசிமகத்தில் நீராடுவது சிறப்பு.
ஸ்ரீராமானுஜர்
கதம்ப மகரிஷி இப்பகுதியில் தவம் செய்த போது தன்னுடைய தவத்திற்கு மனிதர்களாலும், மிருகங்களாலும், அரக்கர்களாலும் எந்தவித இடையூறும் ஏற்படக் கூடாது என்று இறைவனை வேண்டிக்கொண்டார். இரணியாசுரன் என்ற அசுரன், முனிவர்கள் மற்றும் தேவர்களை துன்புறுத்தி வந்தான். அவனை வதம் செய்வது குறித்து, பிரம்மா, விஷ்ணு, சிவன், மற்றும் தேவர்கள் இங்கு ஆலோசனை செய்ததாகவும் இதனாலேய இவ்வூருக்கு திருக்கோஷ்டியூர் என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது. மந்திர உபதேசம் வேண்டி ராமானுஜர், திருக்கோஷ்ட்டியூர் நம்பியை 18 முறை தேடி வந்தது இங்கு தான். உலகமக்கள் அனைவருக்கும் ஓம் நமோ நாராயணாய என்ற எட்டெழுத்து மந்திரத்தை ராமானுஜர் உபதேசித்ததால் திருமந்திரம் விளைந்த திவ்யதேசம் என்ற பெருமை இதற்குண்டு.
வேண்டுதல் நிறைவேறும்
மாசிமகம் தினத்தன்று இங்கு தெப்பத்திருவிழா நடைபெறுகிறது. சவுமியநாராயணரிடம் வேண்டுகோள் வைத்து அது நிறைவேறியவர்கள், தெப்பக்குளத்தில் தீபமேற்றி வழிபடுவது சிறப்பாகும். அந்த விளக்கை புத்திர பாக்கியம், திருமணம் போன்ற கோரிக்கைகளை வைப்பவர்கள் வீட்டிற்கு எடுத்துச்சென்று பூஜையறையில் வைத்துக்கொள்ளலாம். வேண்டுதல் நிறைவேறியதும், அடுத்த மாசிமகத்தன்று மீண்டும் அந்த விளக்குடன் மேலும் 3 அல்லது 5 அகல் விளக்குகளை ஏற்றி வைத்து வழிபடுவார்கள்.
தோஷம் நீக்கும் நாள்
சிவன், விஷ்ணு,முருகன் என முப்பெரும் தெய்வங்களுக்கு உகந்த இந்த நன்னாள், தோஷம் நீக்கும் புண்ணிய நாளாக கருதப்படுகிறது. இந்நாளில் புண்ணிய ஸ்தலங்களை தரிசிப்பதும், புண்ணிய நதிகள், தீர்த்தங்களில் நீராடுவதும் பாவங்களை போக்கும் என்பது ஐதீகம். நதி, கடல், குளம், புண்ணிய தீர்த்தங்கள், கும்பகோணம், ராமேஸ்வரம் போன்ற இடங்களில் தர்ப்பணம், பிதுர் கடன் செய்வது நன்மை தரும்.