மாசி மகம் 2020: ஆண் குழந்தை வேண்டுமா மாசி மகத்தில் புனித நீராடி முருகனை வழிபடுங்கள்
மாசி மாதம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் புனித நீர் நிலைகளிலும் ஆறுகள்,கடல்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடுகின்றனர். இதனால் சகல பாவங்களும் தோஷங்களும் நீங்கும் என்ப
மதுரை: மாசி மகத்தன்று ஆறுகள், குளங்களில் புனித நீராடினால் சகல தோஷங்களும் பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம். ஆண் குழந்தை வேண்டுபவர்கள், இந்நாளில் முருகனை வேண்டி விரதமிருந்து வழிபட்டால் நினைத்தது நிறைவேறும். மாசி மகத்தன்று முருகப்பெருமானை வழிபடுவதால் ஆண் குழந்தை பிறக்கும். அறியாமல் செய்த பாவங்களுக்கு விமோசனம் கிடைக்கும்.
மாசி மகம் தினத்தன்று புண்ணிய தலங்களை தரிசிப்பதும், புண்ணிய நதிகள், தீர்த்தங்களில் நீராடுவதும் பாவங்களை போக்கும். பிற தலங்களில் செய்த பாவம் காசியில் தீரும். காசியில் செய்த பாவம் கும்பகோணத்தில் நீங்கும் என்பதால் மகாமகம் தெப்பக்குளத்தில் மாசிமகம் தினத்தன்று தீர்த்தவாரி நடைபெறுகிறது. மாசி மகம் நாளில் மகாமகம் குளத்தில் நீராடி 9 பெண்களுக்கு தாம்பூலம், பழம், தட்சணை தேங்காய், குங்குமம், ரவிக்கைத் துணி கொடுப்பது சிறப்பான பலனைத் தரும்.
மக்களின் பாவங்களை விலக்கிக் கொள்ளும் கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, சரயு, வேதவதி, சிந்து, கோதாவரி, காவிரி, தபகி, பிரம்மபுத்திரா, தாமிரபரணி, மகாநதி முதலான நதிகள் கைலாயம் சென்று பரமேஸ்வரனை வணங்கி மக்களின் பாவங்களை நாங்கள் வாங்கிக் கொள்கிறோம். எங்களிடம் வரும் பாவத்தை எப்படித் தொலைப்போம் என கேட்டனர். அதற்கு பரமசிவன், புண்ணிய நதிகளே, மகாமகத்தன்று குடந்தையில் உள்ள மகாமக தீர்த்தத்தில் ஸ்நானம் செய்யுங்கள். ஒரு மாமாங்கம் வரை செய்த பாவங்கள் நீங்கி விடும் என்றார். மாசி மகம் நாளில் 12 நதிகளும் மக்கள் செய்த பாவச் சுமைகளை அகற்றி புனிதம் பெற மகாமக குளத்தில் நீராடுவதாக ஐதீகம். மாசி மகத்தன்று இங்கு வந்து நீராடுபவர்களுக்கும், அவர்களைச் சேர்ந்த குடும்பத்தாருக்கும் புண்ணியம் கிடைக்கும் என புராணங்கள் கூறுகின்றன.
அமிர்தம் விழுந்த மகாமக குளம்
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குருபகவான் சிம்ம ராசியில் இருக்கும்போது வருவது மகாமகம் கொண்டாடப்படுகிறது. அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடுவார்கள். அன்று மகாமக குளத்தில் உலகில் உள்ள எல்லா தேவர்களும் நீராட வருவதாக ஐதீகம். ஒரு பிரணய காலத்தின்போது பிரம்மா மிதக்கவிட்ட அமிர்தம் அடங்கிய குடத்தை சிவபெருமான் ஒரு பாணத்தால் அடித்து உடைத்துவிட்டார். அமிர்தம் சிதறியது. உடைந்துபோன குடம் சிதறி உருண்டு ஓடியது. அந்த குடம் நின்ற இடம்தான் கும்பகோணம். சிதறிய அமிர்தம் ஒன்று சேர்ந்த இடமே மகாமக குளம். அமிர்தத் துளிகள் லிங்கமானது. அவர்தான் கும்பேஸ்வரர். எனவே மாசி மகம் நாளில் கும்பகோணம் மகாமகம் தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி நடைபெறுகிறது.
வருணபகவானுக்கு தோஷம்
மாசி மகத்தில் தீர்த்தமாடல் சிறப்பினை பெற்றதற்கு ஒரு புராண வரலாறு உண்டு. ஒருமுறை வருண பகவானுக்கு பிரமஹத்தி தோஷம் ஏற்பட்டு விட்டது. அவர் கட்டப்பட்டுக் கடலில் வீசப்பட்டு இருந்தார். வருணன் செயல்படாததால் உலகில் மழையின்றி வறட்சியும், பஞ்சமும் ஏற்பட்டது. அனைத்து உயிர்களும் துன்புற்றன. தேவர்கள் சிவபெருமானிடம் சென்று வருண பகவானை தோஷத்தில் இருந்து விடுவிக்கும்படி வேண்டி பிரார்த்தனை செய்தனர். அவர்கள் கோரிக்கையை ஏற்ற சிவபெருமான் வருண பகவானை விடுவித்தார். அவர் விடுதலை பெற்ற நாள் மாசிமக திருநாளாகும்.
வருணன் பெற்ற வரம்
விடுதலை பெற்ற வருண பகவான் மனம் மகிழ்ந்து சிவபெருமானிடம் வரம் கேட்டார். தான் பிரம்மஹத்தி தோஷத்தால் பீடிக்கப்பட்டுக் கடல் நீரில் இருந்தபடியே சிவனை வணங்கியதால் தோஷம் நீங்கியதைப் போன்று மாசி மகத்தன்று புண்ணிய தீர்த்தங்களில் மூழ்கி நீராடி இறைவனை வழிபடும் பக்தர்களுக்கு அவர்களின் பாவ வினைகள், பிறவிப்பிணிகள் துன்பங்கள் யாவும் நீங்கி, அவர்கள் உயர்வு பெற அருள வேண்டும் என கேட்டுக்கொண்டார். சிவபெருமானும், வருணன் கேட்ட வரத்தை வழங்கினார். இதன் காரணமாகவே மாசிமகம் புனித நீராடல் காலம் காலமாக நடைபெறுகிறது என்பது ஐதீகம்.
புண்ணியம் தரும் புனித நீராடல்
மாசி மகத்தன்று பிரசித்தி பெற்ற புண்ணியத்தலங்களில் உள்ள ஆறு, கடல், குளம் போன்ற தீர்த்தங்களில் நீராட வேண்டும். ராமேஸ்வரம், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு, கும்பகோணம், நாகை மாவட்டம் வேதாரண்யம் போன்ற இடங்களில் நீராடி தர்ப்பணம், பிதுர்க்கடன் செய்வது நலன் தரும்.
புனித நீராடுவதற்கு முன்பு வடக்கு அல்லது கிழக்கு நோக்கி மூன்று முறை சிறிதளவு தீர்த்தத்தை உள்ளங்கையில் எடுத்து சிறிதளவு தெளிக்க வேண்டும். மாசி மகம் தினத்தில் புனித நீராடுபவர்களுக்கு சிவபெருமான், மகாவிஷ்ணு உரிய பலனை வழங்குவார். ஒருமுறை மூழ்கி எழுந்தால் பாவங்கள் விலகும். இரண்டாம் முறை மூழ்கினால் சொர்க்கப் பேறு கிடைக்கும். மூன்றாம் முறை மூழ்கி எழுந்தால் அவர் புண்ணியத்திற்கு ஈடே கிடையாது.
வைகுண்டத்தில் இடம் கிடைக்கும்
மாசி மகம் தோஷம் தடைகள் நீக்கும் புனித நாளாகும். ஆறுகள் நீர் நிலைகளில் நீராட முடியாதவர்கள் சிவசிந்தனையுடன் மாசிமக புராணம் படிக்க வேண்டும். மாசி மகத்தன்று அதிகாலை நீராடி விட்டு துளசியால் மகா விஷ்ணுவை வழிபட்டால் வைகுண்டத்தில் இடம் கிடைக்கும்.
முருகன் மந்திர உபதேசம்
மாசி மகம் மகத்துவம் மிக்கது. சிவபெருமானுக்கு முருகன் மந்திர உபதேசம் செய்த நாளாக மாசி மகம் திகழ்கிறது. கடலுக்கு அடியில் இருந்து பூமியை பெருமாள் வராக அவதாரம் எடுத்து வெளிக்கொண்டு வந்ததும் இந்த மாசி மகத்தன்றுதான் என புராணங்கள் கூறுகின்றன. சிவபெருமான் திருவிளையாடல்கள் பல புரிந்ததும் மாசி மகத்தில் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண் குழந்தை பிறக்கும்
மாசி மகத்தன்று புனித நீராடி பித்ரு தர்ப்பணம் செய்வதால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும். தம்பதியர் ஒற்றுமை அதிகரிக்கும், புத்திரபாக்கியம் கிடைக்கும். ஆண் குழந்தை வேண்டுபவர்கள் மாசி மகம் நாளில் விரதம் இருந்து முருகப் பெருமானை வணங்கி வேண்டிக் கொண்டால் ஆண் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை.