சலங்கை பூஜையும் அரங்கேற்றமும் விரைவில் நடக்கனுமா? பஞ்ச நதன நடராஜரை வணங்குங்க!
- அஸ்ட்ரோ சுந்தரராஜன்
சிதம்பரம் மற்றும் அனைத்து சிவாலயங்களிலும் நடராஜ பெருமானுக்கு மஹா அபிஷேகம் இன்று மாசி மாதம் 16 தேதி புதன் கிழமை (28/2/2018) நடைபெறுகிறது. சித்திரையில் திருவோணம் நட்சத்திரத்திலும், ஆனியில் உத்திரம் நட்சத்திரத்திலும்,மார்கழியில் திருவாதிரை நட்சத்திரத்திலும், ஆவணி, புரட்டாசி, மாசி, மாதங்களில் வரும் சதுர்த்தசி திதியிலும் நடராஜருக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடைபெறும். மாசி மாததில் மக நட்சத்திரத்தை ஒட்டி அபிஷேகம் செய்வதால் அதனை மகா அபிஷேகம் என்றும் கூறுவர்.
நடராஜர் என்றதும் முதலில் நம் நினைவிற்கு வருவது சிதம்பரம்தான். அதேப்போல் சிதம்பரம் என்றதும் நம் நினைவிற்கு வருவதும் ஆருத்ரா தரிசனம் தான். "கர்மாவே பெரிது, கடவுள் இல்லை" என்று கூறிய முனிவர்களின் அறியாமையை நீக்கிட வந்த ஈசன் தனக்கு எதிராக ஏவப்பட்ட யானையை தன் ஆடையாக்கி, உடுக்கு, தீ, பாம்பு முதலியவற்றை ஆபரணமாகக் கொண்டு நடராஜராக ஆருத்ரா தரிசன காட்சி தந்த நாள்தான் மார்கழித் திருவாதிரை. அன்று தான் தில்லையில் நடராஜர் வ்யாகரபாத முனிவருக்கு நடன தரிசனம் தந்தாராம்.
நடராஜர் மகா அபிஷேகம்:
ஸ்ரீநடராஜப் பெருமானுக்கும் வருடத்திற்கு ஆறுமுறைதான் அபிஷேகம் நடைபெறும். தேவர்களின் பகல்பொழுதான உத்திராயணத்தின் இரண்டாவது மாதம் மாசி. சிசிர ருதுவில் கும்பம் என்றழைக்கப்படும் மாசி மாதம் தேவர்களின் காலைப்பொழுதாகும். இந்த மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்தசி திதியில் தேவர்கள் இறைவனுக்கு காலை நேர பூஜை செய்வதாக சாஸ்த்திரங்கள் கூறுகின்றன. இதனை மாசி அபிஷேகம் என்று சொல்வர்.
அபிஷேகம் என்றால் மங்கள ஸ்னானம். அதாவது மங்கள நீராட்டு. வைஷ்ணவ ஸ்தலங்களில் ஸ்வாமிக்கு மங்கள நீராட்டு செய்வதை "திருமஞ்சனம்" என்றும் சிவ ஸ்தலங்களில் "அபிஷேகம்" என்றும் கூறுவது வழக்கம். ஆனால் மிகச்சிறப்பாக சிவ ஸ்தலங்களில் முதன்மையான ஸ்தலமான சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் ஆனிமாதத்தில் நடைபெறும் அபிஷேகத்தை ஆனித்திருமஞ்சனம் என்றும் மார்கழி மாதத்தில் நடைபெறும் அபிஷேகத்தை ஆருத்ரா அபிஷேகம் என்றும் மற்ற நான்கு மாதங்களில் நடைபெறும் அபிஷேகத்தை நடராஜர் அபிஷேகம் என்றும் அழைக்கப்படுகிறது.
அபிஷேகத்தன்று இறைவனுக்கு பால், தயிர், இளநீர், திருமஞ்சனபொடி, பஞ்சாமிர்தம்(பழங்கள்), தேன் சந்தனம். திருமஞ்சனம் செய்யபடுகிறது. பிறகு ஸ்நபனமாக கும்பதீர்த்தம் சேர்க்கப்படுகிறது. இதனால் பகவான் குளிர்ச்சி அடைகிறார். சான்னித்யம் கிடைக்கிறது.
ஜோதிடத்தில் நடராஜர் அபிஷேகமும் தரிசனமும்:
ஈசனின் திருநட்சத்திரம் திருவாதிரை. மிக உஷ்ணமான நட்சத்திரம் இது. தவிர, ஆலகாலம் உண்ட நீலகண்டன் அல்லவா அவர். சாம்பல் தரித்தவன். அக்னியை ஏந்திக் கொண்டிருப்பவன். ஆக மொத்தம் உஷ்ணாதிக்கத்துடன் இருப்பவன். எனவே, அவனுக்குக் குளிரக் குளிர அபிஷேகம் செய்யச் சொல்கிறது ஆகம விதி. இதனால்தான் சிவபெருமானை அபிஷேகப் பிரியன் என்று கொண்டாடுகிறோம்.
உஷ்ண நக்ஷத்திரமான திருவாதிரை நக்ஷத்திரத்தின் அதிபதியான ருத்ர மூர்த்தியான சிவனை குளிர்விப்பதற்காக வருடத்திற்கு ஆறு அபிஷேகங்கள் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றன ஸ்ரீநடராஜப் பெருமானுக்கும் வருடத்திற்கு ஆறுமுறைதான் அபிஷேகம் நடைபெறும்.
சாதாரணமாக குளியலுக்கு காரகர் நீர் ராசி அதிபதியான சந்திரன் ஆகும். ஆனால் திருமஞ்சனம் என்பது பலவித வாசனை பொருட்கள் மற்றும் குளிர்விக்கும் பொருட்களை கொண்டு செய்யப்படுவதால் திருமஞ்சனத்தின் காரகர் சுக்கிரன் என்கிறது பாரம்பரிய ஜோதிடம்.
ஒருவர் இசையில் சிறந்து விளங்க சுக்கிரனின் பலம் ஜாதகத்தில் மிக அவசியமாகும். ஜாதகத்தில் இசையில் சிறந்துவிளங்க தொடர்புள்ள பாவங்கள் காலபுருஷனுக்கு வாக்கு ஸ்தானமான ரிஷபம், தொண்டையை குறிக்கும் மிதுனம் மக்களிடையே பிரபலமாக ஏழாம் பாவம் மற்றும் ஜென வசிய ராசியான துலாம் ஆகிய வீடு மற்றும் அதிபதிகள் சுப பலத்துடன் விளங்க வேண்டும்.
இரண்டாம் வீடு மூன்றாம் வீடு, ஏழாம் வீடு,சுக்கிரன் புதன் பலம் பெற்று இருக்க வேண்டும். சாதாரன பேச்சிற்க்கு வாக்கு ஸ்தான பலமும் புதபலமும் போதும். ஆனால் அனைவரையும் கவர்ந்திழுக்கும் இசையில் சிறந்து விளங்க லக்கினம் சுக்கிரனின் வீடாக அமைவது அல்லது வாக்கு ஸ்தானம் சுக்கிரனின் வீடுகளாக அமைவது முக்கியம்.
பொதுவாகவே மனோகாரகன் சந்திரன், புதன் மற்றும் சுக்கிரனின் இணைவு ஒருவரை கலைத்துறையில் பிரபலமடைய செய்யும். இந்தவருடம் மாசி மாத மகா அபிஷேகம் புதன் கிழமையில் அமைந்துள்ளது. இந்த சமயத்தில் கோசாரத்தில் சூரியன், புதன், சுக்கிரன் மூன்று கிரஹங்களும் கும்பத்தில் கூடியிருக்க சந்திரன் தனது வீட்டில் ஆட்சி பலம் பெற்ற நாளில் நடைபெறுகிறது. மேலும் கும்ப ராசி கால புருஷனுக்கு காலை குறிக்கும் இடமாகும். மேலும் கும்பத்திற்க்கு சனைச்சர பகவானின் பார்வையும் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நடராஜர் அபிஷேக நாயகர் நடராஜரின் சிறப்பே ஆடல், பாடல் மற்றும் நாட்டியம்தான். அத்தகைய நாட்டியக்கலையை கற்று தேர்ச்சிபெரும் அமைப்பு யாருக்கு?
1. நாட்டியம் மற்றும் கலைகள், ஆடல் பாடல், கூத்து, சினிமா போன்றவற்றின் காரகர் நம்ம ஹீரோ சுக்கிர பகவான்தான் என்கிறது பாரம்பரிய ஜோதிடம். என்றாலும் சந்தரன் மற்றும் புதன் துணை நிற்க வேண்டும்.
2. நாட்டியத்திற்க்கு கால் பாதம் தான் அடிப்படையாகும். காலபுருஷனுக்கு பன்னிரெண்டாம் பாவமான மீன ராசி நாட்டியத்திற்க்கான பாவமாகும். எனவே சுக்கிரன், காலபுருஷனுக்கு 12ம்பாவம மீனம் மற்றும் அதன் அதிபதி குரு, ஜாதகத்தில் 12ம் பாவம் மற்றும் அதன் அதிபதி ஆகியவை காரக கிரகங்களாவர்.
3. கிரஹங்களில் கால் மற்றும் எலும்புகளின் காரகர் சனைச்சர பகவான் ஆகும். அவர் ஜாதகத்தில் பலம் பெற்று சந்திரன், புதன், சுக்கிரன் ஆகியவர்களுடன் சேர்க்கை பெற்று நிற்க வேண்டும்.
ஜோதிடத்தில் பரதநாட்டியத்திற்கான கிரக நிலைகள்:
1. சுக்கிரனின் வீடுகளான ரிஷபம் மற்றும் துலா ராசியை லக்னமாக கொண்டு சுக்கிரன் ஆட்சி பெறுவது.
2. காலபுருஷனுக்கு பன்னிரெண்டாம் வீட்டில் சுக்கிரன் உச்சம் பெறுவது.
3. சுக்கிரனும் காலபுருஷனுக்கு பன்னிரெண்டாம் வீட்டதிபதியான குருவும் பரிவர்தனை பெற்று நிற்பது.
4. சுக்கிரனும் பன்னிரெண்டாம் வீட்டதிபதியும் சேர்க்கை பெறுவது.
5. கால்களையும் எலும்புகளையும் குறிக்கும் சனைஸ்வர பகவானின் வீட்டில் சுக்கிரன் நிற்பது மற்றும் சுக்கிரனின் வீட்டில் சனி உச்சமடைவது.
6. உடம்பை முறுக்கி ஆட மூலை ராசிகளில் சர்ப கிரகங்கள் நிற்பது.
நாட்டியக்கலையில் சிறந்துவிளங்க வணங்க வேண்டிய ஸ்தலங்கள்:
சிதம்பரம் நடராஜபெருமானின் நடனம் நாட்டிய சாஸ்திரத்தின் உச்ச நிலையினை குறிக்கும் அம்சமாகும். சிதம்பரம், மதுரை, திருநெல்வேலி, குற்றாலம், திருவாலங்காடு ஆகிய பஞ்ச சபைகளில் நடராஜ பெருமானை வணங்குவது, நடனம் யோககலை ஆகியவற்றில் உன்னத நிலை அடைய செய்யும்.
கலைத்துறைகளில் பிரபலமடைந்தவர்களின் வீடுகளில் கண்டிப்பாக பார்வையாளர்களை கவரும் வண்ணம் ஒரு நடராஜர் சிலை வைத்திருப்பார்கள். அதன் காரணம் இதுதான்.
கலைகளின் சிறந்து புதனின் பலமும் மிக முக்கியமாகும். நவரத்திணங்களில் புதனின் ரத்திணம் மரகதமாகும். கலைகளின் நாயகர் மரகத்தில் அமைந்திருந்தால் எப்படி இருக்கும்?
பஞ்ச நதன நடராஜர்:
திருச்சி - சென்னை தேசியநெடுஞ்சாலையில்திருச்சியை அடுத்துள்ளது பாடலூர் என்ற திருத்தலம்.இங்கிருந்து 4 கிலோமீட்டர்தூரம் சென்றால் திரு ஊற்றத்தூர் என்ற ஊர் உள்ளது. இங்குள்ளஆலயத்தில்ஆசியாவிலேயே மிகவும்அரிதான பஞ்சநத கல்லால்செய்யப்பட்ட அபூர்வ நடராஜர் திருமேனியை தரிசிக்கலாம்.
பஞ்சநத கற்கள் சூரியனில்இருந்து வெளி வரும் ஆரோக்கியமான கதிர் வீச்சினை சேமித்து வைத்துக் கொள்ளும் ஆற்றல் உடையன. இந்த வகை கற்சிலை அரிதானது என்பது ஆலயத்தில் இருந்து நமக்கு கிடைக்கும் தகவல். ஆலிங்க நதனம், பஞ்சநதனம், சிங்க நதனம், யானை நதனம், யாழி நதனம் என்று 5 வகையான சிலாக்கற்கள் உள்ளன. இதில் பஞ்சநதனம் என்ற பாறை, தெய்வீக ஒளி வீசும் சில்ப சாஸ்திரத்தில் குறிப்பிடுகிறது.
சூரியபிரகாசத்தை தருகின்ற இந்த பஞ்சநதன பாறைகளால், இவ்வூர் நடராஜர் சிலை வடிவமைக்கப்பட்டு உள்ளது. இங்குள்ள இறைவி சிவகாமசுந்தரியின் உருவ அமைப்பு வணங்குவதற்கு மட்டுமில்லாமல் ரசனைக்குரியதாகவும் இருப்பது தனிச்சிறப்பாகும். அன்னை தன் முகத்தைசாய்த்து பஞ்சநதனநடராஜரை பார்ப்பதுபோல்அழகாக காட்சியளிக்கிறார். சிறுநீரகம் மற்றும் சிறுநீரக கல் தொடர்பான நோய்களுக்கு இந்த நடராஜர் மருந்தாக திகழ்கிறார். ஜோதிடத்தில் சிறு நீரக கோளாருகளை குறிக்கும் கிரஹம் சுக்கிரன் என்பது குறிப்பிடத்தக்கது.