ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் மாசி தெப்பத்திருவிழா - 18ல் வெள்ளி கருட சேவை
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் தெப்பத்திருவிழா இன்று தொடங்கி 23ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி சனிக்கிழமை மேலவாசலில் உள்ள தெப்பக்குளத்தில் ஆஸ்தான மண்டபம் அருகே முகூர்த்தக்கால் நடப்பட்டது.
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் மாசி தெப்பத்திருவிழா இன்று தொடங்கி வருகிற 23ம் தேதி வரை நடைபெறுகிறது. 4ஆம் திருவிழாவான 18ஆம் ஆம் தேதியன்று நம்பெருமாள் வெள்ளி கருட வாகனத்தில் உலா வருகிறார். ஸ்ரீரங்கத்தில் மாசி மாதம் மட்டும் நடைபெறும் வெள்ளி கருடசேவை சிறப்பு வாய்ந்தது. மாசி கருடன் காசியிலும் கிடைக்காது என்ற பழமொழி பழக்கத்தில் உள்ளது.
ஸ்ரீரங்கம் மேலவாசலில் உள்ள தெப்பக்குளம் ஐந்தரை ஏக்கர் பரப்பளவு கொண்டது. இங்கு வரும் 22ஆம் தேதி மாசி தெப்ப உற்சவம் நடைபெறுவதால் தெப்பக்குளத்திற்கு காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் இருந்து வாய்க்கால் மூலமாக தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாசி மாதம் தெப்பத்திருவிழா இன்று தொடங்கியுள்ளது. தெப்பத்திருவிழாவின் முதல் நாளான இன்று ஹம்ச வாகனத்திலும், 2ஆம் நாள் ஹனுமந்த வாகனத்திலும் நம் பெருமாள் எழுந்தருளிகிறார்.
3ஆம் நாள் கற்பகவிருட்ச வாகனத்திலும், 4ஆம் நாள் வெள்ளி கருட வாகனத்திலும், 5ஆம் நாள் இரட்டை பிரபை வாகனத்திலும், 6ம் நாள் யானை வாகனத்திலும் நம்பெருமாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
தெப்பத்திருவிழாவின் 7ஆம் நாள் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளுகிறார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் விழாவின் 8ஆம் நாளான 22ஆம்தேதி மாலை நடைபெறுகிறது.
தெப்பத்திருவிழா நடைபெறும் நாளன்று மாலை 3 மணியளவில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்திலிருந்து திருச்சிவிகையில் புறப்பட்டு மேலவாசலில் உள்ள தெப்பக்குள ஆஸ்தான மண்டபத்திற்கு மாலை 5 மணிக்கு வந்து சேருகிறார். அன்று இரவு 7.15 மணியளவில் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 7.30 மணி முதல் இரவு 9 மணிவரை தெப்ப உற்சவம் கண்டருளுகிறார். இரவு 9.15 மணிக்கு தெப்பக்குளத்தின் மைய மண்டபம் சென்றடைகிறார். பின்னர் அங்கிருந்து இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு இரவு 11.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.
9ஆம் திருநாளான 23ம் தேதி பந்தக்காட்சி நடைபெறுகிறது. இதையொட்டி காலை 7 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி பகல் 1.30 மணியளவில் தெப்பக்குளம் ஆஸ்தான மண்டபம் சேருகிறார். பகல் 2 மணி முதல் மாலை 4 மணிவரை திருமஞ்சனம் கண்டருளுகிறார்.
பின்னர் மாலை 7 மணிக்கு மண்டபத்திலிருந்து ஒற்றை பிரபை வாகனத்தில் புறப்பட்டு பந்த காட்சியுடன் சித்திரை வீதிகளில் வலம் வந்து படிப்பு கண்டருளி இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். இத்துடன் தெப்பத்திருவிழா நிறைவடைகிறது.
ஸ்ரீரங்கத்தில் மாசி மாதம் மட்டும் நடைபெறும் வெள்ளி கருடசேவை சிறப்பு வாய்ந்தது. ஸ்ரீரங்க ஸ்தலமானது சுக்ர ஸ்தலம் என்பதால் இங்கு வெள்ளி உலோகம் மிகவும் விசேஷமானது. இத்தகைய சிறப்பு வாய்ந்தது மாசி கருடன். இது வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே வரும் மிக விசேஷமான காட்சி. இந்த வெள்ளி கருட சேவையின் சிறப்பைக் கூறும் மாசி கருடன் காசியிலும் கிடைக்காது என்ற பழமொழி பழக்கத்தில் உள்ளது.