மவுனி அமாவாசை 2019: பிரயாக் ராஜ் கும்பமேளாவில் கோடிக்கணக்கானோர் புனித நீராடல்
தை அமாவாசையையொட்டி உத்தரப் பிரதேசத்திலுள்ள பிரயாக் ராஜ் நகரில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் புனித நீராட கோடிக்கணக்கான மக்கள் குவிந்துள்ளனர்.
பிரயாக் ராஜ்: தமிழகத்தில் தை அமாவாசை என்றும் வட இந்தியாவில் மவுனி அமாவாசை எனவும் அழைப்படும் இன்றைய தினத்தில் பிரயாக்ராஜ் நகரில் நடந்து வரும் கும்பமேளாவில் கோடிக்கணக்கான பக்தர்கள் புனித நீராடுவதற்கு குவிந்துள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக் ராஜ் நகரில் கும்பமேளா விழா நடந்து வருகிறது. இதையொட்டி அங்குள்ள திரிவேணி சங்கமத்தில் கடந்த 15ஆம் தேதி முதல் லட்சக்கணக்கான மக்கள் புனித நீராடி வருகின்றனர். ஜனவரி 15ஆம் தேதியில் இருந்து மார்ச் 4ஆம் தேதி வரை இந்த விழா நடைபெறுகிறது.
தை அமாவாசையான இன்றைய தினத்தை வடமாநிலத்தவர்கள் மவுனி அமாவாசை என்ற பெயரில் அனுஷ்டிக்கின்றனர்.
இந்நிலையில் இந்நாளில் கடற்கரையிலோ, நதிக்கரையிலோ புனித நீராடி முன்னோர்களை வழிபடுவது வழக்கம். புனித நகரமான வாரணாசியில் லட்சக்கணக்கான மக்கள் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு தர்பணம் செய்து வழிபட்டனர்.
உலகம் உருவான நாள்
மவுனி அமாவாசை தினம் கும்பமேளாவின் முக்கிய அம்சமாகக் கருதப்படுகிறது. அமாவாசை தினத்தன்றுதான் உலகம் உருவானதாக ஒரு புராணக்கதை உள்ளது. எனவேதான் இந்த நாளில் புனித நீராடுவது முக்கியத்துவம் பெறுகிறது.
கோடிக்கணக்கான மக்கள்
கும்பமேளா நடைபெறும் திரிவேணி சங்கமத்தில் அதிகாலை முதலே லட்சக்கணக்கானோர் புனித நீராடி, முன்னோர்களை வழிபட்டு வருகின்றனர். இன்று மட்டும் சுமார் 3 கோடி பேர் கும்பமேளாவில் கலந்துகொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நாகா சாதுக்கள்
பக்தர்களுக்கு முன்பாக 'அகாடா' சாதுக்கள் புனித நீராடினர். அவர்கள் சரணகோஷங்களை எழுப்பியபடி மந்திரங்களை உச்சரித்துக் கொண்டே நீராடினர். நிர்வாண சாதுக்களான நாகா சாதுக்களும் இன்று கும்பமேளாவில் பெருமளவு திரண்டிருந்தனர். உடலையே உறைய வைக்கும் அளவுக்கு கடும் குளிர் நிலவினாலும் கூட அதைப் பொருட்படுத்தாமல் வெற்று உடம்புடன் பக்தர்கள் கங்கையில் முழுக்குப் போட்டு புனித நீராடினர்.
மகாசிவராத்திரி
பிப்ரவரி 10ஆம் தேதி வசந்த பஞ்சமி அன்று ஒரே நாளில் பல லட்சம் பக்தர்கள் வருவர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரி 12 ரத சப்தமி, பிப்ரவரி 13 பீஷ்டாஷ்டமி, பிப்ரவரி 16 ஜெய ஏகாதசி, பிப்ரவரி 19 மகாபூர்ணிமா, மார்ச் 05 நாள் மகாசிவராத்திரி ஆகிய நாட்களும் நீராடுவதற்கு புண்ணிய தினங்களாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நாட்களிலும் கோடிக்கணக்கான மக்கள் புனித நீராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
10 மண்டலங்கள்
கும்பமேளா பகுதியானது மொத்தம் 10 மண்டலங்களாகவும், 25 பிரிவுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. இங்கு அவசர நடவடிக்கை மேற்கொள்வதற்காக, 40 காவல்நிலையங்களும் சில தீயணைப்பு நிலையங்களும் தயார் நிலையில் உள்ளன. 440 சிசிடிவி கேமராக்கள் கண்காணிப்புப் பணியில் பயன்படுத்தப்பட்டுள்ளன.