மாசி அமாவாசையில் களை கட்டிய மயான கொள்ளை ஆடு கோழி ரத்தம் குடித்த பக்தர்கள்
மாசி அமாவாசையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள அங்காளம்மன் கோவில்களில் மயான கொள்ளை நடைபெற்றது. பக்தர்கள் ஆடு, கோழிகளின் ரத்தம் குடித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
சென்னை: மகா சிவராத்திரியை முன்னிட்டு மாசி மாத அமாவாசை நாளான நேற்று தமிழ்நாட்டில் உள்ள பிரபல கோவில்களில் மயான கொள்ளை நடைபெற்றது. மயானங்களில் காய்கறிகள், மாமிசங்களை சூறை விட்டு நேர்த்திக்கடன்களை செலுத்தினர். காளியம்மன், அங்காளம்மன் கோவில்களில் நடைபெற்ற மயான கொள்ளை திருவிழாவில் பக்தர்கள் ஆடு, கோழிகளின் ரத்தம் குடித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மாசி மாதம் மகாசிவராத்தியை முன்னிட்டு அமாவாசை நாளில் நடைபெறும் மயானக்கொள்ளை விழா தமிழகத்தில் பிரசித்தி பெற்றது. காளியம்மன், அங்காளம்மன், பெரியாண்டிச்சி அம்மன் கோயில்களில் இருந்து ஊர்வலமாக மயானங்களுக்கு வரும் பக்தர்கள், அங்கு தங்கள் முன்னோர்கள் சமாதியில் படையல் போட்டு சிறப்பு பூஜைகள் செய்து வழிபடுவர். நள்ளிரவில் நடைபெறும் இந்த மயான கொள்ளை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வழிபட்டால் நினைத்த காரியங்கள் கைகூடும் என்பது நம்பிக்கை.
தமிழகம் முழுவதும் மயானக்கொள்ளை நடைபெற்றாலும் மேல்மலையனூரில் அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் நடைபெறும் மயானக்கொள்ளை பிரசித்தி பெற்றது. தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் இந்த திருவிழாவில் பங்கேற்கின்றனர். தமிழ்நாடு முழுவதும் அங்காளம்மன் குடிகொண்டுள்ள அனைத்து ஆலயங்களிலும் மயானக்கொள்ளை நடைபெறுகிறது. இதற்கு கதை ஒன்று கூறப்படுகிறது.
பிரம்மன் தலையை வெட்டிய சிவன்
ஐந்து தலைகளுடன் விளங்கிய பிரம்மன், திலோத்தமை என்ற தேவ மங்கையின் அழகில் மயங்கி அவளைத் துரத்தினான். திலோத்தமை கயிலாயத்தில் அடைக்கலம் புகுந்தாள். பார்வதியின் வேண்டுகோளுக்கிணங்க, பிரம்மனின் ஆணவத்தை அழிக்க, விஷ்ணுவின் ஆலோசனைப்படி, பிரம்மனது ஒரு தலையை சிவபெருமான் வெட்டி எறிந்தார். ஆனால், அது மீண்டும் மீண்டும் முளைக்கவே, அதனைத் தன் கையிலேயே தாங்கிக் கொண்டார். இதனால் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது.
சரஸ்வதி கொடுத்த சாபம்
இதனால் சிவனின் உருவமே பொலிவிழந்தது. இதனை அறிந்த பிரம்மனின் மனைவியான சரஸ்வதி சாபமிடவே, சிவபெருமான் பிச்சை எடுக்கும் கோலத்தையும், அன்னை பார்வதி அலங்கோல வடிவத்தையும் பெற்றனர். இதையடுத்து விஷ்ணு, தன் தங்கை பார்வதியிடம், கலங்காதே! நீ மலையரசன் பட்டினத்தில் பூங்காவனத்துப் புற்றில் பாம்பு வடிவில் இருக்கும்பொழுது உனக்கு சாப விமோசனம் கிடைக்கும் என வழிகாட்டினார்.
அங்காளியின் ஆவேசம்
அங்காளபரமேஸ்வரியாக அகோர உருவம் கொண்ட அன்னை பார்வதி நாடெல்லாம் அலைந்து திரிந்து திருவண்ணாமலை வந்து சேர்ந்தாள். அன்னை புற்று வடிவமெடுத்து, மேல்மலையனூர் அரண்மனையில் உள்ள பூங்காவனத்தில் ஐந்து தலை நாகமாக வாழ்ந்து வந்தாள். பூங்காவனத்தில் பெரிய புற்று இருப்பதைக் கண்டு, மலையரசன் அதனை இடிக்க ஆள் அனுப்பினான். அந்த ஆட்கள் அனைவரையும் அன்னை புற்றுக்குள் மறைந்தாள். மீண்டும் ஆள் அனுப்ப, அவர்களும் புற்றுக்குள் மறைந்தனர். இதைக் கண்டு அஞ்சிய மலையரசன், தன் தவறை உணர்ந்து புற்றை வணங்கி, நின்றபோது அன்னை காட்சி கொடுத்தாள்.
அன்னபூரணி கொடுத்த உணவு
அச்சமயம் மலையனூர் வந்த சிவனின் குரல் கேட்ட பார்வதி, விஷ்ணுவை மனதில் நினைத்து தியானம் செய்தாள். விஷ்ணுவின் ஆலோசனைப்படி, விநாயகப்பெருமானைக் காவல் நிற்கச் செய்து, அன்னபூரணி மூலம் சுவையான உணவைச் சமைத்து, அதை மூன்று கவளமாக்கினாள். இரண்டு கவளங்களைச் சிவனின் கையில் இருந்த கபாலத்திற்கு ஊட்ட, அதன் சுவையில் மயங்கிய கபாலம் ஆசை தீர உண்டது. மூன்றாவது கவளத்தை வேண்டுமென்றே கீழே தவற விட, சுவையில் மயங்கிய கபாலம் தரையிறங்கியது.
நீங்கிய தோஷம்
இதற்காகவே காத்துக் கொண்டிருந்த அன்னை அங்காள பரமேஸ்வரி, கபாலத்தைத் தன் காலால் நசுக்கித் தரையில் அழுத்தினாள். உடனே சிவபெருமானின் பிரம்மஹத்தி தோஷம் நீங்கி சுயநிலையை அடைந்தார். இந்த ஐதீகத்தை நினைவுபடுத்தும் வகையிலேயே மாசி மாதம் சிவராத்திரிக்கு மறுநாள் அனைத்து ஊர் மயானங்களிலும் மயானக்கொள்ளை உற்சவம் நடத்தப்படுகிறது.
மயானக்கொள்ளை உற்சவம்
ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி பிரம்மனின் தலையை தன் காலால் மதித்து சிவனை பிரம்ம ஹத்தி தோஷத்திலிருந்து விடுவிக்கின்றாள் இதனால் ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி உக்கரம் அடைகிறாள். எனவே அம்மனை சாந்தி படுத்தவே அமாவாசை நள்ளிரவில் அம்மனை ஊஞ்சலில் அமரவைத்து தாலட்டு பாடல்கள் பாடி அம்மனை சாந்தி படுத்துகின்றனர். அன்றைக்கு அம்மனைக் காண வரும் பக்கதர்களுக்கு அம்மன் அருள் பூர்ணமாக கிடைப்பதாக நம்பப்படுகிறது.
அங்காளம்மன் ஆக்ரோஷம்
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நேற்றிரவு மயானக் கொள்ளையை முன்னிட்டு அங்காளி கோப வடிவினளாக அலங்கரிக்கப்பட்டிருந்தாள். அவரது கையில் முறம் ஒன்றில் அவல், பொரி, கடலையுடன், ஆட்டு நுரையீரல் ஒன்றும் அங்காளம்மன் வாயில் வைத்தபடி ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். அங்காளம்மனைச் சூழ்ந்து பூத கணங்களாக கருப்பு சேலை அணிந்த பூதங்கள் போல வேடம் தரித்து கூத்தாடியபடி ஊர்வலத்தில் அழைத்து வரப்பட்டார். அப்போது அங்காளம்மனுக்கும், அவரது பேய் பூத கணங்களுக்கும் பக்தர்கள் காணிக்கை செலுத்தினர். நள்ளிரவு நேரத்தில் மயானத்தில் சூறையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த சூறையில் கிழங்குகள், பழ வகைகள், காய்கறிகள், பட்சணங்கள் முதலியவை வாரி இறைக்கப்பட்டன. அந்த பொருட்களை பக்தர்களும், விவசாயிகளும் போட்டி போட்டுக் கொண்டு எடுத்துச்சென்றனர்.
மனித எலும்பு
கோவை மாவட்டம் சொக்கம்புதூர் மயானத்தில் சிவராத்திரியை முன்னிட்டு மயான கொள்ளை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மகாசக்தி மாசாணி அம்மன் மண் உருவத்தை சிதைத்து அதில் இருந்து மனித எலும்பை வாயில் கவ்வியபடி நள்ளிரவில் ஆக்ரோசமாக மயான கொள்ளை நடைபெற்றது.
பக்தர்கள் நேர்த்திக்கடன்
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே விளங்காமுடி கிராமத்தில், அங்காளம்மன் என்கிற பூங்காவனத்தம்மன் கோயிலில், நேற்று மயானக்கொள்ளை நடைபெற்றது. இதையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜை நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி ஊர்வலமாக வந்தனர். இதனை தொடர்ந்து, தென்பெண்ணை ஆற்றுக்கு தேர் இழுத்து வரப்பட்டு, அங்கு மயான சூறை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது, பூசாரியிடம் சாட்டையால் அடி வாங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். மயான கொள்ளை நாளில் சாட்டையடி வாங்கினால், பில்லி சூனியம், பேய் விலகும் என்பது நம்பிக்கை என்பதால், இளம்பெண்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் சாட்டையால் அடி வாங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்த மயான கொள்ளை நிகழ்ச்சியை காண, போச்சம்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.