மயிலாடுதுறை காவிரி மகா புஷ்கரம் விழா: லட்சக்கணக்கான பக்தர்கள் நீராட ஏற்பாடு
நாகை மாவட்டம் மயிலாடுதுறை துலாக்கட்டம் காவிரியில் மகாபுஷ்கர விழா நடைபெற உள்ளதை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம்: மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் வரும் 12ஆம் தேதி மகா புஷ்கர விழா நடைபெறுவதை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த புஷ்கர விழாவில் பங்கேற்று புனித நீராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மயிலாடுதுறையில் அமைந்துள்ள துலாக்கட்டம், ஒரு புண்ணிய தீர்த்தமாக கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் இங்கு நடைபெறும் காவிரி தீர்த்தவாரி நிகழ்ச்சி மிகவும் புகழ் பெற்றதாகும்.
கங்கையில் தினமும் நீராடினால் என்ன புண்ணியம் கிடைக்குமோ, அந்த புண்ணியம் மயிலாடுதுறை துலாகட்ட காவிரி ஆற்றில் புனித நீராடினால் கிடைத்துவிடும் என்பது ஐதீகம். காவிரி பகுதியில் மேற்கு நோக்கிய திசையில், இரண்டு இடங்களில் மட்டுமே நந்தி சிலை அமைந்துள்ளது. அவற்றுள், கர்நாடகாவிற்கு பிறகு இங்குதான் காவிரியின் நடுவே, தனி சன்னதியில் நந்தி சிலை அமைந்துள்ளது.
புஷ்கரம் விழா
புஷ்கரம் என்பது நதிகளுக்கு உரிய விழா. புஷ்கரம் என்றால் தீர்த்த குரு, ஆதி குரு என்று பொருள்படும். புஷ்கரத் திருவிழா ஆண்டுதோறும் குருபகவான், ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும் பொழுது அந்தந்த ராசிக்குரிய நதிகளில் நடைபெறுவதாகும்.
குரு பெயர்ச்சி
குருபெயர்ச்சி சமயங்களில் அந்தந்த ராசிக்குரிய நதிகளில் 12 நாள் பிரவேசம் செய்வார். இந்தியாவிலுள்ள கங்கை, நர்மதா, சரஸ்வதி, யமுனை, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, தாமிரபரணி, பிரம்மபுத்ரா, துங்கபத்ரா, சிந்து, பரணீதா என்ற 12 நதிகளிலும் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை புஷ்கரம் கொண்டாடப்படுகிறது.
துலாம் ராசியில் காவிரி
குருபகவான் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பிரவேசம் செய்யும் போது, காவேரி புஷ்கரம் கொண்டாடப்படுகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் இந்த நிகழ்வு, மஹாபுஷ்கரமாக இந்த ஆண்டு நடைபெற உள்ளது. வருகிற 12ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை, 12 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று புனித நீராட உள்ளனர்.
புனித நீராடும் பக்தர்கள்
இதற்காக காவேரியில் துலாக்கட்டம் பகுதியில் பக்தர்கள் நீராடுவதற்கு வசதியாக, வருடம் முழுவதும் தண்ணீர் இருக்கும் வகையில் தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பழங்கால மண்டபங்களும் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.
பக்தர்கள் வழிபாடு
இந்நிலையில், நாகை மாவட்டம் மயிலாடுதுறை துலாக்கட்டம் பகுதியில் மகாபுஷ்கர விழா சிறப்புடன் நடைபெற வேண்டியும், காவேரி ஆற்றில் விரைவில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி - விவசாயம் செழிக்க வேண்டியும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதில் திரளானோர் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.
12 ராசிகளும் நதிகளும்
குருபகவான் மேஷ ராசியில் இருக்கும்போது கங்கையிலும், ரிஷபத்தில் இருக்கும்போது நர்மதையிலும், மிதுனத்தில் இருக்கும்போது சரஸ்வதியிலும், கடகத்தில் இருக்கும்போது யமுனையிலும், சிம்மத்தில் இருக்கும்போது கோதாவரியிலும், கன்னியில் இருக்கும்போது கிருஷ்ணாவிலும், துலாமில் இருக்கும்போது காவிரியிலும், விருச்சிகத்தில் இருக்கும்போது தாமிரபரணியிலும், தனுசுவில் இருக்கும்போது சிந்துவிலும், மகரத்தில் இருக்கும்போது துங்கபத்ராவிலும், கும்பத்தில் இருக்கும்போது பிரம்மபுத்ராவிலும், மீனத்தில் இருக்கும்போது கோதாவரி நதியின் உபநதியான பரணீதாவிலும் புஷ்கரமானவர் இருந்து அருள்பாலிக்கிறார்.
காவிரியில் புஷ்கரம் விழா
இதன்படி, குரு பகவான் கன்னியிலிருந்து துலாம் ராசிக்கு இடம்பெயரும்போது, துலாமுக்கு உரிய காவிரி நதியில் வாசம் செய்வார் என்பது நம்பிக்கை. காவிரியில் இந்த புஷ்கரம் 144 வருடங்களுக்கு ஒருமுறை வருவதால், செப்டம்பர் 12 முதல் 24ம் தேதி வரை காவிரி மகா புஷ்கர விழாவாக கொண்டாடப்படுகிறது.
புனித நீராடியதன் பலன்
புஷ்கர புண்ணிய காலத்தில் சிவன், விஷ்ணு, பிரம்மா, தேவர்கள், ரிஷிகள் போன்றோர் நதிகளில் வாசம் செய்வதால், இந்த புண்ணிய காலங்களில் நதியில் நீராடுவதால் மூன்றரை கோடி தீர்த்தத்தில் புனித நீராடிய பலன் கிடைக்கும். அன்னதானம், வஸ்திரதானம் போன்ற பல தானங்கள் செய்தால் பன்மடங்கு பலனை தந்து நம்மை மோட்சத்திற்கு போக வழி வகுக்கும். புஷ்கர புண்ணிய காலத்தில் நீராடி பிதுர்களுக்கு தர்ப்பணம் முதலிய சடங்குகள் செய்வதால் பிதுர்சாபம் நீங்கி நல்வாழ்க்கை வாழ வழி வகுக்கும் என்று நம்பப்படுகிறது.