நவகிரகங்களும் நோய்களும்: எந்த கிரகம் பாதிக்கப்பட்டால் எந்த ராசிக்கு என்ன நோய் வரும் தெரியுமா
12 ராசிகளுக்கும் வரக்கூடிய பொதுவான நோய்கள் உள்ளன. அவரவர் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் சேர்க்கை பார்வைப்படியே நடக்கும். ஜோதிட ரீதியாக எந்த கிரகம் பாதிக்கப்பட்டிருக்கிறதோ அந்த கிரகத்திற்குரிய பரிகாரத்தை
சென்னை: நவகிரகங்களும் நம் ஜாதகத்தில் ராசிக்கட்டங்களில் சாதகமாகவோ, பாதகமாகவோ அமைந்திருக்கின்றது. ஒவ்வொரு கிரகமும் தனக்கென சில தனித் தன்மையுடன் செயல்படுகின்றன. பாதகமாக அமைந்த கிரகங்களின் தசா புக்தி காலங்களில் அதனதன் காரகத்துவத்திற் கேற்ப நோய்கள் உண்டாகிறது. உடல் காரகனான சந்திரன், உயிர் காரகனான சூரியன், ஆயுட்காரகனான சனி போன்ற கிரகங்கள் பலம் பெற்றும், லக்னாதிபதியும் பலமாக அமையப்பெற்றும் இருந்தால் நோய் நொடி தாக்காமல் ஆரோக்கியமாக வாழ முடிகிறது. அப்படியே சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் உடனடியாக நிவர்த்தியாகி விடுகிறது.
பொதுவாக முற்பிறவியில் அவரவர் செய்த பாவ புண்ணியங்களுக்கேற்ப கிரக அமைப்புகளும், கிரக அமைப்புகளுக்கேற்ப நோய்களும் உண்டாகின்றது. எப்பொழுதுமே நல்ல ஆரோக்கியமாக வாழ்பவர்களும் உண்டு. எப்பொழுதாவது சிறு சிறு ஆரோக்கிய பாதிப்புகளை சந்திப்பவர்களும் உண்டு. தினம் தினம் நோய் நொடியால் அவதிப்படுபவர்களும் உண்டு. இதற்குக்காரணம் கிரகக் கோளாறுகளும் நமது ராசி லக்னங்களில் கிரகங்கள் அமைந்திருக்கும் விதமும்தான்.
ஜென்ம லக்னத்திற்கு ஆயுள் ஆரோக்கிய ஸ்தானமான 8ம் வீட்டில் பலஹீனமாக கிரகங்கள் அமையப் பெற்றாலும் 8ம் அதிபதியுடன் கிரகங்கள் பலஹீனமாக இருந்தாலும் நோய்கள் உண்டாகும். கிரக காரகத்துவ ரீதியாக 8ல் சூரியன் இருந்தால் உஷ்ண நோய்கள், இருதய சம்பந்தப்பட்ட பாதிப்புகள், தேய்பிறை சந்திரனிருந்தால் ஜல சம்பந்தப்பட்ட பாதிப்புகளும் தண்ணீரால் கண்டமும் செவ்வாய், சனி, ராகு போன்ற பாவிகள் சேர்க்கைப் பெற்றால், வெட்டு காயங்கள் விபத்து போன்ற அனுகூலப் பலன்களும் எட்டுக்கு 8ம் வீடான மூன்றிலோ, எட்டிலோ பாவிகள் அமையப் பெற்றால் கண்களில் பாதிப்பும் ஏற்படுகிறது. 8ல் அமையப் பெறுகின்ற கிரகங்களின் தசாபுக்தி காலங்களில் நம் ஆரோக்கிய விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. எப்படி 8ல் கிரகங்கள் பலஹீனமாக இருந்தால் அந்த கிரகங்களின் காரகத்துவதத்திற்கேற்ப நோய்கள் ஏற்படுகிறதோ, அதுபோல 6ஆம் வீட்டில் பாவ கிரகங்கள் பலஹீனமாக இருந்தாலும் நோய்கள் உண்டாகிறது. ஜெனன ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கு 6 ஆம் வீடானது ருண ரோக ஸ்தானமாகும். இது நோய், தேக ஆரோக்கியம் போன்றவற்றை அறிய உதவும் ஸ்தானமாகும். இதில் அமைகின்ற கிரகங்களின் அமைப்பினை கொண்டு நோய்கள் ஏற்படுகின்றன. நோய்களால் பாதிக்கப்படுவர்கள் அந்தந்த நோய்களுக்குரிய தெய்வ பரிகாரங்களை மேற்கொள்வது மூலம் நோய் பாதிப்புகளிலிருந்து ஒரளவுக்கு தப்பித்துக் கொள்ளலாம்.
மேஷம்
நமது உடலில் தலைப்பகுதியை அங்கம் வகிக்கும் ராசிக்கு பொதுவாக வரக்கூடிய நோய் காய்ச்சல். இந்த ராசியின் அதிபதி செவ்வாய். இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு தொற்று நோய், சுவாசக் கோளாறு, சிறுநீர் கல் அடைப்பு, ரத்த சோகை, ஏதாவது ஒரு கட்டத்தில் ஒரு சிறிய ஆபரேஷன் செய்ய வேண்டிய நிலை உருவாகும். இவைகள் அனைத்தும் ஏதாவது ஒரு சமயத்தில் வந்து போகும் நோய்கள். ராசி நாதன் செவ்வாய் பகவானால் கண்களில் பாதிப்பு, குடல்புண், காக்காய் வலிப்பு, உஷ்ண நோய், தோல் நோய்கள் உண்டாகும். விஷம் மற்றும் ஆயுதத்தால் கண்டம் உண்டாகும். எதிரிகளிடமும் உடன்பிறப்புகளிடமும் சண்டை போடும் போது உடலில் காயம் உண்டாக கூடிய நிலை தொழுநோய் போன்றவை செவ்வாய் பாதிக்கப்பட்டிருந்தால் தசாபுத்தி காலத்தில் வந்து போகும்.
ரிஷபம்
ரிஷபத்தின் அதிபதி சுக்ரன். எருது காளை போல் தோற்றம் தரக்கூடியது. இந்த ராசியில் சூரியன் பிரவேசிக்கும் மாதமே வைகாசியாகும். நமது உடலில் முகத்தை அங்கமாக வகிக்கும் இந்த ராசிக்கு வரக் கூடிய பொதுவான நோய் ஜலதோஷம். மேலும் இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு, பற்கள் சிதைவு, தோல் நோய், சீதபேதி, காசநோய், விஷக்காய்ச்சல் போன்றவை அவ்வப்போது வந்து போகலாம். ராசி அதிபதி லக்ன அதிபதி சுக்கிரன் பாதிக்கப்பட்டிருந்தால் சர்க்கரை வியாதி, சிறுநீரகக்கோளாறு, கண்களில் கோளாறு ரத்தசோகை, ரகசிய உறுப்பில் பாதிப்பு போன்றவை தசாபுத்தி காலத்தில் ஏற்படும்.
மிதுனம்
மூன்றாவது ராசியான மிதுனத்தின் அதிபதி புதன் கிரகம். சூரியன் இந்த ராசிக்கும் நுழையும் போது ஆனி மாதம் பிறக்கிறது. இந்த ராசிக்கென்று வரக்கூடிய நோய்களில் ஒன்று வாதம் ஆகும். நமது உடலில் மார்பு பகுதியில் இந்த ராசி அங்கம் வகிக்கிறது. புதன் பாதிக்கப்பட்டிருந்தால் வாய்ப்புண், கண்களில் பாதிப்பு, தொண்டை மற்றும் மூக்கில் பாதிப்பு, மனநிலை பாதிப்பு,திக்குவாய், இயற்கை சீற்றத்தால் உடல்நிலையில் பாதிப்பு, விஷத்தால் கண்டம், மூளையில் பாதிப்பு, தோல் வியாதி, மஞ்சள்காமாலை, கனவால் மன நிலை பாதிப்பு ஏற்பட்டு நோய்கள் உண்டாகும். மிதுனம் ராசியில் பிறந்தவர்களுக்கு வாயு தொல்லை, தலைவலி, வயிற்றுக்கோளாறு, தீராத மலச்சிக்கல் தொற்றுநோய்கள் தசாபுத்தி காலத்தில் வந்து போகும்.
கடகம்
சந்திரனை அதிபதியாகக் கொண்டு செயல்படுவது கடக ராசியாகும். சூரியன் இந்த ராசிக்கு செல்லும் போது, ஆடி மாதம் பிறக்கிறது. நமது உடலில் இதயத்தை அங்கம் வசிக்கும் இந்த ராசி பொதுவாக தண்ணீரால் வரும் நோய்களை உருவாக்கும். சந்திரனால் மஞ்சள் காமாலை, ஜல தொடர்புடைய நோய்கள், தூக்கமின்மை, சோம்பேறித்தனம், மனநிலை பாதிப்பு, உணவு செரிக்காத நிலை, தைரிய குறைவு, சீதபேதி, குடல் புண், முகப்பரு, சுவையை அறியும் தன்மை இழக்கும் நிலை உண்டாகும். ஜலத்தால் கண்டம், தண்ணீரில் உள்ள மிருகத்தால் கண்டம், பெண்களால் பாதிப்பு, ரத்தத்தில் தூய்மை இல்லாத நிலை போன்ற பாதிப்புகளும். சளி, காய்ச்சல் போன்ற நோய்களும் ஏற்படும். இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு மலச்சிக்கல், அஜீரண கோளாறு, காது கோளாறு, தோல் நோய் போன்றவை தசாபுத்தி காலத்தில் வந்து போகும்.
சிம்மம்
சிம்மம் ராசி சூரியனை அதிபதியாகக் கொண்ட இந்த ராசி. சூரியனால் உஷ்ண சம்பந்தப்பட்ட நோய்கள், காய்ச்சல், வயிறு கோளாறு மூலம், இருதய நோய் தோல்வியாதி, நெருப்பால் கண்டம், எதிரிகளால் கண்டம், மரம், விஷம் மற்றும் பாம்பால் கண்டம், திருடர்களால் கண்டம், கண் நோய், தெய்வக் குற்றம் மூலம் உடல் நிலையில் பாதிப்பு போன்றவை உண்டாகும். நமது உடலில் வயிற்றுப் பகுதியில் அங்கம் வகிக்கிறது. இந்த ராசிக்கும் வரக்கூடிய பொதுவான ஒன்று, உடலில் காயம் ஏற்படுவது. சூரியன் சிம்ம ராசிக்குள் நுழையும்போது, ஆவணி பிறக்கிறது. இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு நரம்பு தளர்வு, நெஞ்சு வலி, சிறுநீர் பிரச்சினை, கண் காது கோளாறு, பாத வெடிப்பு போன்றவை தசாபுத்தி காலத்தில் வந்து போகும்.
கன்னி
ராசி மண்டலத்தில் ஆறாவது ராசியாக உள்ளது கன்னி. சூரியன் இந்த ராசிக்குள் நுழையும் மாதம் புரட்டாசியாகும். நமது உடலில் இடுப்பு பகுதியில் அங்கம் வகிக்கும் கன்னி ராசிக்கென்று, பொதுவாக வரக்கூடிய நோய் முடக்கு வாதம். கன்னி ராசியின் அதிபதி புதன் இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு புதன் பாதிக்கப்பட்டால் சளித்தொல்லை, ரத்தம் சம்பந்தப்பட்ட நோய், பிறப்பு உறுப்பை சுற்றி தோல் நோய், பற்கள் பிரச்சினை போன்றவை தசாபுத்தி காலத்தில் ஏற்படும்.
துலாம்
சுக்ரனை அதிபதியாக கொண்ட துலாம், ராசி மண்டலத்தில் ஏழாவது ராசியாக விளங்குகிறது. இதன் தோற்றம்... ஒரு ஆண் தராசு கையில் பிடித்தபடி இருப்பது போல் இருக்கக் கூடியவை. இந்த ராசி நமது உடலில், அடி வயிற்றுப் பகுதியில் அங்கம் வகிக்கிறது. இந்த ராசிக்கென்று வரக்கூடிய பொதுவான நோயாக பால்வினை நோய் உள்ளது. மேலும் இந்த ராசியில் அல்லது லக்னத்தில் பிறந்தவர்களுக்கு கண் பார்வைக் கோளாறு, மூலநோய், விஷக் காய்ச்சல், வாயுத்தொல்லை போன்றவை ஏற்படும்.
விருச்சிகம்
விருச்சிகத்தின் அதிபதி செவ்வாய். ராசி அதிபதியும் லக்ன அதிபதியுமான செவ்வாய் பாதிக்கப்பட்டிருந்தால் கண்களில் பாதிப்பு, குடல்புண், காக்காய் வலிப்பு, உஷ்ண நோய், தோல் நோய்கள் உண்டாகும். விஷம் மற்றும் ஆயுதத்தால் கண்டம் உண்டாகும். எதிரிகளிடமும் உடன்பிறப்புகளிடமும் சண்டை போடும் போது உடலில் காயம் உண்டாக கூடிய நிலை ஏற்படும். சூரியன் இந்த ராசிக்குள் நுழையும் மாதம் கார்த்திகை பிறக்கிறது. இந்த ராசி நமது உடலில் பிறப்பு உறுப்புக்களில் அங்கம் வகிக்கிறது. இந்த ராசிக்கென்று வரக்கூடிய பொதுவான நோய் வாயுத் தொல்லை. இது தவிர இந்த ராசியில் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மஞ்சள் காமாலை, நரம்பு தளர்வு, மனக் கோளாறு, தோல் நோய், சளித்தொல்லை உள்ளிட்ட நோய்கள் தசாபுத்தி காலத்தில் ஏற்படும்.
தனுசு
குரு பகவானை அதிபதியாகக் கொண்ட ராசி தனுசு. இது ராசி மண்டலத்தில் ஒன்பதாவது ராசியாகும். சூரியன் மார்கழி மாதம் முழுவதும் இந்த ராசியில் இருப்பார். இந்த ராசி நமது உடலில் இடுப்புக்குக் கீழ் பகுதியில் ஆதிக்கம் செய்கிறது. இந்த ராசிக்கென்று வரக்கூடிய நோய் எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களாகும். மேலும் இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு ஒவ்வாமை என்னும் அலர்ஜி, மூச்சுக் கோளாறு, செரிமான கோளாறு, புதிய தொற்று நோய்கள், சளித் தொல்லை இருக்கக்கூடும். குருபகவான் பாதிக்கப்பட்டால் ஞாபக மறதி, காதுகளில் பாதிப்பு, குடல் புண், மற்றும் விஷப்பூச்சிகளால் பாதிப்பு ஏற்படும். பிராமணர்கள் மற்றும் பெரியோர்களின் சாபத்தால் உடல்நிலை பாதிப்பு, வறுமையால் உடல்நிலை பாதிப்பு ஏற்படும்.
மகரம்
மகர ராசியின் அதிபதி, சனி கிரகம் இதன் வடிவம் கடல் குதிரை போல் அமைந்திருக்கும். தை மாதம் முழுவதும் இந்த ராசியில் சூரியன் பயணிப்பார். இந்த ராசி மனித உடலில் முழங்கால்களை ஆதிக்கம் செய்கிறது. இந்த ராசிக்கென்றே வரக்கூடிய நோய் மஜ்ஜை நோயாகும். இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு மன அழுத்தம், பித்த நீர் பையில் கோளாறு, சுவாசக் கோளாறு, கண் பார்வைக் கோளாறு, தோல் அரிப்புகள் வந்து போகும். ராசி நாதன் சனி பாதிக்கப்பட்டிருந்தால் எலும்புகளில் பாதிப்பு ஏற்பட்டு உடலில் ஊனம் உண்டாகக்கூடிய நிலை, வயிற்றுக் கோளாறு, உடலில் உஷ்ணம் அதிகரித்து அவைகளால் நோய் உண்டாகக்கூடிய அமைப்பு, உடலில் மந்தமான நிலை, சோர்வு எதிர்பாராத விபத்துகளை சந்திக்கும் நிலை, மனநிலை பாதிப்பு, வலிப்பு, டி.பி உண்டாகும். விபத்துகளால் உடல் ஊனம், இயற்கை சீற்றத்தால் உடல் நிலையில் பாதிப்பு போன்றவை தசாபுத்தி காலத்தில் ஏற்படும்.
கும்பம்
கும்ப ராசியின் அதிபதியும் சனிதான். சூரியன் இந்த ராசியில் மாசி மாதம் முழுவதும் தங்கிஇருப்பார். நமது உடலில் கணுக்கால்களை ஆதிக்கம் செய்யும் ராசி இது. இந்த ராசிக்கென்று வரக்கூடிய நோய் நரம்பு தளர்வு ஆகும். இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு மூலநோய், தொற்று நோய், உடல் எடை கூடுதல், பற்சிதைவு, சுவாசக் கோளாறு போன்ற நோய்கள் வரக்கூடும். சனிபகவானால் எலும்புகளில் பாதிப்பு ஏற்பட்டு உடலில் ஊனம் உண்டாகக்கூடிய நிலை, வயிற்றுக் கோளாறு, உடலில் உஷ்ணம் அதிகரித்து அவைகளால் நோய் உண்டாகக்கூடிய அமைப்பு, உடலில் மந்தமான நிலை, சோர்வு எதிர்பாராத விபத்துகளை சந்திக்கும்நிலை மனநிலை பாதிப்பு, வலிப்பு, டி.பி. போன்றவை உண்டாகும். விபத்துகளால் உடல் ஊனம், இயற்கை சீற்றத்தால் உடல் நிலையில் பாதிப்பு போன்றவைகள் தசாபுத்தி காலத்தில் ஏற்படும்.
மீனம்
ராசி மண்டலத்தில் கடைசி ராசியாகவும், பன்னிரண்டாவது ராசியாகவும் மீனம் உள்ளது. இதன் அதிபதி குரு பகவான். இரண்டு மீன்கள்... ஒரு மீன் வாலை மற்றொரு மீன் கவ்விக் கொண்டு இருப்பது போல தோற்றம் தரக்கூடியது. பங்குனி மாதம் முழுவதும் இந்த ராசியில் சூரியன் பயணிப்பார். நமது உடலில் பாதத்தை இந்த ராசி அங்கமாக கொண்டு உள்ளது. இந்த ராசிக்கென்று வரக் கூடிய நோய் ரத்தம் சம்பந்தப்பட்ட நோய்கள். இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு சளித்தொல்லை, சுவாசக் கோளாறு, கண் மற்றும் பற்கள் கோளாறு, பருவநிலை நோய், உடலில் காயங்கள், தழும்புகள் உண்டாகும். குருபகவானால் ஞாபக மறதி, காதுகளில் பாதிப்பு, குடல் புண், மற்றும் பூச்சிகளால் பாதிப்பு, பிராமணர்கள் மற்றும் பெரியோர்களின் சாபத்தால் உடல்நிலை பாதிப்பு, வறுமையால் உடல்நிலை பாதிப்பு, கோவில் விவகாரங்களில் ஈடுபடுவதால் உடல்நிலையில் பாதிப்புகள் போன்றவை உண்டாகும்.