உலக ஆர்த்தடீஸ் தினம் 2018: மூட்டுவலி, கை, கால் வலிக்கு காரணங்கள் - ஜோதிட பரிகாரங்கள்
ஆர்த்தடீஸ் எனப்படும் முடக்குவாத நோய் மனிதர்களை அதிகம் பாதிப்பிற்கு உள்ளாக்குகிறது. நோய் என்ற சொல்லுக்கு அதிபதியே சனி தான். நமது உடலில் வெளிப்படாத உள்நோய்களுக்கு காரணமாக இருப்பவர் சனி.
சென்னை: இன்றைக்கு இளம் வயதினரையும் தாக்கும் நோயாக மூட்டுவலி உள்ளது. ஆர்த்தடீஸ் எனப்படும் முடக்குவாத நோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அக்டோபர் 12ஆம் தேதி உலக ஆர்த்தடீஸ் தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. ஜோதிட ரீதியாக ஆர்த்தடீஸ் ஏன் வருகிறது என்றும் அதற்கான பரிகாரங்களையும் பார்க்கலாம்.
நோய்களால் பாதிக்கப்பட்டால் மருத்துவரிடம் செல்வதைப் போல ஜாதகத்தை எடுத்துக்கொண்டு ஜோதிடரிடம் சென்று பரிகாரம் தேடுகின்றனர். ஜாதகத்தில் கிரகங்கள் அமர்ந்துள்ள நிலைக்கும், நோய் பாதிப்பு ஏற்படுவதற்கும் தொடர்பு உள்ளது.
சனிபகவானால் ஏற்படும் முடக்குவாதம்
ஆர்த்ரைடிஸ் எனும் முடக்குவாத நோய்க்கு ஜாதகத்தில் மந்தன் எனப்படும் சனீஸ்வரனே காரணம் என்றாலும் சந்திரன், சுக்கிரன் மற்றும் புதன் ஆகிய கிரகங்களின் நிலையும் வாத நோயை ஏற்படுத்துகின்றது.
எலும்பிற்கு காரக கிரகமான சூரியன் சனியுடன் எந்தவிதத்தில் தொடர்பு கொண்டாலும் எலும்பு மற்றும் வாத நோய் ஏற்படுகிறது. மேலும் சூரியன் 6,8,12 வீடுகளுடன் தொடர்பு பெறும்போது ஜாதகருக்கு வாதநோய் ஏற்படுகிறது.
எட்டில் புதன் நிற்பதை, ‘மறைந்த புதன் நிறைந்த பலன்' என்பார்கள். இந்த ஜாதகருக்கு தீர்க்க ஆயுள் உண்டு. இருந்தாலும் சுவாச கோளாறு, வாயுத்தொல்லை, கை கால் முடக்கவாதம் பாதிப்பு ஏற்படுகிறது.
மிதுன லக்னத்திற்கும், கடக லக்னத்திற்கும் சனியே எட்டாம் இடத்தின் அதிபதி. இவர் நீச்சம் பெறாமல் இருக்க வேண்டும். அப்படி நீச்சம் பெற்றால் அந்த ஜாதகருக்கு மூட்டு வலி வரும்.
கிரகங்களின் சேர்க்கை
எலும்புகளில் கால்சியம் சத்து குறைவே இந்த நோய்க்கு காரணம் என்றாலும் கால்சியம் எனும் தாதுவிற்க்கு காரக கிரகம் சனியே ஆகும். சந்திரன், சுக்கிரன், புதன் மற்றும் சனி பலமிழந்த நிலையில் இணைவு பெறுவது, 6,8,12 வீடுகளோடு லக்னம் மற்றும் லக்னாதிபதி சம்மந்தபடுவது பாதிப்பை ஏற்படுத்தும்.
ஒருவரின் ஜாதகத்தில் மூன்றாம் வீட்டில் வாத கிரகங்களான சனி, சுக்ரன், புதன், சந்திரன் போன்ற கிரகங்கள் நிற்பது போன்றவை வாத நோயை எற்படுத்துகிறது.
பத்தாம்வீடு முதுகு மற்றும் கால் மூட்டுக்களை பற்றி கூறுவதால் பத்தாம் வீட்டில் சனி,செவ்வாய் இனைவு பெற்றாலும் பத்தாம் வீடு சனியின் வீடாகி அங்கு செவ்வாய், ராகு போன்ற கிரகங்கள் நின்றாலும் தீவிர மூட்டுவலி ஏற்படுகிறது.
சனியோடு சந்திரன்
சனி லக்னத்தில் நின்று செவ்வாய் 5,7,9 வீடுகளில் நிற்பது பாதிப்பை ஏற்படுத்தும். லக்னாதிபதி லக்னத்திலேயே நின்று சனி 6ம் வீட்டில் நிற்பது மூட்டுவலியை ஏற்படுத்தும்.
சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகிய எலும்போடு தொடர்புடைய கிரகங்கள் லக்னத்தில் நின்று சனியோடு தொடர்பு கொள்ளும்போது வாத நோய் ஏற்படுகிறது.
சனியும் சந்திரனும் 12ம் வீட்டில் நிற்பது, சனியும் சந்திரனும் 6 அல்லது 9ம் வீட்டில் நிற்பது, சனியும் ராகுவும் 2அல்லது மூன்றாம் வீட்டில் நிற்பது வாத நோயை தரும். சனியும் செவ்வாயும் 6, 8 அல்லது 12 வீட்டில் நிற்பது மூட்டுவலியை ஏற்படுத்தும்.
பரிகாரம் செய்யலாம்
சூரிய பகவானை தினசரியும் காலையில் வணங்குவது நல்லது. சூரிய நமஸ்காரம் வாத நோய் ஏற்படுவதை தடுக்கும்.
புதனுக்கு உகந்த புதன் கிழமைகளில் பெருமாள் கோயில் அல்லது நவகிரக புதன் சன்னதிகளில் நரம்பை பலப்படுத்தும் புரத சத்து மிகுந்த பாசிப்பயறு சுண்டல் செய்து சிறுவர்கள் மற்றும் முதியோர்களுக்கு விநியோகம் செய்துவிட்டு சாப்பிடுவது நல்லது.
சனியினால் ஏற்பாடும் பாதிப்பை சரி செய்ய சனிபகவானை சரணடைவதுதான் நல்லது. சனி பகவானுக்கு சனிக்கிழமைகளில் எள் தீபம் ஏற்றலாம். திருநள்ளாறு, திருநாரையூர், குச்சனூர், வட திருநள்ளாறு எனப்படும் பொழிச்சலுர் ஆகிய சனி ஸ்தலங்களுக்கு சென்று விளக்கேற்றலாம்.
முதியவர் மற்றும் ஊனமுற்றவர்களுக்கு இயன்ற உதவி செய்யலாம். செருப்பு, குடை கைத்தடி தானமாக தரலாம்.