கல்வி, ஞானம் புத்திர பாக்கியம் அருளும் புதன் - பாதிப்பும் பரிகாரமும்
குழந்தை செல்வத்தை தருபவர் புத்திரகாரகனான குரு என்றாலும் அந்தக் கருவை உற்பத்தி செய்வதற்கு உறுதுணையாகவும், ஆரோக்கியமான தாம்பத்திய உறவுக்கு முக்கிய அம்சமான நரம்பு மண்டலத்தை ஆள்பவர் புதன்.
சென்னை: மனத்தை ஆள்பவன் சந்திரன். அந்த சந்திரனின் மகன்தான் புதன். குழந்தை செல்வத்தை தருபவர் குரு என்றாலும் அந்தக் கருவை உற்பத்தி செய்வதற்கு உறுதுணையாகவும், ஆரோக்கியமான தாம்பத்திய உறவுக்கு முக்கிய அம்சமான நரம்பு மண்டலத்தை ஆள்பவர் புதன் பகவான்.
புதன் என்றாலே புத்திக்கூர்மை எனவே புத்திக்கூர்மை மிக்கவர், ஞாபக சக்தி அதிகம், பேச்சில் வல்லவர், பெரிய விஞ்ஞானி, மேதைகளாக வருவார்கள், தன் திறமையால் பெரும் பொருட்கள் சேர்ப்பார்கள், வியாபாரத்திலும் வல்லவர், வாழ்க்கையை நன்கு அனுபவித்து வாழ்வார்.
கல்வி, வித்தைக்கு உரியவர் புதன். ஒரு மனிதனின் நரம்பு மண்டலங்களை இயக்குவது புதன். கற்றலில் ஆர்வம் இருப்பதற்கும் புதனே காரணம்.
பங்குச்சந்தை முதலீடு
வணிகத்திற்கு உரியவரும் புதன்தான். பங்கு வர்த்தகத்தில் வெற்றி பெறுபவர்கள் ஜாதகத்தில் புதன் வலுவாக இருக்கும். ஆனால் புதன் வலுவிழந்து காணப்பட்டால் அந்த ஜாதகர் பங்குச்சந்தையும் எவ்வளவு முதலீடு செய்தாலும் லாபம் பார்ப்பது கடினம்.
எழுத்தாளர்
புதன் நன்றாக அமையப் பெற்றவர்கள் சுயமாக முன்னேறுவார்கள். கணிதம், ஜோதிடம், புத்தகம், விளம்பரம், எழுத்தாளர்,ஓவியம், சிற்பம்,தகவல் தொடர்பு, ஐ.டித்துறை போன்ற துறைகளில் ஜொலிப்பார்.
புதன் தசை மொத்தம் 17 ஆண்டுகள் நடக்கும். சிறுவயதில் புதன் தசை வந்தால் சிறப்பான கல்வி கிடைக்கும். நடு வயதில் புதன் தசை வந்தால் வியாபாரத்தில் செல்வம் கொழிப்பார்கள். முதிய வயதில் புதன் தசை நடந்தால் புத்தகங்கள் எழுதிக் குவிப்பார்கள்.
பேச்சுத்திறமை
கணிதத்திற்கு உரியவரும் புதன். ஒருவர் ஜாதகத்தில் புதன் நல்ல ஆதிபத்தியம் பெற்று, நல்ல கிரக சேர்க்கைகளுடன் இருந்தால் அவர்கள் ஆசிரியருக்கெல்லாம் ஆசிரியராக இருப்பார்கள். வாதம் விவாதங்களில் யாரும் இவரை வெல்லுவது கடினம், நகைச்சுவை உணர்வு, காதல் உணர்வும் மிக்கவர், சுக்ரனோடு சேரும் போது வலிமை மேலும் அதிகரிக்கும்.
குழந்தை பாக்கியம்
புத்திர பாக்கியம் சிறப்பாக அமைய பொன்னவன் என போற்றப்படும் குரு பகவான் புத்திர காரகன் என்பதால் அவர் பலமாக அமையப் பெறுவது முக்கியமானதாகும். அதுபோல 5ம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்றாலும், கேந்திர திரிகோண ஸ்தானங்களில் அமையப் பெற்றாலும் சிறப்பான புத்திர பாக்கியம் உண்டாகும்.
5ஆம் வீடு கிரகங்கள்
ஜென்ம லக்னத்திற்கு 5ம் பாவம் சிறப்பாக அமைய வேண்டும் என்பதை போலவே சந்திரனுக்கு 5ம் பாவமும் பலமாக அமைந்து விட்டால் குழந்தை பாக்கியம் அமைய எந்தத் தடையும் இருக்காது. அதுபோலவே 5ம் வீட்டையும், 5ம் வீட்டதிபதியையும் குரு பகவான் பார்வை செய்தால் குழந்தை செல்வம் சிறப்பாக அமைந்து மகிழ்ச்சியை உண்டாக்கும். 5ம் வீட்டில் சுப கிரகம் இருப்பதும், சுபர் பார்வை பெறுவதும் சிறப்பானது என்பது போல 5ம் அதிபதி பாவியாக இருந்தாலும் வலுப்பெற்று அமைந்து சுபர் பார்வை பெறுவது சிறப்பான புத்திர பாக்கியத்தை ஏற்படுத்தும்.
உடல்ரீதியான பாதிப்பு
புதன் மூளை மற்றும் நரம்பு மண்டலங்களை ஆள்பவர். இவர் அலித்தன்மையுடைய கிரகம். ஆண்களுக்கு ஆண்மை குறைவையும், பெண்களுக்கு பெண்மை குறைவையும் ஏற்படுத்தக்கூடியவர். மூளை, நரம்பு, தண்டுவடம் ஆகியவற்றிற்கு ஆதிபத்யம் வகிக்கிறார். புதன் பலவீனமாக இருக்கும் பட்சத்தில் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் சில கோளாறுகள் ஏற்படும்
நரம்பு மண்டல நாயகன்
புத்திரகாரகன் குரு என்றாலும் அந்தக் கருவை உற்பத்தி செய்வதற்கு உறுதுணையாகவும், ஆரோக்கியமான தாம்பத்திய உறவுக்கு நரம்பு மண்டலத்தை ஆளும் புதனின் பரிபூரண அருள் இருந்தால்தான் குழந்தை பாக்கியம் கிடைக்கும். இதை வைத்துதான் பொன் கிடைத்தாலும், புதன் கிடைக்காது என்ற சொல் வழக்கு உண்டானது.
குரு புதன் வீடான மிதுனம், கன்னியில் இருந்தால் தாமத புத்திர பாக்கியம் ஏற்படும்.
புத்திர பாக்கியம் பரிகாரம்
புதபகவானுக்கு புதன்கிழமை உகந்த நாள். நவக்கிரகங்களில் நான்காவதான இடத்தில் இருக்கும் இவரை பச்சை நிற ஆடையை உடுத்தி வணங்க வேண்டும். புத பகவானுக்கு அதி தேவதை ஸ்ரீமகாவிஷ்ணு. புதன் கிழமைகளில் பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபடுவது பரிகாரமாகும். மதுரை சென்று மீனாட்சி, சோமசுந்தரேஸ்வரரையும் வழிபட்டு வந்தால் நரம்பு கோளாறுகள் நீங்கும். புத்திர பாக்கியத்திற்கு வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் சந்தான கிருஷ்ணரை வணங்கி சந்தான பரமேஸ்வர ஹோமம், நவநீத கிருஷ்ண ஹோமம் செய்து வழிபட புத்திர பாக்கியம் கிட்டும்.