நரம்பு தளர்ச்சி மன அழுத்தம் பிரச்சினையா? - புதன் தசை யாருக்கு நல்லது செய்யும்
சாதாரண நிலையில் இருந்த ஒருவர் திடீரென பேச்சுத்திறமையால் புகழ் பெற்று விடுவார். மந்தமாக இருந்த மாணவர்கள் கூட படிப்பில் படு சுட்டியாக மாறி விடுவார். காரணம் புதன் தசையோ புத்தியோ வேலை செய்ய தொடங்கியிருக்க
சென்னை: புதன் பகவான் புத்தி நாதன். மூளை, நரம்பு, தண்டுவடம் ஆகியவற்றிற்கு ஆதிபத்யம் வகிக்கிறார். ஜாதகத்தில் புதன் பலமாக இருந்தால் புத்திசாலியாக இருப்பார். ஞாபக சக்தி அதிகம் இருக்கும். பேச்சுத்திறமையால் ஜெயிப்பார். பெரிய விஞ்ஞானி மேதைகளாக வலம் வருவார்கள், தன் திறமையால் பெரும் சொத்துக்களை சேர்ப்பார்கள். புதன் பலவீனமாக இருக்கும் பட்சத்தில் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் சில கோளாறுகள் ஏற்படும்.
நரம்பு பிரச்சினைகள் வந்து ஆளையே முடக்கி விடும். புதன்கிழமையான இன்று புதன் தசை எந்த லக்னகாரர்களுக்கு சாதகமாக இருக்கும். புதன் எந்த ராசியில் அமர்ந்திருந்தால் என்ன பலன் என்று பார்க்கலாம்.
புதன் பகவான் கல்விகாரகன் ஞானகாரன் தாய் மாமனுக்கு காரகனாக விளங்குகிறார். கணக்கு, கணினி சம்மந்தப்பட்டவைகளுக்கும், கமிஷன் ஏஜென்ஸி போன்றவற்றிற்கும் காரகனாகிறார். நல்ல ஞாபக சக்தி, நரம்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் நரம்பு தொடர்புடைய பிரச்சனைகளுக்கும் காரகம் வகுக்கிறார். புதன் சுப கிரக சேர்க்கை பெற்றால் சுபராகவும், பாவிகள் சேர்க்கைப் பெற்றால் பாவியாகவும் செயல்படுவார். புதன் சுபராக இருந்தால் கேந்திர திரிகோண ஸ்தானங்களிலிருந்தால் மிகவும் சிறப்பு. அதுவே பாவியாக இருந்தால் 3,6,10,11 ஆகிய ஸ்தானங்களில் இருந்தால் நற்பலன்களை வழங்குவார்.
சுக்கிரதிசை, சனி திசை, ராகு திசைக்கு அடுத்து ஒருவரை அதிக வருடங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வது புதன் பகவான்தான். மொத்தம் 17 வருடங்கள் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வார். ஜாதகத்தில் புதன் பலமாக இருந்தால் சொந்த தொழில் யோகத்தை கொடுக்கும். நல்ல அறிவாற்றல் பேச்சு திறன் ஞாபக சக்தி, பலரை வழி நடத்தி செல்லும் ஆற்றல் உண்டாகும். பல லட்சங்கள் சம்பாதிக்கும் யோகம் அமையும். அதுவே புதன் பலமிழந்திருந்தால், முட்டு வலி, கை கால் வலி, நரம்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள், ஆண்மை குறைவு, உடல் பலவீனம் உண்டாகும். பலவகை பிரச்சனைகளும் தேடி வரும்.
நண்பர்கள் பகைவர்கள்
புதனின் ஆட்சி வீடுகள் மிதுனம் கன்னி, தனது வீடான கன்னி ராசியில் உச்சமடையும் ஒரே கிரகம் புதன்தான். மீனம் ராசியில் நீசமடைகிறார். புதனுக்கு சூரியன், சுக்கிரன் இருவரும் நண்பர்கள். சனி நட்புத் தன்மை கொண்டவர். இதில் சூரியனை முதன்மை நண்பராக புதன் கருதுவார். சுக்கிரன் இரண்டாம் நிலை நண்பர். செவ்வாய், குரு, ராகு, கேது ஆகியோர் புதனுக்கு நட்போ, பகையோ இல்லாத சம நிலையில் செயல்படுவார்கள். புதனுக்கு பகைக் கிரகம் சந்திரன் மட்டுமே.
மறைந்த புதன் நிறைந்த கல்வி
சுக்கிரன், சனியின் ராசிகளான ரிஷபம், துலாம், மகரம், கும்பம் அவருக்கு நட்பு வீடுகள். இந்த வீடுகளில் இருக்கும் புதன் கெடுதல்களைச் செய்ய மாட்டார்.
அது போலவே சூரியனின் வீடான சிம்மம் அவருக்கு அதி நட்பு வீடாக அமையும். மறைந்த புதன் நிறைந்த கல்வி. புதன் ஒருவரின் ஜாதகத்தில் மறைந்தாலும் அது சிம்மம், கன்னி ராசிகளாக இருக்கும் பட்சத்தில் பாதிப்பு ஏற்படுவதில்லை.
பேச்சுத்திறமை
ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய மூன்று நட்சத்திரங்களும் புதனுக்கு உரியவை. பிறக்கும் போது இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு புதன் திசை குழந்தை பருவத்தில் வரும். சில குழந்தைகள் சுட்டித்தனத்தோடும், பேச்சாற்றலோடும் பேரும் புகழும் பெற்று திகழ்வார்கள். அவர்களுக்கு புதன் நல்ல நிலையில் இருக்கிறது அர்த்தம். சில குழந்தைகள் மந்த புத்தியோடும், திக்குவாய் பேச்சு, சரியாக படிக்காமல் போவது, பலஹீனமாக உடல், ஞாபக மறதியோடு இருப்பார்கள் அவர்களுக்கு புதன் சரியில்லாமல் இருக்கும்.
கவுரமான பதவி
புதன் பலமாக இருந்து இளமை பருவத்தில் நடைபெற்றால் கல்வியில் சாதனைகள் செய்வார்கள் பேச்சுத்திறமையால் பதவி கிடைக்கும். மத்திம வயதில் நடைபெற்றால் கவுரமான பதவி கிடைக்கும். பேச்சு திறனால் நல்ல கௌரவமும் பதவி உயர்வும் உண்டாகும். முதுமை பருவத்தில் நடைபெற்றால் கவுரவ ஆலோசகராகவும், நல்ல ஞாபக சக்தியுடனும் மற்றவர்களை வழி நடத்தி செல்வார்கள்.
குடும்பத்தில் குழப்பம்
புதன் பலமிழந்திருந்து இளமை பருவத்தில் புதன் திசை நடைபெற்றால் படிப்பில் தடை ஏற்படும். பேச்சினால் பகை உருவாகும். மத்திம வயதில் நடைபெற்றால் இல்லற வாழ்க்கையில் குழப்பமும் குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை உருவாகும். நரம்பு நோய்கள் வரும். முதுமை பருவத்தில் நடைபெற்றால் நரம்பு தளர்ச்சி ஞாபகமறதி, மூளையில் பாதிப்பு, பொருளாதார நெருக்கடி ஏற்படும்.
சந்திரன் புதன் எதிரி
மகரம், கும்பம், ரிஷபம், துலாம், மிதுனம், கன்னி ஆகிய லக்னகாரர்களுக்கு புதன் தசை அற்புதமாக இருக்கும். புதன் திசையில் சுக்கிர புத்தி, சுக்கிரதிசையில் புதன் புத்தி அற்புதமாக இருக்கும். அதேபோல சனி திசையில் புதன் புத்தி, புதன் திசையில் சனி புத்தி அற்புத யோகத்தை தரும்.
அதே நேரத்தில் சந்திரனும் புதனும் பகை என்பதால் சந்திரதிசை புதன் புத்தி, புதன் திசையில் சந்திர புத்தி நோய்களை தரும். மன நோயாளியாக கூட ஒருவர் மாறி விடுவார்.
புதனுடன் கூட்டணி
கடகம், விருச்சிகம், தனுசு, மீனம், மேஷம் ஆகிய ஐந்து லக்னங்களுக்கு புதன் திசை சுமாரான பலன்களையே தரும் அதே நேரத்தில் புதன் திசையில் சனி, ராகு புத்திகள் நன்மை செய்யும். ஒரு ராசியில் குருவோடு சேர்ந்திருக்கும் புதன், சூரியனோடு சேர்ந்திருக்கும் புதன் நன்மைகளை செய்வார். அதே நேரம் சந்திரன், சனி, ராகு உடன் இணையும் புதன் அமரும் ராசியைப் பொருத்து பலன்களை மாற்றுவார்.
பரிகாரம் என்ன
புதன் வலிமை இல்லாமல் இருந்து பாதிப்புக்கு ஆளாகி வருபவர்களுக்கு புதன் பரிகார தலங்கள் உள்ளன. மதுரை மீனாட்சி புதனின் மறு உருவம். புதன்கிழமைகளில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து வாருங்கள் பாதிப்புகள் குறையும். அதே போல திருவெண்காடு புதன் தலமாகும். இங்கு சூரிய தீர்த்தம், அக்னி தீர்த்தம், சந்திர தீர்த்தம் உள்ளது. இதில் குளித்து மூலவரை தரிசனம் செய்து புதன் பகவானை வழிபட வேண்டும்.
வட திருவெண்காடு எனப்படும் கோவூர் சுந்தரேஸ்வரரை புதன்கிழமைகளில் சென்று வழிபடலாம். குதிரைக்கு பிடித்தமான உணவு வாங்கித்தரலாம்.
புதன் ஹோரையில் பச்சைப்பயறு தானம் செய்யலாம். பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபட்டு வரலாம்.