ஆடி அமாவாசை முடிந்து ஆட்டத்தை ஆரம்பித்த அழகிரி - ஜாதக கட்டம் சொல்வது என்ன?
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு.க. அழகிரி அரசியலில் அதிரடி காட்டுவாரா? அல்லது அரசியல் துறவறம் மேற்கொள்ளப் போகிறாரா என்பதே லட்சக்கணக்கான திமுக தொண்டர்களின் கேள்வியாக உள்ளது.
Recommended Video
சென்னை: மு.க அழகிரி என்றாலே அதிரடிதான். கருணாநிதி மறைவுக்குப் பின்னர் திமுகவில் அழகிரி புதிய பதவியோடு மீண்டும் நுழையப்போவதாக பல்வேறு செய்திகள் வெளியான வண்ணம் இருக்கிறது. அமாவாசை முடிந்த உடன் தனது ஆட்டத்தை ஆரம்பித்து விட்டார். அழகிரி ஜாதகப்படி சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி, நிகழ உள்ள ராகு கேது பெயர்ச்சிகள் என்ன சொல்கின்றன என்று பார்க்கலாம்.
ஆகஸ்ட் 7ஆம் தேதி திமுக தலைவர் கருணாநிதி மரணமடைந்த பின்னர் கட்சியில் ஆட்டம் ஆரம்பித்து விட்டது என்றே சொல்ல வேண்டும். என்னதான் நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம் என்று கூறிக்கொண்டாலும், புகைச்சல்களும், சலசலப்புகளும் இல்லாமல் இல்லை.
அதிமுகவில் ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின்னர் எப்படி சூறாவாளி, புயல், சுனாமி என சுழன்றடித்ததோ அதே போல கருணாநிதி மரணத்திற்குப் பின்னர் திமுகவில் அழகிரியை வைத்து அரசியல் சதுரங்கம் ஆரம்பித்து விட்டது.
செய்திகளுக்கு முற்றுப்புள்ளி
திமுகவில் அழகிரிக்கு முக்கிய பதவி என்று தலைப்புச் செய்திகளில் செய்திகள் வெளியாக, அதனை செயல் தலைவர் ஸ்டாலின் ஆதரவு வட்டம் மறுத்து வருகிறது. பேராசிரியரிடம் பேசிய ஸ்டாலின், அழகிரியின் செயல்பாடுகளால் கடுமையான அதிருப்தி அடைந்த கலைஞர், கட்சிக்குள் யாரும் குழப்பம் செய்துவிடக்கூடாது என்று திடமாக முடிவெடுத்து, அவரை கட்சியில் இருந்து நீக்கினார். ஆனால், இப்போது தலைவர் மறைந்த பிறகு அவருக்கு மீண்டும் பதவி வழங்குவதாக செய்திகள் வருகிறதே, இது எந்தவிதத்தில் சரியாக இருக்கும் எனவே, அப்படிப்பட்ட செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கூறினாராம்.
ஆதரவாளர்கள் நிலை
அழகிரியின் ஆதரவாளர்கள் பலரும் இன்றைக்கு ஸ்டாலின் ஆதரவாளர்களாக மாறிவிட்டனர். கட்சியில் பலருக்கும் பதவியும் கொடுக்கப்பட்டிருக்கிறது. திடீரென்று இப்போது அழகிரிக்கு பதவி கொடுத்தால் கட்சியினரும், பொதுமக்களும் கலைஞர் எடுத்த முடிவுக்கு எதிராக வழங்கப்படுவதாக எதிர்ப்பார்கள். இதனால் தென் மாவட்டங்களிலும் பெரும் குழப்பம் ஏற்பட்டு, கட்சியினர் பாதிக்கப்படுவார்கள் என்பது ஸ்டாலின் நிலையாம்.
முரசொலி டிரஸ்டில் பதவி
அதே நேரத்தில் அழகிரி அரசியலில் இருந்து ஒதுங்க நினைப்பதாகவும், மகனுக்கு மட்டுமே டிரஸ்டில் நல்ல பொறுப்பு கேட்பதாகவும் திமுக வட்டார தகவல்கள் கூறிய நிலையில் இன்றைக்கு கருணாநிதி நினைவிடத்தில் தனது குடும்பத்தினருடன் சென்ற மு.க. அழகிரியோ, அடுத்த பரபரப்பை பற்ற வைத்துள்ளார். விசுவாசமான உடன்பிறப்புக்கள் எல்லாம் என் பக்கம் இருக்கிறார்கள் என்று பேட்டி தட்டியதுதான் தாமதம், இந்தா கிளம்பிட்டாருல்ல அஞ்சா நெஞ்சன் என்ற கோஷமிட ஆரம்பித்து விட்டனர் உடன் பிறப்புகள். இதனை முளையிலேயே கிள்ளி விட்டார் பேராசிரியர் அன்பழகன். இனிதான் அழகிரி ஆட்டம் அதிரடியாக இருக்கும் என்று பேசிக்கொள்கின்றனர்.
கட்டத்தில் கிரகங்கள் எப்படி?
மு.க. அழகிரி துலாம் ராசி, ஸ்வாதி நட்சத்திரக்காரர். எனவேதான் அடிக்கடி நரசிம்மரை தரிசனம் செய்கிறார். இப்போது அவரது ராசிக்கு ஜென்ம குரு, 3 ஆம் இடமான முயற்சி ஸ்தானத்தில் சனி என கிரக நிலைகள் உள்ளன. புரட்டாசி மாதம் அவரது ராசிக்கு இரண்டாம் இடத்தில் குரு அமரப்போகிறார். குருவின் பார்வை அவரது ராசிக்கு 6ஆம் வீடு, 8ஆம் வீடு, 11ஆம் வீடுகளின் மேல் விழுகிறது. லாப ஸ்தானத்தை குரு பார்வையிடுவதால் இனி எல்லாம் லாபம்தான் என்கின்றனர் ஜோதிடர்கள்.
2019ல் தனிக்கட்சியா?
ஜெயலலிதா மரணத்திற்குப் பின்னர் அதிமுக பல விதமாக பிரிந்து விட்டது. பல பெயர்களில் கட்சிகளும் உருவாகி விட்டன. திமுகவில் இதே போல ஒரு நிலை வரக்கூடாது என்பதுதான் தொண்டர்களின் விருப்பம். ஆனால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் கடந்த பல வருடங்களாக ஒதுங்கியே இருக்கும் மு.க அழகிரி, அப்பாவின் மரணத்திற்குப் பின்னர் தம்பி ஸ்டாலின் தலைமையை ஏற்று கொடுக்கும் பதவியை ஏற்றுக்கொண்டு திமுகவில் தொடர்வாரா? அல்லது கட்சியை உடைத்து புதுக்கட்சியை தொடங்குவாரா? என்பதை 2019ல் நிகழ உள்ள ராகு கேது பெயர்ச்சி சொல்லி விடும்.