இறந்தவர்களும், பாம்பும் நம் கனவில் வருவது எதன் அறிகுறி தெரியுமா
மதுரை: இறந்தவர்கள் உங்களை பெயர் சொல்லி அழைப்பது போன்ற கனவு வந்தால் என்ன அர்த்தம் என்று கேட்கின்றனர். அதே போல பறவைகள், விலங்குகள் கனவில் வந்தால் என்ன அர்த்தம் என்றும் கேட்கின்றனர். பாம்பு கனவில் வந்தால் நம்முடைய துன்பங்கள் நீங்கும்.
நமக்கு தினசரியும் ஏதாவது ஒரு விசித்திரமான கனவு வந்து கொண்டே இருக்கிறது. நம்முடைய பிரியமானவர்கள், விலங்குகள், நாய்கள், இறந்து போனவர்களும் அடிக்கடி வருகின்றனர். அந்த கனவு ஏன் வந்தது எதனால் வருகிறது என்பதை நம்மால் உணர முடியாது. நல்லதா கெட்டதா என்பதையும் நம்மால் அறிய முடியாது. ஆனால் கனவுகள் எதையோ உணர்த்துகின்றன.
கனவுகள், கனவுகளுக்கும் காம உணர்வுக்கும் உள்ள தொடர்பு பற்றி பேராசிரியர் சிக்மண்ட் பிராய்டு எழுதியுள்ளார். கனவுகளுக்கு உளவியல் ரீதியாக அர்த்தம் சொல்பவர்கள் இருக்கின்றனர். ஜோதிட ரீதியாகவும் அர்த்தம் சொல்லலாம்.
நல்ல செய்தி
நம் வீட்டில் பெரியவர்கள் கனவுகளில் இறந்தவர்கள் வந்தால், அவர்கள் பேசுவது சில செய்திகள் கொண்டிருக்கும். தாத்தா, பாட்டி என இறந்தவர்கள் கனவில் வந்தால் நம்மீது அதிகம் பிரியமுடன் இருக்கிறார்கள் என்று அர்த்தம். நமக்கு நன்மைகள் நடைபெறப்போகிறது என்று அர்த்தம். நம்முடைய துன்பங்கள் தீரப்போகின்றன. நல்ல செய்தி ஒன்று வரப்போகிறதை சுட்டிக்காட்டுகிறார்கள். உங்களை நன்றாக சத்தம் போட்டு பெயர் சொல்லி கூப்பிட்டால் பழைய உறவுகள் புதுப்பிக்கப்பட உள்ளதைக் காட்டுகிறது.
துக்க நிகழ்ச்சி
இறுதிச்சடங்கு செய்வது போல கனவில் வந்தால் ஏதோ அபாயம் நடைபெறுவதை உணர்த்துகிறது. வீடு இடிந்து விழுவது போலவோ, மரம் முறிந்து விழுவது போலவோ கனவு கண்டால் அந்த வீட்டில் ஏதோ துக்கச் செயல் நிகழ உள்ளதை உணர்த்துகிறது.
பாம்பு கனவு
குரங்குகளை கனவில் கண்டால் கடன் பிரச்சினை அதிகரிக்கும். சிலருக்கு அடிக்கடி பாம்பு கனவில் வரும். இதன் மூலம் கடன் பிரச்சினை தீரும். தொல்லைகள், துன்பங்கள் நீங்கும். யானை கனவில் வந்தால் பொக்கிஷம், புதையல் கிடைக்கப் போகிறது என்று அர்த்தம் யானை மீது சவாரி செய்வது போல கனவு கண்டால் பதவி உயர்வு கிடைக்கும்.
பறவைகள் கனவு
வானத்தில் பறவைக் கூட்டத்தைக் கண்டால் துன்பங்கள் நீங்கும். புதிய பதவி தேடி வரும். மயில் அகவல், தோகை விரித்து ஆடுவது போல கனவில் வந்தால் மகிழ்ச்சியான செய்தி தேடி வரப்போகிறது. குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். பறந்து செல்லும் கிளிகளைக் கனவில் கண்டால் மனது இலேசாகி புதிய உற்சாகம் பிறக்கும்.