தேர்வுகளுக்கு படிக்க உட்கார்ந்தாலே தூக்கம் வருகிறதா? புதனை வணங்குங்க!
- அஸ்ட்ரோ சுந்தரராஜன்
அனேகமாக தற்போது எல்லா பள்ளி மாணவர்களும் ஆண்டுத்தேர்வை நோக்கி சென்றுக்கொண்டிருக்கின்றனர். அதிலும் பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அனைவரது வீடுகளிலும் பிள்ளைகளோடு பெற்றோர்களும் கவலை பட்டுக்கொண்டிருக்கின்றனர்.
தேர்விற்க்கு நன்றாக தயார் செய்ய வேண்டுமே! தேர்வில் நிறைய மார்க் வாங்க வேண்டுமே, கல்லூரியில் சீட் கிடைக்கனுமே, கனவு கண்டுவரும் பிரிவில் இடம் கிடைக்கனுமே! நீட் தேர்வில் அதிக மார்க் எடுக்க முடியுமா? மெரிட்டில் கிடைக்க்குமா இல்லை பணம் கட்டி படிக்கனுமா? உள்ளூர் கல்லூரிகளில் கிடைக்குமா? வெளியூர் கல்லூரிகளுக்கு செல்ல வேண்டுமா? என பல கவலைகளும் டென்ஷன்களும் வாட்டுகின்றன.
இதனால் குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் திடீரென ஒரு வேலை பளு அதிகமாகி உடலாலும் உள்ளத்தாலும் சோர்வடையும் நிலைக்கு தள்ளபடுகின்றனர். உடல் சோர்வடைந்து விட்டால் ஓய்வெடுக்கலாம். ஆனால் மூளை சோர்வடைந்துவிட்டால் என்ன செய்வது?
உணர்ச்சிவசப்படுதல், சந்தேகம், கோபம், அழுத்தம், பிடிவாதம், மூர்க்கத்தனம், பொறாமை, சுயநலம், சமுதாயத்தில் இருந்து விலகி நிற்பது போன்ற மாற்றங்களை சந்திக்க நேரிடும். அதீத பயம் மற்றும் கவலையினால் சித்தப் பிரமை உண்டாகலாம். இது மெதுவாக மாயத்தோற்றங்களை உண்டாக்கும்.
தேர்வு நேர டென்ஷனுக்கு ஜோதிட காரனங்கள்:
நமக்கு எப்போதும் நற்சிந்தனை தைரியமாகவும் கவலைகள் ஏதும் இல்லாமல் இருக்க லக்னம் லக்னதிபதி சந்திரன் ஆகியவர்களின் நிலை முக்கியமானதாகும். என்றாலும் ஒருவருக்கு புத்தி ஒழுங்காக செயல்பட புதன் ஜாதகத்தில் பலமாக இருக்க வேண்டும்.
1. ஜோதிடத்தில் புதனுக்கும் புத்திக்கும் தொடர்பு உள்ளது. புத பகவான் அறிவு, ஆற்றல், வித்தைக்கு காரண கர்த்தாவாக விளங்குபவர். அவர் 'வித்யாகாரகன்' என அழைக்கப்படுகிறார். புத்திதாதா என்றும், தனப்ரதன் என்றும் சிறப்பிக்கப்படுகிறார். எண்ணங்களின் சேர்க்கையே மனம். மனத்தை ஆள்பவன் சந்திரன். அந்த சந்திரனின் புத்திரன்தான் புதன். எனவேதான் மனத்தின் எண்ண ஓட்டத்துக்கும் அறிவுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.
2. குழந்தைகள் ஜாதகத்தில் புதன் பலமாக 6/8/12 மற்றும் அசுபர்கள் தொடர்பு இல்லாமல் இருந்தால் நல்ல புத்திசாலிகளாக விளங்கிடுவார்கள். மிதுனம் அல்லது கன்னியை லக்னமாக கொண்டு ஆட்சி உச்சம் பெற்றுவிட்டாலு மிகசிறந்த கல்விமான்களாக விளங்குவர்.
3. ஜாதகத்தில் புதன் பலமாக இருப்பது பல நலன்களை சேர்க்கும். புதன் பலவீனமாக இருக்கிற பட்சத்தில் உடல்ரீதியாகவும் சில கோளாறுகள் ஏற்படலாம். புதன் பலவீனமாக இருந்தாலும், நீச்சம் மற்றும் 6, 8, 12 ம் இட கிரகங்களுடன் சேர்ந்தாலும் ஒற்றைத் தலைவலி, கை கால் வலிப்பு, நரம்பு தளர்ச்சி, பய உணர்வு, சஞ்சலம், சபலம், புத்தி சுவாதீனம் இல்லாமை, கழுத்து நரம்பு வலி, தேர்வு நேர சுரம், பயம் ஆகிய பிரச்னைகள் ஏற்படலாம்.
4. ஜாதகத்தில் புதன் பலம் இருந்தால்தான் கணிதத்தில் தேர்ச்சியும், நிபுணத்துவமும் ஏற்படும். சகல கணிதங்களுக்கும் மூலகர்த்தா புதன் ஆவர். இதை வைத்தே பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று சொல்வார்கள். அதாவது, புதனின் அருளாசி இருந்தால் பொன், பொருள் வாங்கும் யோகம் உண்டாகும் என்பது பொருள்.
5. கல்விகாரகன், அறிவுகாரகன் எனப் போற்றப்படும் புதன் பகவான் ஒருவர் ஜாதகத்தில் ஆட்சியோ, உச்சிமோ பெற்று ஜென்ம லக்னத்திற்கோ சந்திரனுக்கோ கேந்திர ஸ்தானங்களில் அமைந்திருந்தால் பத்திர யோகம் உண்டாகிறது. பத்திர யோகம் அமைந்துள்ள ஜாதகருக்கு நல்ல அறிவாற்றல், சிறப்பான ஞாபக சக்தி, புக்தி கூர்மை யாவும் அமையும் புதன பகவான் பலம் பெற்று பத்திர யோகம் உண்டாகி இருந்தால் நல்ல உடல் ஆரோக்கியமும், ரத்த ஓட்டமும் உண்டாகி உடல் நிலை சிறப்பாக இருக்கும்.
6.தேர்வுக்கு படிக்கவேண்டும் என நினைத்தாலே சிலருக்கு தூக்கம் வந்துவிடும். புத்தகத்தின் மேல் படுத்துகொண்டே தூங்கி விடுவர். இது போன்று இருப்பவர்களுக்கு ஜாதகத்தில் புதன் அஸ்தங்க நிலை, நீச நிலை, லக்னத்திற்க்கு 6/8/12ல் நிற்பது, சனி, மாந்தி அல்லது கேது சேர்க்கை பெறுவது போன்றவை இருக்கும்.
7. ஜாதகத்தில் புதன் ராகு சேர்க்கை பெற்றவர்கள் அதிகமாக மொபைல் போனை உபயோக படுத்துவர். மற்றும் புதனோடு சுக்கிர சேர்க்கை பெற்றவர்கள் டீவி, சினிமா என கவனத்தை சிதறவிடுவர். இவர்கள் மொபைல் போன், டீவி மற்றும் பொழுது போக்கு அம்சங்களில் கவனத்தை சிதறடிக்காமல் படிக்கவேண்டும்.
8. சில பருவ வயதிலிருக்கும் மாணவர்களின் ஜாதகங்களில் புதன் கேது சேர்க்கை, புதன் சுக்கிர சேர்க்கை, புதன் சந்திர சேர்க்கை போன்றவை அமைந்திருந்தால் சேர்ந்து படிக்கிறோம் என ஆரம்பித்து தேவையற்ற பிரச்சனைகளில் மாட்டிக்கொள்வார்கள்.
ஞாபக மறதி நீங்க மற்றும் தேர்வு நல்ல முறையில் எழுத ஜோதிடம் கூறும் வழிகள்:
1. புதபகவானை வணங்குவதன் மூலம் நோய்களில் இருந்து விடுபடலாம். கும்பகோணத்தில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில் இருக்கும் திருவெண்காடு புதன் ஸ்தலமாகும். தனி சன்னதியில் புத பகவான் அருள்புரிகிறார். மற்றும் மதுரையில் மீனாட்சி அம்மன் புதன் அம்சமாகவே இருக்கிறார்.
2. புதனின் அதிதேவதை விஷ்னு பகவானாவார். அசுரர்களிடமிருந்து வேதத்தை காக்க மகாவிஷ்னு எடுத்த அவதாரங்களில் ஸ்ரீ ஹயக்ரீவர் அவதாரம் குறிப்பிடத்தக்கது. ஸ்ரீ லக்ஷமி ஹயக்ரிவர் கல்விக்கதிபதியான சரஸ்வதியன் குரு என புரானங்கள் போற்றுகின்றன. ஸ்ரீ லக்ஷமி ஹயக்ரிவ மூர்த்தியை செங்கல்பட்டுக்கருகே இருக்கும் செட்டிபுண்ணியம், கடலூர் திருவஹிந்திபுரம் போன்ற ஸ்தலங்களில் வணங்குவது கல்வியறிவையும் பெருக்குவதோடு புத்திக்கூர்மையையும் அளிக்கும். மேலும் கல்வித்தடை நீங்கும்.
3. புதனுக்குகந்த தானியமான பச்சை பயறு சுண்டல், பயத்தலாடு போன்றவை செய்து நவக்கிரக புதனுக்கு அல்லது ஸ்ரீலக்ஷமி ஹயக்ரீவ மூர்த்திக்கு நிவேதனம் செய்து குழந்தைகளையும் சாப்பிட செய்து அவர்களையே பல குழந்தைகளுக்கு வினியோகம் செய்யவிடுவது குழந்தைகளின் கல்வி தடை நீங்கும் சிறந்த பரிகாரமாகும்.
4. "ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்" எனும் பழமொழி எதற்க்கு பொருந்துமோ தெரியாது. ஆனால் கல்விக்கு பொருந்தும். கல்வி கற்க்க வசதியற்ற குழந்தைஎளின் கல்வி செலவை ஏற்றால் நம் குழந்தை நன்றாக படிக்கும் என்பது உறுதி.
5. தேர்வு நேரத்தில் புத்தகத்தை எடுத்தாலே தூக்கம் வருகிறது என்றால் உடனே புதனின் அதிதேவதையான விஷ்னுவின் அவதாரமான ஸ்ரீ லஷ்மி நரசிம்மரையும் சக்கரத்தாழ்வாரையும் மனதில் நிறுத்தி தியானித்துவிட்டு படித்தால் மூளை சுறுசுறுப்படைந்துவிடும். மேலும் செவ்வாயின் காரகம் பெற்ற காபி சாப்பிடுவது, சிறு உடற்பயிற்சி செய்வது ஆகியவைகளும் மூளை சுறுசுறுப்படைய உதவும்.
6. புதனோடு கேது சேர்க்கை பெற்று ஞாபக மறதி ஏற்பட்டால் ஞான காரகரான கேதுவின் அதிதேவதை வினாயகரை தியானித்து பின் படிக்க ஆரம்பித்தால் மறதி நீங்கும்.
7. படிக்க ஆரம்பிக்கும் முன் ச்யாமளா தண்டகம் மற்றும் சரஸ்வதி தியான ஸ்லோகங்களை படித்துவிட்டு பாடத்தை படிக்க ஆரம்பித்தால் படித்ததெல்லாம் மனதில் நிற்க்கும். மேலும் பொழுது போக்கு அம்சங்களில் கவனம் திசை திரும்பாமல் இருக்க பெரிதும் உதவும்.
வித்யாகாரகர் புதன் தான் ஜோதிடத்திற்க்கும் காரகர் என்பதால் சில மாணவர்களுக்கு தேர்வு நேரத்தில் திடீரென ஜோதிடத்தில் ஆர்வம் ஏற்பட்டு தாங்கள் வெற்றி பெற்றுவிடுவோமா என சிந்திக்க ஆரம்பித்துவிடுவார்கள். எனவே தேர்வு நேரத்தில் ஜோதிடத்தின் மீது நாட்டம் கொள்ளாமல் படிப்பின் மீது மட்டும் கவனத்தை செலுத்தி தன்னம்பிக்கையோடு படித்தால் புதபகவானின் அருளால் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெறுவது உறுதி. வாழ்த்துக்கள்!