அய்யாபுரம் சித்திரை திருவிழா - சப்பரத்தில் எழுந்தருளிய ஸ்ரீ முப்பிடாதி அம்மன்
நெல்லை மாவட்டம் தென்காசி அருகேயுள்ள அய்யாபுரம் தேவி ஸ்ரீ முப்பிடாதி அம்மன் கோவில் சித்திரை திரு விழா கடந்த 4-5-2018முதல் 9-5-2018 வரை சிறப்பாக நடைபெற்றது.
நெல்லை: அய்யாபுரம் தேவி ஸ்ரீ முப்பிடாதி அம்மன் கோவில் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. அலங்கார சப்பரத்தில் எழுந்தருளிய அன்னையை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
தென்காசி தாலுகா, குத்துக்கல்வலசை பஞ்சாயத்து அய்யாபுரத்தில் ஸ்ரீ முப்புடாதி அம்மன் கோவில் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக ஆண்டு தோறும் சித்திரை மாதம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு 4-5-2018முதல் 9-5-2018 வரை சித்திரை திருவிழா நடைபெற்றது. இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
அஷ்ட காளியரில் மூன்றாவதாக மூன்று தலைகளுடன் அவதரித்தவள் முப்பிடாதி. பிடரி என்றால் தலை என்று பொருள். மூன்று தலைகள் இருந்தமையால் முப்பிடரி என்று அழைக்கப்பட்ட இந்த அம்மன் பின்னர் முப்பிடாரி என்று அழைக்கப்படுகிறார் இந்த அம்மன். இதுவே மருவி முப்பிடாதி என்றானது. இந்த அம்மனுக்கான கோயில் நெல்லை, தூத்துக்குடி, குமரி, விருதுநகர் மாவட்டங்களில் அமைந்துள்ளன.
தென் மாவட்டங்களில் 'முப்பிடாதி’ என்ற பெயர் மிகப் பிரசித்தம். எண்ணற்றோருக்கு குலதெய்வமாகத் திகழும் இந்த அம்மன் முப்புரங்களையும் காத்ததால், முப்புராரி என்று அழைக்கப்படுகிறார். அதுவே பிறகு முப்புடாதி, முப்பிடாரி என்றும் மாறியதாகச் சொல்வர். இரும்பு, பொன், வெள்ளியாலான... அந்த அசுரர்களின் மூன்று கோட்டைகளுக்கும் காவலாக இருந்தவள் இந்த அம்மன் என்கிற ஒரு தகவல் உண்டு.
நெல்லைச் சீமையில் பல்வேறு பகுதியில் கோயில் கொண்டிருக்கும் இந்த அம்மனுக்கு, அந்தந்த பகுதிகளுக்கே உரிய தனிக்கதைகளும் உண்டு. முப்பெரும் சக்தி அன்னைகளான சரஸ்வதி, இலட்சுமி, பார்வதி எனும் தெய்வங்களை திருநெல்வேலி பகுதி மக்கள், தங்களுடைய பண்பாட்டிற்கு ஏற்ப முப்பிடாரி என்று பெயரிட்டு வணங்கி வருகிறார்கள்.
நெல்லையில் பல்வேறு பகுதியில் கோயில் கொண்டிருக்கும் இந்த அம்மனுக்கு, அந்தந்த பகுதிகளுக்கே உரிய தனிக்கதைகளும் உண்டு. அய்யாபுரத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் முப்பிடாதி அம்மனுக்கு சித்திரை திருவிழா கடந்த 4ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றது.
நெல்லை மாவட்டத்திலேயே ஐந்து நாள் சப்பர வீதி உலா நடைபெறும் சிறப்பு பெற்ற இந்த திருவிழாவின் கடைசி நாளான இன்று அம்மன் சப்பர வீதி உலாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் அங்கப்பிரதட்ஷனம் செய்து வழிபட்டனர்.
தொடர்ந்து நையாண்டி மேளம், கேரளா சிங்காரி மேளம், டிரம்ப் செட் வாத்தியங்கள் முழங்க இளைஞர்களில் சிலம்பாட்டத்துடன் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.இதில் சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று அம்மன் தரிசனம் பெற்று சென்றனர்.